
ஆந்திராவில் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள பரிதலா, அதன் வைரங்களுக்காகப் பெயர்பெற்றது . ஆனால், அந்த கிராமத்திற்கு வைரங்களை விடவும் மிகவும் மதிப்புமிக்க ஒரு வரலாறு உள்ளது. அதுவே பரிதலா குடியரசாகும்.
இன்று இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக உள்ள இந்தச் சிறிய நகரம், ஒருகாலத்தில் பரிதலா குடியரசாக இருந்தது என்பதே தனிச்சிறப்பு.
இந்தப் பெயருக்குப் பின்னால், ஏழு சிறிய கிராமங்கள் ஒன்றிணைந்து ஒரு தனிநாடாக உருவான அபூர்வமான வரலாறு மறைந்து கிடக்கிறது.
இந்த கிராமங்கள், இந்தியா குடியரசாக மாறுவதற்கு முன்பே, குடியரசுகளாக இருந்தன.
குறுகிய காலத்திற்கு என்றாலும், ஒரு தனி நாடாக இருந்து வந்த இந்த கிராமத்தின் கதை மிகவும் சுவாரசியமான ஒன்றாக உள்ளது.
நிஜாமின் அரசாட்சியில் வைரங்களுக்காக…
ஆந்திராவில் தற்போது உள்ள கடற்கரை பகுதியாக உள்ள பெரும்பாலான பகுதி நிஜாம் மன்னர்களிடமிருந்து பிரிட்டிஷார் கட்டுப்பாட்டில் வந்தது.
1766 மற்றும் 1788 ஆண்டுகளில் ஆங்கிலேயர் மற்றும் நிஜாமுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் படி, பரிதலா தவிர மற்ற கடலோர பகுதிகளை நிஜாம் பிரிட்டிஷாரிடம் விட்டுக்கொடுத்தார். அதற்குப் பதிலாக, தெலங்கானாவில் உள்ள சூர்யாபெட் மாவட்ட பகுதிகளான அன்றைய முனகலா பர்கானா மற்றும் லிங்ககிரி பர்கானா ஆகிய பகுதிகளை பிரிட்டிஷாரிடம் நிஜாம் அளித்தார்.

இதனால் நிஜாம் ஆட்சி காலத்தில், அதைச் சுற்றிய பகுதிகள் பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளாக இருந்தன.
இரு பகுதிகளுக்கும் இடையில் நாகாக்கள் (சோதனைச் சாவடிகள்) இருந்தன. பரிதலா, மொகுலூரு, உஸ்தேப்பள்ளி, மல்லவள்ளி, பாதினபாடு, கனி அடுக்குரு மற்றும் கொடவாட்டிக்கல் ஆகிய ஏழு கிராமங்கள் ஒன்றாக இணைந்து ‘பரிதலா கானாத்’ என்று அழைக்கப்பட்டன (பெர்சிய மொழியில் கானாத் என்பது தாலுகா என்று குறிப்பிடப்படுகிறது).
நிஜாமின் அதிகாரிகள் பரிதலாவை மையமாகக் கொண்டு அலுவலகங்களை அமைத்து, இந்தப் பகுதியை நிர்வகித்தனர்.
1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி பரிதலாவைச் சுற்றிய பகுதிகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், பரிதலா மட்டும் நிஜாமின் ஆட்சியின் கீழ் தொடர்ந்தது. அது தவிர 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி நிஜாம் ஆட்சி செய்த மற்ற பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அதற்கு முன்பே, நிஜாமின் ஆட்சிக்கு எதிராக ‘பரிதலா கானாத்’ கிளர்ச்சி செய்து, 1947 நவம்பர் 15-ஆம் தேதி நிஜாமின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
விடுதலை பெற்ற உடனே, அவர்கள் தங்களை ஒரு தனி குடியரசாக அறிவித்தனர். அந்தப் பகுதியை ‘பரிதலா குடியரசு’ என்று பெயரிட்டு, தனி அரசியலமைப்பையும் உருவாக்கினர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற முறை எப்படி செயல்படுகிறது என்பதை பரிதலா மக்கள் பார்த்திருந்தனர். வாக்குரிமை இல்லாதது மற்றும் நிஜாமின் மதக் கொள்கைகள் மீது அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. அதே நேரத்தில், 1942-ஆம் ஆண்டு காந்தி தலைமையில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பிறகு, வட இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளுர் அரசு நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டன.
