பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்திருக்கிறது இந்தியா.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானை எட்டாவது முறையாக இந்தியா வீழ்த்தியிருக்கிறது.
61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்றிருக்கும் இந்த வெற்றி தான் இந்தியா vs பாகிஸ்தான் டி20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றி.
போட்டி நடந்த கொழும்பு பிரமதேசா மைதானம் பெரியது. அந்த ஆடுகளமும் பேட்டிங் செய்ய மிகவும் கடினமானதாகக் கருதப்பட்டது.
போட்டியில் பேட்டர்கள் கஷ்டப்பட்டதையும் பார்க்க முடிந்தது. 160 ரன்கள் எடுத்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று பலரும் நிலையில் இந்திய அணி 175 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இந்தியா பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார்.
அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தானால் முழு இன்னிங்ஸிலும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பைக் கூட உருவாக்க முடியவில்லை.
பாகிஸ்தான் அணி 18 ஓவர்களுக்கு சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்த, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களோ முதலிரு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் அந்த அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவின் இந்த செயல்பாடு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரும் பத்திரிகையாளருமான பகவதி பிரசாத் உடன் உரையாடியிருந்தேன்.
இந்த போட்டியில் இந்தியாவின் செயல்பாடு உணர்த்திய சில விஷயங்கள் குறித்து அமைந்திருந்தது அந்த உரையாடல்.

கேள்வி: இந்த போட்டியில் கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீரர்களுமே சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்தார்கள். ஆனால், இஷான் கிஷன் தனி ஆளாக ஆட்டத்தை வென்றுகொடுத்தார் என்று சொல்லலாமா?
பதில்: 1996 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அஜய் ஜடேஜா ஒரு அசத்தலான இன்னிங்ஸ் ஆடுவார் (25 பந்துகளில் 45 ரன்கள்). அதேபோல், 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் – சேவாக் ஜோடி ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடியிருப்பார்கள். இதெல்லாம் 90’ஸ் கிட்ஸ்களுக்கே உரித்தான தருணங்கள். இஷான் கிஷன் ஆடியதை நான் அதுபோன்ற ஓர் இன்னிங்ஸ் என்று சொல்வேன்.
ஆட்டத்தைப் பற்றிய அவரது விழிப்புணர்வுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுக்கவேண்டும். அபிஷேக் ஷர்மாவை சல்மான் அகா வெளியேற்ற, இந்தப் போட்டியின் முதல் அடியை வைத்தது பாகிஸ்தான். அதன்பிறகு அவர் கவுன்ட்டர் அட்டாக் செய்கிறார். இரண்டாவது ஓவரில் பாகிஸ்தான் அணியின் சிறந்த பௌலர் களத்துக்கு வருகிறார். அவரை டார்கெட் செய்து அதிரடி காட்டுகிறார் இஷான்.
அதேபோல் இந்திய அணி பவர்பிளேவில் 52/1 என்ற ஸ்கோரில் முடிக்கிறது. இந்த ஆடுகளத்துக்கு அது மிகவும் நல்ல தொடக்கம். அடுத்த 2 ஓவர்களிலுமே இந்தியா 30 ரன்கள் எடுத்தது.
பொதுவாக டி20 போட்டிகளில் பவர்பிளேவுக்குப் பிறகான ஒரு சில ஓவர்களை பேட்டிங் அணிகள் சற்று டிஃபன்ஸிவாகவே எதிர்கொள்ளும். ஆனால், இந்தியா அந்த இடத்திலும் அவ்விரு ஓவர்களிலும் அதிரடி காட்டி 30 ரன்கள் எடுத்துவிட்டது.
‘பவர்பிளே முடிந்துவிட்டது ஒரு 2 ஓவர்களை அப்படியே அமைதியாக முடித்துவிடலாம்’ என்று நினைத்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா லெக் ஸ்பின்னர்கள் அப்ரார் அஹமது மற்றும் சதாப் கான் ஆகியோரை பந்துவீச வைத்திருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு பாதகமாக மாறிவிட்டது. இஷான் கிஷன் பௌலர்களை சரியாகத் தேர்வு செய்து ரன்களை சேர்த்தார்.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி: பௌலர்களை மட்டுமல்லாது, பந்தில் ‘லைன்’-ஐ கூட இஷான் மிகவும் சரியாகக் கணித்து ஆடினார் அல்லவா. எட்டாவது ஓவர் முடிவில் ஒரு ‘ஸ்டேட்’ காட்டப்பட்டது: ‘ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளுக்கு எதிராக இஷான் நேற்று வைத்திருந்த ஸ்டிரைக் ரேட் 120. அதுவே லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளில் அது 257 ஆக இருந்தது’. சயிம் அயூப் ‘அரௌண்ட் தி ஸ்டம்ப்’ வந்து ‘angle’ ஏற்படுத்தி ஸ்டம்ப் லைனில் பந்துவீசியபோது இஷான் பெரிதாக ஷாட்கள் ஆடவில்லை. அதேசமயம் அப்ரார் நன்கு தூக்கி வெளியே வீசியபோது ‘வித் தி ஸ்பின்’ பந்தை விளாசினார். இது வெறும் கண்மூடித்தனமான அதிரடி இன்னிங்ஸ் அல்ல, இதுவொரு கணித்து ஆடப்பட்ட இன்னிங்ஸ் என்று இது சொல்கிறதல்லவா?
பதில்: நிச்சயமாக. அதனால்தான் அவருடைய ஆட்ட விழிப்புணர்வை நான் ஆரம்பத்தில் இருந்து பாராட்டுகிறேன். ‘வித் தி ஸ்பின்’ அடிப்பது என்பது ஒரு கலை. இன்னொரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த மைதானம் மிகவும் பெரியது. பவுண்டரி எல்லைகள் 80 மீட்டருக்கும் மேல் இருந்தன. சூர்யகுமார் அவுட் ஆன பந்தைக்கூட எடுத்துக்கொள்ளுங்கள்… பலரும் அது சிக்ஸர் என்றே நினைத்திருப்போம். ஆனால், அவர் கேட்ச் ஆனார்.
நீங்கள் பெரிய பவுண்டரிகளை டார்கெட் செய்து அடிக்கும்போது மிகவும் விவேகமாக விளையாடவேண்டும். எந்த பந்தை தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியம். அந்த ஷாட்டை நடைமுறைப்படுத்துவது மிக மிக முக்கியம். ஒரு நல்ல ஷாட்டே கூட பெரிய ஆடுகளங்களில், பவுண்டரிக்கு சில மீட்டர் முன்னாள் கேட்ச் ஆகக்கூடும்.
ஜிம்பாப்வே – ஆஸ்திரேலியா போட்டி இந்த மைதானத்தில்தான் நடந்தது. ஜிம்பாப்வே இதுபோன்ற பெரிய பவுண்டரிகளில் தான் ஆஸ்திரேலியாவை மடக்கியது. அதை ‘Big Pockets’ என்பார்கள். இஷான் இப்படியான இடங்களைத்தான் டார்கெட் செய்து அடித்தார். ஷஹீன் அஃப்ரிக்கு எதிராக புல் ஷாட்டாக இருக்கட்டும், அவர் அடித்த ஸ்வீப்கள் ஆகட்டும் அந்த ஷாட்களை சரியாக அடித்தார்.
இதில் முக்கியமான ஒரு விஷயம் அவர் அந்த ஷாட்கள் ஆடும்போது தன்னுடைய ‘shape’-ஐ தவறவிடவில்லை. அதுமட்டுமல்லாமல், ஏழாவது ஓவரில் பார்த்தீர்களென்றால் அவர் அதில் 3 பவுண்டரிகள் அடித்தார். நேராக ஒன்றை அடித்தார், கவர் ஃபீல்டர் தலைக்கு மேல் ஒன்றை அடித்தார்… இப்படி அந்த பந்துக்கு ஏற்றதுபோல் அவர் எதிர்விணையாற்றினாரே தவிர அவர் அதிகமாக எதுவும் முயற்சி செய்யவில்லை.
இந்தியா சுமார் 70 மீட்டர் பவுண்டரிகள் கொண்ட மைதானங்களிலேயே ஆடிக்கொண்டிருந்துவிட்டு, இப்படியொரு மைதானத்துக்கு வந்திருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

கேள்வி: தொடக்கம் எப்படி சிறப்பாக இருந்ததோ அதுபோல் ஃபினிஷிங்கும் இந்தியாவுக்கு நன்றாக இருந்தது. ரிங்கு, துபேவின் சிறிய பங்களிப்பு போட்டியில் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது அல்லவா?
பதில்: நிச்சயமாக. ரிங்குவை ஒருகட்டத்தில் மறந்தே போயிருந்தோம். அவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்ததற்கு தேர்வுக்குழுவைப் பாராட்டியாகவேண்டும். அவர் களமிறங்கிய சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள். 4 பந்துகள் தான் ஆடவேண்டும். ஷஹீன் அஃப்ரிடி போன்ற ஒரு பௌலர் பந்துவீசுகிறார். அதில் அவர் சோபிக்கவேண்டும். பொதுவாகவே ஃபினிஷர் ரோலில் ஆடுபவர்களுக்கே இருக்கும் நெருக்கடி இது.
இதுபோன்ற வீரர்கள் சில சமயங்களில் பெரிய பங்களிப்பே கொடுக்காததுபோல் இருக்கும். 8,10 ரன்களே அடித்திருப்பார்கள். ஆனால், அது இரண்டு அல்லது மூன்று பந்துகளில் வந்திருக்கும். அதுவே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடு தான். இந்தப் போட்டியில் துபே (17 பந்துகளில் 27 ரன்கள்), ரிங்கு (4 பந்துகளில் 11 ரன்கள்) இருவரும் அதைச் சிறப்பாக செய்தார்கள்.
கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் பௌலர்கள் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, இவர்களின் ஆட்டம் இந்தியாவின் பக்கம் ‘momentum’-ஐ கொண்டு வந்தது. அது மிகவும் முக்கியமான விஷயம். அதே உத்வேகத்தில் வந்த இந்தியா பந்துவீச்சிலும் கலக்கியது. அதனால், துபே, ரிங்கு இருவரின் பங்களிப்புமே அளப்பரியது.
கேள்வி: இரு கேப்டன்களின் முடிவுமே கூட இந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்தியது அல்லவா? குறிப்பாக பௌலிங் மாற்றங்கள், பௌலிங் தேர்வுகள்…
பதில்: ஒருசில தருணங்களில் சில கேப்டன்கள் முன்கூட்டிய தீட்டிய திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படுவார்கள். எப்படியும் கடைசி ஓவரை ஷஹீன் அஃப்ரிடி தான் வீசுவார் என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். அந்த இடத்தில் சல்மான் அகாவே பந்துவீசியிருக்கலாம் என்று நான் சொல்வேன். அவர் நன்றாகப் பந்துவீசியிருந்தார். அப்படி ஒரு ‘ரிஸ்க்’ அவர் எடுத்துப் பார்த்திருக்கலாம். அங்கு சுமார் 10 -15 ரன்கள் குறைவாக வந்திருந்தால், அது ஆட்டத்தில் வேறு மாதிரியான தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்.
அதேசமயம் இந்தியாவைப் பொறுத்தவரை, என்னதான் போட்டியில் ஸ்பின் நன்றாக கைகொடுத்தாலும், சூர்யகுமார் யாதவ் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்தே ஆட்டத்தைத் தொடங்கினார். முக்கியமாக அவர்கள் ‘ஹார்ட் லென்த்’ எனப்படும் லென்த்தில் சீராகப் பந்துவீசினார்கள். அந்தப் பந்துகள் இடுப்பு, மார்பு அளவுக்கு பௌன்ஸ் ஆகி வரும். அது பாகிஸ்தான் பேட்டர்களுக்கு சவாலாக விளங்கியது. ஜிம்பாப்வே – ஆஸ்திரேலியா போட்டியில் அதுவே நடந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதை சரியாக செயல்படுத்தினார்கள்.
இந்திய கேப்டன் சூர்யாவும் தன் பௌலர்கள் மீது நம்பிக்கை வைத்து முதல் 4 ஓவர்களும் அவர்களையே பயன்படுத்தினார். சூழ்நிலை எப்படியாக இருந்தாலும், தன் பௌலர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை அது காட்டியது. அது போட்டியில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி: இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் விதம், ஐசிசி போட்டிகளில் இந்த அணி செய்யும் பெரும் ஆதிக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறதல்லவா? எந்த சூழ்நிலைக்கும் தாங்கள் எழுச்சி பெறுவோம் என்று இது உணர்த்துகிறது அல்லவா?
பதில்: கடைசி 4 ஐசிசி தொடர்களில் (2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்த 2026 டி20 உலகக் கோப்பை) இந்திய அணி ஆடிய 27 போட்டிகளில் 26 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.
2000களின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை நான் கவனித்திருக்கிறேன். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து எழுச்சி காண்பார்கள். 2003 உலகக் கோப்பையில் ஒரு போட்டி நன்கு ஞாபகம் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக அந்த அணி 84/7 என்ற நிலையில் இருக்கும். அதன்பிறகு மைக்கெல் பெவன், ஏண்டி பிக்கெல் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை 208 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் செல்வார்கள். ஆனால், சிறப்பம்சம் என்னவெனில் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 96 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்கும். மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள். இதுதான் மாபெரும் அணிகளுக்கு இருக்கும் பண்பு. இந்த இந்திய அணி அதைக் கொண்டிருக்கிறது.
எப்படி அந்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் வாஹிலிருந்து ரிக்கி பான்டிங் கைக்கு வந்து அந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்ததோ அதேபோல் இந்த இந்திய அணியும் ரோஹித்திடமிருந்து சூர்யா கைக்கு மாறியும் அந்த ஆதிக்கத்தைத் தொடர்கிறது.
இதற்கெல்லாம் நான் தொடக்கமாகப் பார்ப்பது 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தான். இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. ரோஹித் இனி அதிரடி தான் தன் பாணி என்று 2023 உலகக் கோப்பையில் ஆரம்பித்தார். அதை இந்த அணி அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

கேள்வி: இந்திய அணி இந்தப் போட்டியில் பெரும் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் இன்னும் கூடுதல் கவனம் தேவையோ என்று தோன்றுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா 4 கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டிருக்கிறது. அது ஏன் கேள்வியாகிறதெனில், முதல் இரண்டு ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுகள் எடுத்துவிட்டது. இந்தப் போட்டியில் பெரும் நெருக்கடி இல்லை. அப்படி நெருக்கடி இல்லாத போட்டியில் 4 கேட்ச்களைத் தவறவிடுவது என்பது சற்று மோசமான விஷயம் தானே?
பதில்: சரிதான். நம்பர்கள் வைத்துப் பார்க்கும்போது இது ஆதிக்கம் செலுத்தப்பட்ட போட்டிதான். ஆனால், முழுமையான செயல்பாடா என்று யோசிக்கும்போது இங்கே அந்த கேள்வி எழுகிறது. திலக் வர்மா முதலில் உஸ்மான் கான் வாய்ப்பைத் தவறவிட்டார். அது மிகவும் கடினமான வாய்ப்பு. திலக் தவறவிட்ட இரு வாய்ப்புகளுமே கடினமானவை. இஷான் கிஷன் கேட்ச் விடும்போது ஹர்திக் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்த பந்தே குல்தீப் கேட்ச் டிராப் செய்து சிக்ஸர் போனது.
இதுபோன்ற சூழ்நிலையில் ஃபீல்டிங்குமே சவாலான விஷயம் தான். பெரிய பவுண்டரி என்பதால் நீங்கள் ‘angles cut’ செய்வது, அதிக தூரம் கடப்பது போன்றவை சற்று சவாலானாவை. ஏனெனில், இப்போதுதான் இந்தியா அங்கே சென்றிருக்கிறது. குறைவான நேரமே அங்கு பயிற்சி செய்திருக்கிறார்கள். சில மைதானங்களில் விளக்குகளுமே வித்தியாசமாக இருக்கும். அதுவும் இரவு நேரங்களில் ஃபீல்டிங் செய்வதற்கு சவாலாக அமையும். இப்படியான பல விஷயங்கள் இருக்கின்றன.
இருந்தாலும், இந்தியா போன்ற ஒரு அணியிடம் இந்த சாக்குகளை ஏற்க முடியாது. ஒரு இடத்தில் அவர்கள் முன்னேற்றம் காணவேண்டும் என்றால் அது ஃபீல்டிங் என்று சொல்லலாம். இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்று பார்த்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் இதுபற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள். நிச்சயம் இதில் முன்னேற்றமும் ஏற்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு