படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி (கோப்புப் படம்)
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது மற்றொருவர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தியாவின் மேற்கு எல்லையோரப் பகுதிகளை பாகிஸ்தான் தாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இந்திய ராணுவத்தின் கூடுதல் பொதுத் தகவல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று அதிகாலை 5 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் மீது பல ஆயுதமேந்திய ட்ரோன்கள் பறந்து செல்வது காணப்பட்டது. எங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடித்தது,” என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகேயுள்ள விமானப்படைத் தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
தனது 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதற்குப் பதிலடியாக ராணுவ தாக்குதலை தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா?
பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
தனது 3 ராணுவ விமான தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சியில் பேசும்போது, இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உரிய வகையில் “பதிலளிக்கும்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். நாட்டின் படைகள் ‘முழுமையாக தயாராக’ இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறும் விமானப்படைத் தளங்களில் ஒன்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் ஆகும்.
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை.
பட மூலாதாரம், Getty Images
பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தகவல்
இந்தியா மீது பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது
பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை ஆகியவை இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையான ஐஎஸ்பிஆரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இந்த பதிலடி நடவடிக்கையை ‘ஆபரேஷன் பன்யன் மார்ஸ்’ என்று பெயரிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை.
படக்குறிப்பு, ஜம்மு நகரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்முவின் ரெஹாரி காலனியில் தாக்குதல்
ஜம்மு நகரத்தின் ரெஹாரி காலனி மீது நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்து போனதாகவும் உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று மக்கள் கூறினர்.
உள்ளூர்வாசி ராகேஷ் குப்தா கூறுகையில், “ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது. எங்கும் பயம் மற்றும் பீதி நிறைந்த சூழல் நிலவியது. பாகிஸ்தான் ஏன் சாதாரண மக்களைத் தாக்குகிறது?” என்றார்.
படக்குறிப்பு, பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ரெஹாரி காலனியில் வாகனங்கள் சேதமடைந்தன.
பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, சிலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபிசி குழு அங்கு இருந்தபோது ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் போர் விமானங்கள் மேலே பறக்கத் தொடங்கிய போது அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதால், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
பாக். தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அதிகாரி ஒருவர் பலி – உமர் அப்துல்லா
பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “ராஜௌரியில் இருந்து சோகமான செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவையின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று அவர் துணை முதல்வருடன் மாவட்டத்தில் இருந்தார். எனது தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்,” என்று பதிவிட்டுள்ளார்.
ராஜௌரி மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக உமர் அப்துல்லா கூறினார்.
“இன்று பாகிஸ்தான் ராஜௌரி நகரத்தை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியது. இதன் போது, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபாவின் வீடு குறிவைக்கப்பட்டு, தாக்குதலில் அவர் இறந்தார்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காணொளிக் குறிப்பு, 32 விமான நிலையங்கள் மூடல்… 26 இடங்களில் டிரோன் தாக்குதலா? இரவு நடந்தது என்ன?