ஆந்திராவில் ஏற்கெனவே நடந்த ஒத்துழையாமை இயக்கம், சீராளா–பேராலா இயக்கம், பெடாநந்தபாடு வரிக்கு எதிரான போராட்டம், பர்லாகிமிடி போராட்டம் ஆகியவை பரிதலா மக்களைப் பாதித்தன. இதனால், 1946ஆம் ஆண்டிலேயே நிஜாமின் ஆட்சியிலிருந்து விரைவாக விடுபட வேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் அதிகரித்தது என்று கோடாட் பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் கிருஷ்ணசாகருபு உபேந்திரா பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர் பரிதலாவின் வரலாற்றை ஆய்வு செய்து, குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். பின்னர் அதனை நூலாகவும் வெளியிட்டார்.
அந்தக் காலத்தில் பரிதலாவில் நிஜாமின் அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் அத்துமீறல்களும், மக்களின் கிளர்ச்சிக்கான காரணமாக இருந்திருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்தார்.
பரிதலாவில் மக்களுக்கெதிரான அடக்குமுறை கடுமையாக இருந்தது. நிஜாமின் அரசில் வேலை செய்த லங்கா சுப்பையா சாஸ்திரி என்பவர், கனி அடுக்குரு மற்றும் பாதினபாடு பகுதிகளில் பல அத்துமீறல்களைச் செய்ததாக கூறப்படுகிறது.
அரசின் ஆதரவுடன் மக்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக, சிலர் அவரைக் கொன்றனர். குதிரையில் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஒரு குளத்தருகே அவர் தாக்கப்பட்டு, குதிரையுடன் இழுத்துச் செல்லப்பட்டு அந்தக் குளத்தில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
நிஜாம் அரசின் விசாரணையின் போது, ‘நாங்கள் அனைவரும் சேர்ந்து செய்தோம்’ என்று மக்கள் ஒருமித்து கூறியதால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மதிராஜு தேவராஜு, ஷேக் மௌலா, அவ்வா சத்தியநாராயணா போன்றவர்கள் மக்களை கிளர்ச்சிக்குத் தயார்படுத்தினர் என்று உபேந்திரா தெரிவித்தார்.
பட மூலாதாரம், Krishnasagarapu Upendra
காவல் நிலையம் மீது தாக்குதல்
1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 அல்லது 15 ஆம் தேதி , இந்தியா சுதந்திரம் பெற்ற மூன்று மாதங்களில், சில மக்கள் பரிதாலா காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
வரலாற்று ஆசிரியர் உபேந்திரா கூறும்போது காவல் நிலையம் மீது 1947 நவம்பர் 15 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறார். ஆனால் பரிதலாவில் உள்ள ஸ்தூபியில் உள்ள கல்வெட்டில் நவம்பர் 12 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கிராமத்துக்கு 3 பேர் வீதம், 21 மக்கள் அடங்கிய மத்திய கமிட்டி அமைக்கப்பட்டது. வழக்கறிஞர் அவ்வா சத்தியநாராயணா கிராமத்துக்கான சிறிய அரசியலமைப்பை எழுதினார்.
காவல் நிலையத் தாக்குதலில் கம்யூனிஸ்ட்களின் பங்கை குறிக்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு கிராமத்தில் ஒரு ஸ்தூபி கட்டப்பட்டது.
உபேந்திராவின் ஆய்வின் போது கிளர்ச்சியாளர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் யார் எந்த அளவுக்கு தீவிரமாக செயல்பட்டார்கள் என்பதை கண்டறிய இன்னும் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது.
பரிதலாவில் உள்ள ஸ்தூபி தகவலின் படி பாம்பே பிரசாத் என்கிற வீரமாச்சனேனி வெங்கடேஸ்வர ராவ், பேர்ணா ஸ்ரீராமமூர்த்தி, தொட்டபனேனி ராமராவ், வீரமாச்சனேனி வெங்கடேஸ்வர ராவ், மல்லேல நர்சய்யா, கூட்டம் நாகய்யா, சித்தி ராமுலு, முலாசா வீரய்யா, பெண்ணா ராதாகிருஷ்ணமூர்த்தி, குன்னம் ராமிரெட்டி, குர்ர வெங்கட நர்சய்யா மற்றும் பலர் காவல் நிலைய தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்கள் என ஸ்தூபியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிதலா ஸ்தூபியில் உள்ள பதிவுகளின்படி, கிளர்ச்சிக்குப் பிறகு அமைக்கப்பட்ட பரிதலா குடியரசின் முதல் மத்தியக் குழுவில் மதிராஜு தேவராஜு தலைவர் ஆகவும், மகாந்தி ராமகோட்டய்யா துணைத் தலைவர் ஆகவும், சிந்தலா அச்சையா சௌதரி செயலாளர் ஆகவும் இருந்தனர். சிந்தலபாட்டி விஸ்வநாதம், அவ்வா சத்தியநாராயணா, சிந்தா பாப்பையா, மன்னெம் கொட்டையா, வேலக ராமகிருஷ்ணய்யா, மதிராஜு நாகபூஷண் ராவ், பாண்டி வெங்கய்யா, அக்கினேனி ராமராவ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்தக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களின் ஒத்துழைப்பை கேட்டு வந்ததாக உபேந்திரா தெரிவித்துள்ளார்.
