ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் பாலம் அருகே கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-ல் வருகை தரும்போது, காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணத்தை நிறைவு செய்துவிட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வருகை தந்தார்.
அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்வதை தடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்தும், பிரதமரை திரும்பச் செல்ல வலியுறுத்தி அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் பாம்பன் பாலம் அருகே கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு, கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ரவி, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், புதுவை மீனவர் காங்கிரஸ் தலைவர் வேல், ராமேசுவரம் நகர காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி, பாம்பன் நகரத் தலைவர் ரிச்சர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.