படக்குறிப்பு, கொலம்பியாவிற்கு பயணம் செய்த அனைத்துக் கட்சிக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்கினார்.
பாகிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான தனது அறிக்கையை கொலம்பியா அரசு திரும்பப் பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் பார்வையை தெளிவுபடுத்த சசி தரூர் தலைமையிலான ஒரு குழு அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (மே 30), கொலம்பியாவில் இருந்த அந்தக் குழு, அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிற பிரதிநிதிகளைச் சந்தித்தது.
“ஒரு அறிக்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. அதை திரும்பப் பெறுவதாகவும், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கொலம்பியா முழுமையாகப் புரிந்துகொண்டதாகவும் அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்,” என்று தரூர் கூறினார் .
கொலம்பிய வெளியுறவு அமைச்சகம் மே 8-ஆம் தேதி பாகிஸ்தான் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உள்ளூர் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என இந்தியா கூறியது. இதன் பின்னர், மே 7 அன்று, பாகிஸ்தானுக்குள் பல இடங்களில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதை விட, இந்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பிய அரசாங்கத்தின் அறிக்கையால் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளோம்,” என்று கூறியிருந்தார்.
“அந்த அறிக்கை வெளியிடப்பட்ட சமயத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நிலைமை குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று சசி தரூர் கூறினார்.
சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, கொலம்பியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் முன் இந்தியாவின் கருத்தை முன்வைத்தது.
சசி தரூர் கூறியது என்ன?
பட மூலாதாரம், @ShashiTharoor
படக்குறிப்பு, காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
கொலம்பிய வெளியுறவு அமைச்சக துணை அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ முன்னிலையில், ‘அறிக்கை திரும்பப் பெறப்பட்டது’ குறித்து சசி தரூர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“நாங்கள் கவலை தெரிவித்த அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றதாக துணை அமைச்சர் (ரோசா யோலண்டா) எங்களுக்குத் தெரிவித்துள்ளார். கொலம்பியா இந்தியாவின் கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்கிறது. நாங்கள் அதை மிகவும் மதிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
“எங்களுக்குக் கிடைத்த தெளிவுபடுத்தல்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் உண்மையான நிலைமை, மோதல்கள் மற்றும் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எங்களிடம் உள்ள விரிவான தகவல்களின் அடிப்படையில், பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ரோசா யோலண்டா கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
“எங்கள் நாட்டின் இறையாண்மைக்காகவும், இந்திய துணைக்கண்டம் மற்றும் உலக அமைதிக்காகவும், கொலம்பியாவின் பிரதிநிதியாக எங்களுடன் நீங்கள் உறுதியாக நிற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் சசிதரூர் கூறினார்.
சசி தரூரின் அறிக்கைக்குப் பிறகு, இது இந்தியாவின் ராஜீய வெற்றியாக சமூக ஊடகங்களில் விவரிக்கப்படுகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து தரூர் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1960ல் இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் பயணத்தின் போது, தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானிடமிருந்து திருப்திகரமான ஒரு சமிக்ஞை கிடைக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று சசி தரூர் கூறினார்.
“சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது 1960களின் முற்பகுதியில் நன்மதிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் இந்தியா செய்து கொண்ட ஒரு ஒப்பந்தமாகும். இந்த வார்த்தைகள் (நன்மதிப்பு மற்றும் நல்லிணக்கம்) ஒப்பந்தத்தின் முன்னுரையில் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கடந்த நாற்பது ஆண்டுகளாக பயங்கரவாத நடவடிக்கைகளால் அந்த நன்மதிப்பிற்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
“பயங்கரவாதம் மற்றும் போர் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால் இந்த முறை இந்திய அரசாங்கம் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஒப்பந்தத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நல்லிணக்கம் என்ற அடிப்படையில் செயல்படத் தயாராக உள்ளதாக பாகிஸ்தானிடமிருந்து திருப்திகரமான ஒரு பதில் கிடைக்கும் வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
“ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, இதுவரை இந்தியா ஒரு தாராள மனம் கொண்ட அண்டை நாடாகவே இருந்தது. ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு உரிமையுள்ள தண்ணீரை நாங்கள் மிகவும் தாராளமாக வழங்கி வந்தோம். ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு உரிமையான தண்ணீரைக் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பது என்பது இனி எங்கள் கைகளில் இல்லை,” என்று அவர் கூறினார்.
கொலம்பியா பாகிஸ்தானை ஆதரித்தது ஏன்?
பட மூலாதாரம், FLORENCE LO/POOL/AFP via Getty Images
படக்குறிப்பு, இந்த ஆண்டு மே 13 அன்று பெய்ஜிங்கில் நடந்த சீன-லத்தீன் அமெரிக்க மன்றக் கூட்டத்தில் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (வலது ஓரம்)
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் பாகிஸ்தானின் பக்கம் சாய்வதாக கொலம்பியா முன்பு கூறியதற்கு சீனா காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, கொலம்பியா சமீபத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் ‘பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ்’ (Belt and Road Initiative- பிஆர்ஐ) என்ற லட்சியத் திட்டத்தில் சேர கையெழுத்திட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பாகிஸ்தானும் உள்ளது. பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.
மே 14 அன்று, பிஆர்ஐ திட்டத்தின் கீழ் சீனாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையே ஒரு கூட்டு ஒத்துழைப்புத் திட்டம் கையெழுத்தானது. கொலம்பியா ஒரு லத்தீன் அமெரிக்க நாடு, டிரம்பின் வரி தொடர்பான அறிவிப்புகளுக்குப் பிறகு, அது சீனாவை நோக்கிச் சாய்ந்துள்ளது.
கொலம்பியா பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறது, அதற்காக சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக 2025 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.