“என் சிறுவயதிலிருந்து, சுமார் 40–50 ஆண்டுகளாக மதிராஜு தேவராஜு காருவை நான் அறிவேன். அவர் சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தக் கிராமத்தின் தலைவராக இருந்தார் என்பது எனக்குத் தெரியும்,”
“இப்போது பரிதலா உயர்நிலைப் பள்ளி இருக்கும் இடத்தில், என் சிறுவயதில் ஒரு மருத்துவமனை இருந்தது. அதற்கு முன்பு, அங்கு நிஜாம் அரசின் அலுவலகங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. அது கல்லால் கட்டப்பட்ட கட்டடம். எங்கள் கிராமத்தில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தனர்” என்று கிராமத்தைச் சேர்ந்த அத்தலூரி நரசிம்ம ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Krishnasagarapu Upendra
தேசிய தலைமையின் ஆதரவு
இந்த எழுச்சி திடீரென நடந்ததல்ல. உள்ளூர் மக்கள் இதற்காக முறையாகத் திட்டமிட்டிருந்தனர்.
சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ராமச்சந்திரன் என்ற தமிழர், பரிதலா இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அழைத்து வரப்பட்டதாக உபேந்திரா கூறுகிறார்.
இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள கூடுதல் படைகளை அனுப்புமாறு, உள்ளூர் அதிகாரிகள் நிஜாமின் அரசுக்கு தகவல் அனுப்பினர். ஆனால், அந்தப் படைகள் மெட்ராஸ் மாநிலத்தின் இந்தியப் பகுதிகளைக் கடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வலுவடைந்தனர். தேசிய காங்கிரஸ் தலைமையும், மெட்ராஸ் மாநில அரசும் வழங்கிய ஆதரவுடன், நிஜாமின் படைகள் பரிதலாவுக்கு வருவதை கிளர்ச்சியாளர்களால் தடுக்க முடிந்தது, என்று உபேந்திரா தெரிவித்துள்ளார்.
கூடுதல் படைகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டன. இதன் மூலம் பரிதலா மக்களின் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நிஜாம் ஆட்சியில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பெசவாடா காங்கிரஸ் கமிட்டி மூலம், டங்குடூரி பிரகாசம் பந்துலு மற்றும் பேசவாடா கோபால ரெட்டி போன்றவர்கள் பரிதலாவில் போராடியவர்களுடன் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் உருவாக்கவிருந்த குடியரசுக்கு மேல்மட்ட தலைமையின் ஆதரவைப் பெறுவதற்காக, ஆரம்பத்திலிருந்தே டெல்லியுடன் தொடர்பில் இருந்து வந்தனர். காந்தி மற்றும் நேருவிடம் தூதர்களையும் அனுப்பினர்.
இந்த இயக்கம் குறித்து அறிந்த பிறகு, ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் அருணா ஆசஃப் அலி ஆகியோர் நேரில் பரிதலாவுக்கு வந்தனர். ஹைதராபாத் மாநில காங்கிரஸின் நிறுவனர் ராமானந்த தீர்த்தா மற்றும் ஹயக்ரீவாச்சாரி ஆகியோரும் சில காலம் பரிதலாவில் தங்கியிருந்தனர்.
அதே நேரத்தில், நாட்டின் சுதந்திரத்துடன் இணைந்து, ஹைதராபாத் சமஸ்தானம் எப்படியாவது இந்தியாவுடன் இணையும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
திரைமறைவில், தேசிய காங்கிரஸும் பெசவாடா காங்கிரஸும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பரிதலா குடியரசுக்கு ஆதரவு வழங்கி வந்தன. இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த ராமச்சந்திரனை பயிற்சிக்காக அழைத்து வருவதற்கும் பெசவாடா காங்கிரஸே உதவியதாக கூறப்படுகிறது.
“ஒவ்வொரு மாதமும் பெசவாடா காங்கிரஸ் கமிட்டியிலிருந்து கடிதங்கள் வந்தன. எப்படி நடக்கிறது? ஏதேனும் உதவி வேண்டுமா என்று அவற்றில் எழுதி அனுப்புவார்கள் . அவர்கள் அரசியல் ரீதியாகச் செயல்பட்டதால், அந்தப் புரிதல் இருந்தது,” என்று உபேந்திரா கூறுகிறார்.
காந்தியிடம் தூதரை அனுப்பியபோது, அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது என்று உபேந்திரா விளக்கினார்.
பட மூலாதாரம், Krishnasagarapu Upendra
பரிதலா – வாராங்கல் – ஒஸ்மானியா தொடர்பு
1938 ஆம் ஆண்டு ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடந்த ‘வந்தே மாதரம்’ இயக்கத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் பரிதலாவைச் சேர்ந்தவர்களாக இருந்தது, இந்தக் கிராமத்தில் உருவான கிளர்ச்சி மனப்பான்மைக்கு ஊக்கமளித்திருக்கலாம் என உபேந்திரா மதிப்பிடுகிறார்.
“இந்த கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்ததாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில், முஸ்லிம்கள், தலித்கள் உள்ளிட்ட பிற சாதிகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்,” என்று உபேந்திரா கூறினார்.
புவியியல் ரீதியாக கிருஷ்ணா மாவட்டத்தின் நடுப்பகுதியில் இருந்தாலும், பரிதலா மக்களில் பலருக்கு வாராங்கலுடன் நெருக்கமான தொடர்புகள் இருந்தன. பரிதலாவைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் வாராங்கலுக்கு இடம்பெயர்ந்து அங்கு குடியேறினர்.
அதன் விளைவாக, வாராங்கலில் குடியேறியிருந்த அவ்வா சத்தியநாராயணா மீண்டும் பரிதலாவுக்கு திரும்பினார். அவர் எழுதிய பரிதலா அரசியலமைப்பு மிகவும் சுருக்கமானதும், எளிமையானதுமாக இருந்தது.
இந்த விவகாரத்தில் முழுமையாக மதிராஜு தேவராஜு முக்கியமாகக் காணப்பட்டாலும், திரைமறைவில் அமைச்சரவை, பிற அரசுகள் மற்றும் தேசிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவ்வா சத்தியநாராயணா முக்கிய பங்கு வகித்தார் என்பது தெளிவாகிறது என்று உபேந்திரா தெரிவித்துள்ளார் .
நிஜாம்படைகளுக்கு எதிராக எவரை அணுக வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் கவனமாக அறிந்திருந்தார் சத்தியநாராயணா. அதே நேரத்தில், உள்ளூர் அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்வாக்குடைய மதிராஜு தேவராஜுவிடமிருந்து அவர் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.

மொத்த தெலங்கானாவுடன் ஒப்பிடும்போது, இந்தப் பகுதி நிஜாமின் ஆட்சியிலிருந்து சற்றே முன்பாகவே விடுதலை பெற்றது. ‘பரிதலா குடியரசு’ என்ற இந்த நாடு 1947 நவம்பர் 15 முதல் 1950 ஜனவரி 26 வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்த பிறகு, அப்போது ராணுவ நிர்வாகத்தை நடத்தி வந்த ஜே.என். சௌத்ரியுடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
திறமையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதுகாப்புக்கும் நலத்திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.
“சாதி, மத பேதமின்றி அவர்கள் தன்னலமின்றி செயல்பட்டனர். உதாரணமாக, தேசியக் கொடியை ஏற்றக்கூடாது என்று நிஜாமின் அரசு உத்தரவிட்டிருந்த போதிலும், ஷேக் மௌலா தானே கொடியை எடுத்துக் கொண்டு, முழு கிராமத்தையும் சுற்றி வந்து, ஒரு மரத்தில் அதை கட்டினார்,” என்று உபேந்திரா விளக்கினார்.

தெலங்கானாவிலிருந்து ஆந்திராவுக்கு (அப்போது ஹைதராபாத் டூ மெட்ராஸ்)
1950 ஆம் ஆண்டு, உஸ்தேப்பள்ளி, கொடவாட்டிக்கல்லு, பரிதாலா, மொகுலூரு, பாதினபாடு, கொனுகுபாடு, புரவஞ்சா, மல்லப்பள்ளி மற்றும் புள்ளபாடு ஆகிய ஒன்பது கிராமங்கள், அப்போது ஹைதராபாத் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, மதராஸ் மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் பிரசாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலாக, லிங்ககிரி, சர்பவரம், கலவப்பள்ளி, லக்கவரம், அமராவரம், கணகலந்தா, முலுகுமடா, ரொம்பிமல்லா மற்றும் மல்லவரம் ஆகிய நல்கொண்டா அருகிலுள்ள கிராமங்கள், மெட்ராஸ் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஹைதராபாத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு