• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

பாடசாலைகளில் அழகியற் கலைகளை மேம்படுத்த அரங்கக் கலை உபகரணங்கள் விநியோகம்

Byadmin

Feb 4, 2026


நாட்டிலுள்ள பாடசாலைகளில் அழகியற் கலைகள் கல்வி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், அரங்கக் கலை உபகரணங்களை விநியோகிக்கும் தேசிய மட்டத்திலான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலைகளில் சங்கீதம், நடனம், சித்திரக்கலை மற்றும் நாடகம் உள்ளிட்ட கலைத்துறைப் பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வந்தாலும், பெரும்பாலான பாடசாலைகளில் அவற்றுக்குத் தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் இல்லாமையும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் பல உபகரணங்கள் காலவதியாகி பழுதடைந்துள்ளமையும் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலைமை, அரங்கக் கலைகள் கல்வியின் தரத்தையும் மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் அழகியற் கலைகள் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரங்கக் கலை உபகரணங்களை விநியோகிக்கும் திட்டத்தை 2026 முதல் 2028 வரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தமாக 1,215 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகிய பிரதமர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (03) செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முடிவை ஊடகங்களுக்கு அறிவித்தார்.

இந்த திட்டத்தின் ஊடாக, பாடசாலைகளில் அரங்கக் கலைகள் கல்வி வளங்கள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் ஆளுமை வளர்ச்சி மேலும் ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin