பட மூலாதாரம், Getty Images
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘த ஹண்ட்ரட்’ ஏலத்திற்கு, இந்திய உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைப் பரிசீலிக்கவில்லை என்று பிபிசி ஸ்போர்ட் செய்தியிடம் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றங்களின் காரணமாக, 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இடம்பெறவில்லை.
‘த ஹண்ட்ரட்’ தொடர் ஐபிஎல் போல் இங்கிலாந்தின் பிரதான பிரான்சைஸ் லீகாக செயல்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகள் வழக்கமான 120 பந்துகள் (20 ஓவர்கள்) கொண்ட போட்டிகளாக அல்லாமல் 100 பந்துகள் கொண்ட போட்டிகளாக விளையாடப்படும்.
இந்தத் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் உள்ளன. அவற்றில் நான்கு அணிகள் ஐபிஎல் அணிகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் உரிமையின் கீழ் உள்ளன.
அந்த 4 அணிகளின் உரிமையாளர்கள் விவரம்:
- மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் – ஆர்.பி.சஞ்சீவ் கோயன்கா பெரும்பான்மை உரிமையாளராக உள்ளார். இவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளார்.
- சன்ரைசர்ஸ் லீட்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்களான சன் குழுமம் இந்த அணியை முழுமையாக வாங்கியிருக்கிறது.
- எம்ஐ லண்டன் – மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களான ரிலையன்ஸ் நிறுவனம் இவ்வணியின் இணை உரிமையாளராக இருக்கிறது.
- சதர்ன் பிரேவ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான ஜிஎம்ஆர் குழுமம் இந்த அணிக்கும் இணை உரிமையாளராக இருக்கிறது.
பிபிசி பார்த்த செய்திகளின் படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (England and Wales Cricket Board) மூத்த அதிகாரி ஒருவர் , ஒரு முகவருக்கு அனுப்பிய செய்தியில், அவரிடம் உள்ள பாகிஸ்தான் வீரர்களைத் தேர்ந்தெடுக்க, ஐபிஎல் அணிகளோடு தொடர்பில்லாத மற்ற அணிகள் மட்டுமே ஆர்வம் காட்டும் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு முகவர் இந்தச் சூழ்நிலையை, இந்திய முதலீடு உள்ள டி20 லீக்குகளில் நிலவும் ஒரு “எழுதப்படாத விதி” என்று விவரித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
இசிபி தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கடந்த ஆண்டு கூறுகையில், “அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அனைத்து அணிகளுக்காகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும் “தெளிவான பாகுபாட்டு எதிர்ப்பு கொள்கைகள்” நடைமுறையில் இருப்பதாகவும் எச்சரித்திருந்தார்.
கேள்விக்குள்ளான நான்கு அணிகள் அல்லது உரிமையாளர் குழுக்களில் மூன்று குழுக்கள் கருத்து தெரிவிக்கக் கோரியதற்குப் பதிலளிக்கவில்லை.
ஆனால் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸின் துணைத் தலைவர் ஜேம்ஸ் ஷெரிடன் பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறுகையில், “இரண்டு போட்டிகளிலும் (ஆண்கள் மற்றும் பெண்கள்) வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கக்கூடிய இரண்டு சிறந்த அணிகளைத் தேர்ந்தெடுப்பதே எங்களது ஒரே நோக்கமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “த ஹண்ட்ரட் தொடர் உலகம் முழுவதிலும் உள்ள ஆண் மற்றும் பெண் வீரர்களை வரவேற்கிறது, எட்டு அணிகளும் அதைப் பிரதிபலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
“த ஹண்ட்ரட் ஏலத்திற்காக 18 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர், இதில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து தலா 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் நீண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘த ஹண்ட்ரட்’ தொடரில் முகமது ஆமிர் மற்றும் இமாத் வசீம் ஆகிய இரண்டு பாகிஸ்தான் சர்வதேச வீரர்கள் விளையாடினர். புதிய முதலீட்டாளர்கள் கட்டுப்பாட்டை எடுப்பதற்கு முன்பு நடைபெற்ற இறுதித் தொடர் இதுவாகும்.
ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட பிற வீரர்கள் ஆண்களுக்கான போட்டியின் முந்தைய சீசன்களில் விளையாடியுள்ளனர். பெண்களுக்கான ‘த ஹண்ட்ரட்’ தொடரில் இதுவரை பாகிஸ்தான் வீராங்கனைகள் யாரும் விளையாடவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்உலக டி20 அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான் ஆண்கள் அணி ஆறாவது இடத்திலும், பெண்கள் அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.
இந்த ஆண்டு ‘த ஹண்ட்ரட்’ தொடர் நடைபெறும் காலத்தில், பாகிஸ்தான் ஆண்கள் அணி மேற்கிந்திய தீவுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வெள்ளை-பந்து (வரையறுக்கப்பட்ட ஓவர்கள்) போட்டிகளில் மட்டும் விளையாடும் வீரர்கள் அத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), வெளிநாட்டுத் தொடர்களில் வீரர்கள் பங்கேற்கத் தேவையான தடையில்லாச் சான்றிதழ்களை (என்ஓசி) முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்த நிகழ்வுகள் முன்பு நடந்துள்ளன.
