தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் 3,300 மைல்கள் (5,300 கி.மீ.) சைக்கிளில் பயணம் செய்த 82 வயதான பாப் மான்ட்கோமெரி, தனது சவாலை நிறைவு செய்த மறுநாளே உயிரிழந்தார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூம் நகரில் இருந்து சிட்னியின் தென்மேற்கே உள்ள போவ்ரல் நகரம் வரை அவர் மேற்கொண்ட இந்த ஆறு வாரப் பயணத்திற்கு “ஒன் லாஸ்ட் ரைட்” என்று பெயரிட்டிருந்தார்.
அவரது மரணம் “எதிர்பாராதது” என்றாலும், “அமைதியானதாக” இருந்ததாக அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயணத்தின் மூலம், பாப் மான்ட்கோமெரியும் அவரது 18 வயது பேரனுமான டாம் மால்கமும் இணைந்து, மோட்டார் நியூரோன் நோய் (எம்.என்.டி) தொடர்பான தொண்டு நிறுவனத்திற்காக சுமார் 1.05 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை (சுமார் 74,000 அமெரிக்க டாலர்) திரட்டியிருந்தனர்.
மோட்டார் நியூரோன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எம்.என்.டி. என்.எஸ்.டபிள்யூ. அமைப்புக்காக பாப் மேற்கொண்ட ஆறாவது நிதி திரட்டும் சைக்கிள் பயணம் இதுவாகும். இந்த நோய் தொடர்பான பிரச்னை அவருக்கு மிகவும் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
59 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்த அவரது மனைவி ஜென்னி, அவர் உயிரிழந்தபோது அருகிலேயே இருந்தார் எனவும் “இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புவரை கூட அவர் தனது விழிப்புணர்வு செய்தியை உற்சாகமாக பகிர்ந்து கொண்டிருந்தார்” எனவும் குடும்பத்தினர் கூறினர்.
போவ்ரல் நகரை பாப் மற்றும் அவரது பேரன் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தபோது, அங்கிருந்த உள்ளூர் மக்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றதாக ஆஸ்திரேலியாவின் தேசிய ஒலிபரப்பாளர் ஏபிசி செய்தி வெளியிட்டது.
இந்தப் பயணத்தின் போது சந்தித்த மக்களும், ஒவ்வொரு இடத்திலும் கிடைத்த ஆதரவும் தன்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தியதாக பாப் ஏபிசியிடம் தெரிவித்திருந்தார்.
“பயணத்தின் வழியில் எத்தனையோ மனிதர்களையும், அவர்களுடைய கதைகளையும் சந்தித்தோம். பலர் தங்களால் முடிந்த உதவியை வழங்கினர். அது மிகவும் நெகிழ்ச்சியளித்தது,” என்று அவர் கூறியிருந்தார்.
குடும்பத்தினர் உடன் கொண்டாட்டம்
மோட்டார் நியூரோன் நோயால் தனது உறவினர் ஒருவரை இழந்ததுதான் இந்த சவாலை மேற்கொள்ள அவருக்கு ஊக்கமாக அமைந்தது. இதற்கு முன் மேற்கொண்ட நிதி திரட்டும் பயணங்கள் மூலம் அவர் கிட்டத்தட்ட 3 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை திரட்டியிருந்தார்.
“இந்த நோயால் என் குடும்பத்தினரும் நண்பர்களும் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது மனதை உடைக்கும் அனுபவம்,” என்று தனது நிதி திரட்டும் இணையப் பக்கத்தில் அவர் எழுதியிருந்தார்.
இதற்கிடையில், அவரது பேரன் டாம் மால்கம் திங்கள்கிழமை சிட்னிக்கு சென்றார். அங்கு குடும்பத்தினர் மீண்டும் ஒன்று கூடி, இந்த சாதனையை கொண்டாடினர்.
ஆனால், அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது நேரத்தில், பாப் மான்ட்கோமெரிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக எம்.என்.டி. என்.எஸ்.டபிள்யூ. அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி லியம் ஓ’மீரா தெரிவித்தார்.
பாப் மான்ட்கோமெரியின் மறைவு தன்னை மிகவும் சோகமடையச் செய்துள்ளதாகக் கூறிய ஓ’மீரா, அவரை “அன்புக்குரிய நண்பர் மற்றும் எம்.என்.டி. என்.எஸ்.டபிள்யூ. அமைப்பின் அயராத ஆதரவாளர்” என்று நினைவுகூர்ந்தார்.