• Tue. Feb 17th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் மேலோங்கும் இந்தியாவின் கை

Byadmin

Feb 17, 2026


பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா 61 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் ஏ குழுவிலிருந்து முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட இந்தியா தகுதிபெற்றுக்கொண்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியாவின் கை மேலோங்கியிருப்பதை இன்றைய வெற்றி மீண்டும் உறுதிப் படுத்தியது.

பாகிஸ்தானுடன் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்பது தடவைககள் நேருக்கு நேர் விளையாடிய இந்தியா இன்று தனது 8ஆவது வெற்றியை ஈட்டியது.

அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய வெற்றியுடன் 17 – 3 ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இப் போட்டியைக் கண்டுகளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும். இந்திய அணியினரின் துடுப்பாட்டம் நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரும்பிவிட்டார்.

இப் போட்டிக்கான நாணய சுழற்சியின்போது இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அகா அலி ஆகியோருக்கு இடையில் கைகலுக்கல் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

அபிஷேக் ஷர்மா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தபோதிலும் இஷான் கிஷான் தனது அதிரடியின் மூலம் ரசிசர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றார்.

இஷான் கிஷான் தனது அரைச் சதத்தை 27 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் பூர்த்திசெய்தார்.

மொத்த எண்ணிககை 88 ஓட்டங்களாக இருந்தபோது சய்ம் அயூபின் பந்துவீச்சில் இஷான் கிஷான் போல்ட் ஆனார்.

இஷான் கிஷான் 40 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைக் குவித்ததுடன் இரண்டாவது விக்கெட்டில் திலக் வர்மாவுடன் 46 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தபோது திலக் வர்மா (25), ஹார்திக் பாண்டியா (0) ஆகிய இருவரும் சய்ம் அயூபின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இருபதாவது ஓவரில் கஷிவம் டுபே (27) ரன் அவுட் ஆனதுடன் கடைசிப் பந்தில் அக்சார் பட்டேல் ஓட்டம் பெறாமல் வெளியேறினார்.

ரின்கு சிங் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சய்ம் அயூப் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் துடுப்பாட்ட வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை புரிந்துகொள்ளமுடியாமல் மோசமான அடி தெரிவுகள், நிதானம் இன்மை, பதற்றம் ஆகியவற்றினால் விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட எட்டக்கூடிய 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

நான்கு வீரர்களைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

உஸ்மான் கான் மாத்திரமே பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட ஷஹீன் ஷா அப்றிடி ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும், ஷதாப் கான் 14 ஓட்டங்களையும் பாஹீம் அஷ்ரப் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் அக்சார் பட்டேல் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்a.

ஆட்டநாயகன்: இஷான் கிஷான்.

By admin