7
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பணியாற்றிய மூன்று விமான ஊழியர்கள், ஒரு பயணி வழங்கிய மிட்டாய்களைச் சாப்பிட்டதன் பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் இந்தச் சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணி வழங்கிய மிட்டாய்களை விமானம் தரையிறங்கிய பிறகு விமான ஊழியர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்களுக்கு உடல்நலத்தில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்த மிட்டாய்களில் கஞ்சா கலந்திருந்தது தெரியவந்தது. விமான ஊழியர்களுக்கு இது குறித்து முன்பாக எந்தத் தகவலும் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. மேலும், கஞ்சா கலந்த மிட்டாய்களை வழங்கியதாக கூறப்படும் பயணியை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
விமான ஊழியர்கள், இந்த சம்பவத்தில் அறியாமலேயே மிட்டாய்களை எடுத்ததால், அவர்கள்மீது எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
