இன்று கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்: பேருந்து இயக்கத்தின்போது கதவை பேருந்து நிறுத்தம் வந்த பிறகு திறக்க வேண்டும். கதவை மூடிய பின் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வர கூறி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பின் பேருந்தை இயக்க வேண்டும்.
மீண்டும் மாணவர்கள் தொடர்ந்து படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிறுத்தி காவல் அவசர அழைப்பு (100) எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நடத்துனர்கள் பேருந்து இயக்கத்தின்போது இரண்டு பேருந்து கதவுகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து கதவுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூட முடியாமல் இருந்தால் கதவை பணிமனையில் சரிசெய்து பின் தடத்தில் இயக்க வேண்டும்.
மாணவர்கள் பேருந்து எதிரே ஓடி வந்து பேருந்தில் ஏற முயற்சித்தால் பேருந்தின் வேகத்தை குறைத்து மாணவர்களை பேருந்தில் ஏற்றிச் செல்ல வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.