இருப்பினும், ஆஸ்திரேலியாவின் சமீபத்திய பிக் பேஷ் லீக்கில் ஏழு முன்னணி வீரர்கள் பங்கேற்றதை ஆதாரமாகக் காட்டி, வீரர்கள் கிடைப்பதில் பிசிபி நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளதாக சில தரப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
பிரான்சைஸ் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் போக்கு
2023-இல் தொடங்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
அதன் ஆறு அணிகளும் ஐபிஎல் உரிமையாளர் குழுக்களுக்குச் சொந்தமானவை. இதில் தற்போது ‘த ஹண்ட்ரட்’ தொடரில் ஈடுபட்டுள்ள நான்கு அணிகளும் அடங்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஐஎல்டி20 தொடரில், எம்ஐ லண்டன் மற்றும் சதர்ன் பிரேவ் உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படும் அணிகள், கடந்த நான்கு சீசன்களாக ஒரு பாகிஸ்தான் வீரரைக் கூட ஒப்பந்தம் செய்யவில்லை.
ஆனால் 15 பிற நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை அவர்கள் சேர்த்துள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான டெசர்ட் வைப்பர்ஸ் என்ற ஐஎல்டி20 அணி, அதே காலகட்டத்தில் எட்டு பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அறிவுறுத்தலின் பேரில், ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்தது.
இதற்கு அதிகாரப்பூர்வமான காரணம் எதுவும் கூறப்படவில்லை, ஆனால் இந்தியா மற்றும் அண்டை நாடான வங்கதேசத்திற்கு இடையே நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“ஒவ்வொரு வீரருக்கும் நியாயமான மற்றும் சமமான வாய்ப்புக்கான உரிமை இருக்க வேண்டும்,” என்று உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி டாம் மொஃபாட் கூறியுள்ளார்.
“நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் சுயாட்சி அதிகாரம் இருந்தாலும், அந்த முடிவுகள் எப்போதும் நேர்மை, சமத்துவம் மற்றும் மரியாதை ஆகிய கொள்கைகளுடன் ஒத்துப்போக வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

‘சலுகைகளை நாடுவதில்லை, நியாயத்தையே நாடுகிறார்கள்’
இசிபி கடந்த ஆண்டு ‘த ஹண்ட்ரட்’ தொடரின் எட்டு அணிகளிலும் தனக்கு இருந்த 49% பங்குகளை விற்றது.
இதன் மூலம் திரட்டப்பட்ட 500 மில்லியன் யூரோ (சுமார் ரூ.5,250 கோடி) தனியார் முதலீடு, கவுன்டி அணிகளுக்கும் அடிமட்ட அளவிலான கிரிக்கெட் வளர்ச்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
போட்டியை நடத்தும் கவுன்டி அமைப்புகள் தங்களிடம் இருந்த மீதமுள்ள 51% பங்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது ஒரு பகுதியை விற்கவோ அனுமதிக்கப்பட்டன.
இந்தத் தொடரின் கட்டுப்பாட்டை இசிபி தொடர்ந்து தக்கவைத்துள்ளது. அதன் மூலோபாய திசையை வடிவமைக்க உதவ, அணி பிரதிநிதிகளைக் கொண்ட புதிய வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேய கிரிக்கெட்டில் பாகுபாடு “பரவலாக” இருப்பதாகக் கண்டறிந்த 2023-ஆம் ஆண்டின் ‘கிரிக்கெட்டில் சமநிலை’அறிக்கையைத் தொடர்ந்து நிறுவப்பட்ட, சுதந்திரமான கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பின் அதிகார வரம்பிற்குள்ளேயே இப்போட்டியும் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கவுன்டி கிரிக்கெட் உறுப்பினர்கள் குழு கூறுகையில், “பாகிஸ்தான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படாதது அவர்களின் தேசியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த முடிவு என்று நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருந்தால், சம்பந்தப்பட்ட கவுன்டி வாரியங்களும் இசிபி-யும் தனியார் பங்குதாரர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, கிரேட்டர் மான்செஸ்டர் மக்கள் தொகையில் 12% பேரும், லீட்ஸில் 4% பேரும் தங்களைப் பாகிஸ்தானியர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
2018-இல், தற்போது ‘த ஹண்ட்ரட்’ தொடரின் நிர்வாக இயக்குநராக உள்ள விக்ரம் பானர்ஜி தலைமையில், 10 “முக்கிய நகரங்களில்” வாழும் தெற்காசிய சமூகத்தினரின் ஈடுபாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு ‘தெற்காசிய செயல் திட்டத்தை’ இசிபி வெளியிட்டது.
மான்செஸ்டர், லீட்ஸ் மற்றும் லண்டன் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள அணிகளின் ரசிகர்களுக்கு, அவர்களின் உள்ளூர் அணிகளில் பாகிஸ்தான் வீரர்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இருக்காது என்பது போலத் தெரிகிறது.
“எங்கள் வீரர்கள் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை, அவர்கள் ஒரு நியாயமான வாய்ப்பையே எதிர்பார்க்கிறார்கள்,” என்று ஒரு முக்கிய முகவர் கூறியுள்ளார்.
மேலும், “மற்ற சில பிரான்சைஸ் கட்டமைப்புகளில் நாம் காணும் அதே முறைகளை ‘த ஹண்ட்ரட்’ தொடரும் பிரதிபலிக்காது என்று நம்புகிறேன். எனது கணிப்பு தவறு என நிரூபிக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு