6
பிரான்சில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து இரண்டு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய தாய் ஒருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அவர்மீது அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிறந்த குழந்தைகளின் உடல்களை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்ததை அந்தப் பெண் ஒப்புக்கொண்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தற்போது வேறு யார்மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
ஒன்பது பிள்ளைகளுக்குத் தாயான குறித்த பெண் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து சந்தேகம் எழுந்தது. பின்னர் வீட்டில் இருந்தவர்கள் குளிர்சாதனப் பெட்டியைச் சோதித்தபோது ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் வீடு சென்று மேற்கொண்ட மேலதிக சோதனையில், அதே குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மற்றொரு குழந்தையின் உடலும் மீட்கப்பட்டது. இதன் பின்னர் தாய்மீது சந்தேகம் அதிகரித்தது.
விசாரணையில், தனது கர்ப்பம் வெளிப்படாமல் இருக்க பெரிய அளவிலான உடைகளை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. குழந்தைகள் எப்போது பிறந்தன என்பதை அவர் துல்லியமாக தெரிவிக்க முடியவில்லை. இருப்பினும், அவை 2011 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.