போர்ட்லேண்ட் உளவு வளையத்தின் விசாரணை 13 மார்ச் 1961 அன்று தொடங்கியது. உளவு, திருமணத்தை மீறிய உறவு, பேயோட்டுதல் மற்றும் ஏமாற்றத்தக்க சாதாரண தோற்றம் கொண்ட ஒரு பங்களா பற்றிய பனிப்போர் காலக் கதையை பிபிசி செய்தியாக்கியது.
பனிப்போர் காலத்து உளவாளி பரிமாற்றம் என்றாலே விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் ஒரு பாழடைந்த சோதனைச் சாவடி அல்லது பாலத்தின் இரு பக்கங்களிலிருந்தும் மெதுவாக நடந்து வரும் காட்சிதான் தோன்றும். ஆனால் 1969-இல் சோவியத் ஒன்றியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் விரிவுரையாளருக்குப் பதிலாக ஹெலன் மற்றும் பீட்டர் குரோகர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, அது ஒரு வித்தியாசமான கதையாக இருந்தது.
போலந்து நோக்கி செல்லும் விமானத்தில் அவர்களுக்கு அருகில் நின்றபடி பிபிசியின் டாம் மாங்கோல்ட், “இன்னும் ஒரு மணிநேரத்திற்குள், அவர்கள் எந்த கம்யூனிச மண்ணுக்காகப் பொய் சொல்லி, உளவு பார்த்து, ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தார்களோ, அங்கு கால் பதிப்பார்கள். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு: பிபிசி தொலைக்காட்சி செய்திகளுக்காக முதலில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த முதல் வகுப்பு இருக்கைகளில் அமர்ந்து, குரோகர் தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுட்ட சால்மன் மீன், முட்டை, கோழி இறைச்சி, ஷாம்பெயின் மற்றும் காபியை அனுபவிக்கிறார்கள்,” என்று கூறினார்.
1961-ஆம் ஆண்டில், அந்த சகாப்தத்தின் மிக முக்கியமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றான, ஐந்து பேர் கொண்ட போர்ட்லேண்ட் உளவு வளையத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக இந்தக் தம்பதியினர் தண்டிக்கப்பட்டனர்.
இந்தத் தம்பதியினர் மிகவும் புத்திசாலித்தனமான தகவல் தொடர்பு அமைப்பைப் பயன்படுத்திப் பிரிட்டிஷ் உளவுத்துறையின் மதிப்புமிக்க ஆவணங்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வந்தனர். அவர்கள் லேசான தண்டனையுடன் தப்பிப்பதாகப் பலர் கருதினர்.
இங்கிலாந்தின் மணல் நிறைந்த தெற்கு முனையில் உள்ள ஒரு தீபகற்பமான போர்ட்லேண்டில் கடற்படை நீரடி ஆயுத நிறுவனத்தின் மீது உளவாளிகளின் கவனம் இருந்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில், விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ராயல் கடற்படையின் மிக முக்கியமான திட்டங்களான நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் முறைகள் போன்றவற்றில் பணியாற்றினர். இந்தப் பணிகளில் ரகசியத் தன்மை இருந்தபோதிலும், சோதனையில் ஒவ்வொரு பொருளும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டன.
ஒவ்வொரு புதிய கருவி மற்றும் முன்மொழியப்பட்ட மாற்றங்களும் புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை கொண்டிருந்தன. இவற்றைக் கைப்பற்ற, சோவியத் ஒன்றியத்திற்குத் தொழில்முறை உளவாளிகள் தேவைப்பட்டனர். அவர்களில் இருவர் அந்த ஆராய்ச்சி நிலையத்திற்குள்ளேயே இருந்தனர்.
ஹாரி ஹாட்டன் ஒரு முன்னாள் ராயல் கடற்படை அதிகாரி ஆவார், அவர் போலந்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்தபோது கம்யூனிச உளவுத்துறையால் பணியமர்த்தப்பட்டார். 1953-இல் அவர் பிரிட்டன் திரும்பியதும், போர்ட்லேண்ட் நிலையத்தில் எழுத்தராக வேலை பெற்றுத் தனது உளவு நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
உயர் ரகசிய ஆவணங்களை அணுகும் வசதி கொண்ட எதெல் கீ என்ற சக ஊழியருடன் அவருக்குக் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டது. கணவன் மனைவியாக வேடமிட்டு, இந்தத் தம்பதியினர் லண்டனுக்குச் சென்று தங்கள் கேஜிபி தொடர்பாளரைச் சந்தித்துத் திருடப்பட்ட ஆவணங்களை ஒப்படைப்பார்கள்.
தங்களது சாதாரண பங்களாவிற்குள், அவர்கள் ஒரு அதிநவீன தகவல் தொடர்பு மையத்தை உருவாக்கியிருந்தனர்.
ஹாட்டனின் அதிகாரப்பூர்வ மனைவிக்கு அவர் அடிக்கடி லண்டன் செல்வதில் சந்தேகம் ஏற்பட்டதால் வழங்கிய தகவலின் மூலம், அவர்கள் இன்னும் முன்னதாகவே பிடிபட்டிருக்கலாம் என்று 2019-இல் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்ஐ5 வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஒருமுறை அவர் பயணத்திலிருந்து திரும்பியதும், “ஒரு கட்டு பவுண்ட் நோட்டுகளை எடுத்து காற்றில் வீசினார்.” என்று திருமதி ஹாட்டன் கூறினார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், அவரது மேஜையில் இருந்த ஒரு பார்சலைத் திறந்தபோது “மிகவும் ரகசியம்” (Top Secret) என்று குறிப்பிடப்பட்டிருந்த ஆவணங்களைக் கண்டார். படிக்கட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய கேமராவைப் பற்றி அவர் கேட்டபோது, ஹாட்டன் கோபமடைந்தார். ஆனால் அவரது புகார்கள் “வெறுப்பின் காரணமாகத் திடீரெனக் கூறப்பட்டவை.” எனக் கருதப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டன.
ஹாட்டனின் மனைவியால் கண்டறியப்பட்ட அந்தச் சிறிய கேமரா உளவாளிகளின் முக்கிய ஆயுதமாகும். மைக்ரோடாட் கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் ஒரு முழுப் பக்கத் தகவலையும் ஒரு சிறிய பிலிம் துண்டில் அடக்கிவிடும். இது ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் புள்ளியின் அளவில் காகிதத்தில் பதிக்கப்படலாம்.
ஒரு சிறிய புள்ளிக்குள் விரிவான புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இருக்கலாம். ஒரு தபால் அட்டை அல்லது புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்படும் இந்த ரகசியச் செய்திகளை ரஷ்யாவிற்கு அனுப்ப முடியும்; எங்குத் தேட வேண்டும் என்று தெரிந்தால் ஒழிய இதைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது.
உளவாளிகளை உளவு பார்த்தல்
உளவு வளையத்தின் மற்றொரு பக்கமான தகவல் தொடர்பு நிபுணர்கள், ஒரு சிறந்த வலைப்பின்னலை உருவாக்கியிருந்தனர். அமைதியான புறநகர் லண்டனில் இருந்த அண்டை வீட்டாருக்கு பீட்டர் மற்றும் ஹெலன் குரோகர் தம்பதியினர் பழங்கால புத்தக விற்பனையாளராகவும், ஒரு இல்லத்தரசியாகவும் தெரிந்தனர். இது அவர்களின் நடவடிக்கைகள் வெளியே தெரியாமல் இருக்க உதவியாக அமைந்தது.
ஏனெனில் இது அவர்கள் புத்தகங்களுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கும், இரும்புத் திரைக்கு (Iron Curtain) அப்பாலும் செல்வதை நியாயப்படுத்தியது. வெளிப்படையாகச் சாதாரணமாகத் தெரிந்த பங்களாவிற்குள், ஒரு மறைக்கப்பட்ட வானொலி டிரான்ஸ்மிட்டர் மற்றும் மைக்ரோடாட் உபகரணங்களுடன் கூடிய அதிநவீன தகவல் தொடர்பு மையத்தை அவர்கள் உருவாக்கியிருந்தனர். அவர்களின் உண்மையான பெயர்கள் மோரிஸ் மற்றும் லோனா கோஹன்; இருவரும் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் நீண்டகால சோவியத் உளவாளிகள்.
ரஷ்யா சார்பாக இந்த நடவடிக்கையை லண்டனில் ஒருங்கிணைத்த கேஜிபி தொடர்பாளர் கார்டன் லான்ஸ்டேல் என்று அறியப்பட்டார்; அவர் பரிசுப் பெட்டிகள் மற்றும் விற்பனை இயந்திரங்களை விற்கும் கனடா நாட்டு தொழிலதிபர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் முதலாளித்துவத்தின் பலன்களை அனுபவித்தார், அவரது லாபகரமான வணிகத்தின் மூலம் கார்கள் மற்றும் ஒரு படகை வைத்திருந்தார்.
உண்மையில், அவரது பெயர் கோனான் மோலோடி, அவர் ரஷ்யாவில் பிறந்த கேஜிபி உளவாளி. ஆராய்ச்சி நிலையத்திற்குள் இருக்கும் இருவரிடமிருந்து தகவல்களைப் பெற்று குரோகர் தம்பதியினரிடம் சேர்ப்பதே அவரது பணியாகும். உளவுத்துறைக்கு ஒரு முக்கியமான தகவல் கிடைக்கும் வரை இந்த நடவடிக்கை பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாமல் தொடர்ந்தது.
பனிப்போரின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவரான, போலந்து உளவுத்துறை அதிகாரி மைக்கல் கோலெனியூஸ்கி, சோவியத் மற்றும் போலந்து ரகசியங்களை சிஐஏ-வுக்கு வழங்கிய ஒரு முத்தரப்பு உளவாளி ஆவார். கடற்படை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உயர் மட்ட பிரிட்டிஷ் உளவாளி ஒருவர் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தகவல் மேலோட்டமாக இருந்தாலும், எம்ஐ5 போர்ட்லேண்ட் நிலையத்திற்குத் தேடல் குழுவை அனுப்பத் தூண்டும் அளவுக்குப் போதுமானதாக இருந்தது. சந்தேகம் விரைவில் ஹாரி ஹாட்டன் மீது விழுந்தது; எதெல் கீயுடன் அவர் மத்திய லண்டனுக்கு மேற்கொண்ட ரகசியப் பயணங்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டன.
ஒருமுறை அவர்கள் ஒருவரிடம் பை ஒன்றை ஒப்படைப்பதைக் கண்டனர், அவர் பின்னர் கார்டன் லான்ஸ்டேல் என அடையாளம் காணப்பட்டார். அந்தத் தடயம் புறநகர் பகுதிக்கு இட்டுச் சென்றது. லான்ஸ்டேல் பின்தொடரப்பட்டு குரோகர் தம்பதியினரின் உயர் தொழில்நுட்ப பங்களாவிற்குச் சென்றார்.
அடுத்த இரண்டு மாதங்களில், எம்ஐ5 மற்றும் காவல்துறை அந்தப் பங்களாவிற்கு எதிரே இருந்த அவர்களது நண்பர்களான சர்ச் குடும்பத்தினரின் வீட்டில் குரோகர் தம்பதிக்காக ஒரு பொறி வைத்தனர். இந்த உளவு நடவடிக்கை மிகவும் பரபரப்பானது, இதை அடிப்படையாகக் கொண்டு 1983-இல் ஜூடி டென்ச் நடித்த ‘பேக் ஆஃப் லைஸ்’ (Pack of Lies) என்ற நாடகம் வெளியானது.
சர்ச் குடும்பத்தினர் சாதாரணமாக இருப்பது போல் நடித்தபோது, அதிகாரிகள் குரோகர் வீட்டிற்கு வருபவர்களைக் கண்காணித்தனர். அப்போது 15 வயதாக இருந்த மகள் கே சர்ச் 2014-இல் பிபிசியிடம் கூறுகையில் “அம்மா அவ்வளவு திறமையாகச் செயல்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. முதலில் குரோகர் தம்பதியினர் இந்த விசாரணையில் ஒரு பெரிய பகுதி என்பது என் பெற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எம்ஐ5 அவர்கள் யார் என்பதை அம்மாவுக்குப் புரிய வைத்தது.” என்றார்.
1961-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குரோகர் தம்பதியினர் பதற்றமடைந்து தப்பிக்க முயலக்கூடும் என்று எம்ஐ5 கருதியது. ஜனவரி 7 அன்று, ஹாட்டன் மற்றும் கீ ஒரு சந்திப்பிற்குப் பிறகு லான்ஸ்டேலுடன் மத்திய லண்டனில் பிடிபட்டனர். அவர்கள் வைத்திருந்த ஷாப்பிங் பையில் நான்கு கடற்படை சோதனை கையேடுகளும், பிரிட்டன் நாட்டின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஹச்.எம்.எஸ் (HMS) ட்ரெட்நாட்டின் விவரங்கள் அடங்கிய பிலிம் சுருளும் இருந்தன.
அதே நாளில், குரோகர் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது திருமதி குரோகர் முக்கியமான ஆதாரங்களை அழிக்க முயன்றதாக விசாரணையை முன்னின்று நடத்திய ஜார்ஜ் ஸ்மித் பிபிசியிடம் தெரிவித்தார்.
“அவர் சொன்னார், ‘சூப்பரின்டென்டென்ட், நாம் நீண்ட நேரம் வெளியே செல்லப் போகிறோம் என்று தோன்றுகிறது, நான் பாய்லர் நெருப்பை மூட்டுவதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உண்டா,’ என்று கேட்டார். நான் ‘நிச்சயமாக இல்லை, ஆனால் உங்கள் கைப்பையில் என்ன இருக்கிறது என்று என்னிடம் காட்டுகிறீர்களா?’ என்றேன்.”
ஒரு வெள்ளை உறையில் நான்கு தொகுதிகளாக எண்கள் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கண்டார். அவை பின்னர் சந்திப்பு இடங்களைக் காட்டும் வரைபடத்தின் குறிப்புகள் (grid references) என்று கண்டறியப்பட்டது.
வீட்டை மேலும் சோதனை செய்ததில் சமையலறையில் பாதாள அறைக்குச் செல்லும் ஒரு சிறிய கதவு கண்டறியப்பட்டது. குளியலறை ஒரு புகைப்படம் எடுக்கும் அறையாக (dark room) பயன்படுத்தப்பட்டது. மாடியில் அதிகாரிகள் மேலும் பல கேமராக்கள், புகைப்பட உபகரணங்கள், 74 அடி (22.5 மீ) ரேடியோ ஆண்டெனா மற்றும் ஒரு சக்தி வாய்ந்த வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் மற்றும் 6,000 டாலர் பணத்தைக் கண்டெடுத்தனர்.
பின்னர் குரோகர் வீட்டிற்குச் சென்ற பெண்மணி, அவர்கள் விட்டுச் சென்ற சில ஆவணங்களைக் கண்டார். அவர் 1969-இல் பிபிசியிடம் கூறுகையில் “எங்கள் நண்பர் ஒருவர் இங்கு வந்தார், அவர் ஒரு ஆவியுடன் பேசக்கூடியவர், அவர் எங்களுக்காக இந்த இடத்திற்கு வந்து பேயோட்டினார், ஏனென்றால் எங்களுக்கு இன்னும் அந்த உணர்வு இருந்தது – எங்களால் அதை அகற்ற முடியவில்லை.” என்றார்.
போர்ட்லேண்ட் உளவு வளையத்தின் விசாரணை சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தது. லான்ஸ்டேலுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் அவர் நான்கு ஆண்டுகளுக்கும் குறைவாகவே சிறையில் இருந்தார். 1966-இல் மாஸ்கோவில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆங்கிலேயர் கிரெவில் வின்னுக்குப் பதிலாக அவர் ரஷ்யர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சோவியத் ஒன்றியத்துக்குத் திரும்பியதும், லான்ஸ்டேல் ஒரு நாயகனாக வரவேற்கப்பட்டார். அவரது வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஜேம்ஸ் பாண்ட் பாணித் திரைப்படம் 1968-இல் எடுக்கப்பட்டது. அவர் 1970-இல் தனது 47 வயதில் இறந்தார்.
குரோகர் தம்பதியினருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1969-இல் சோவியத் எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்களைக் கடத்தியதற்காக நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த பிரிட்டிஷ் விரிவுரையாளர் ஜெரால்ட் ப்ரூக்கிற்குப் பதிலாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலையானதும் போலந்து சென்ற அவர்கள், பின்னர் மாஸ்கோவில் குடியேறினர். இருவரும் மதிப்புமிக்க ரஷ்ய இராணுவ விருதான ‘ஆர்டர் ஆஃப் தி ரெட் பேனர்’ (Order of the Red Banner) பெற்றனர். 1998-இல் ரஷ்யாவில் மாவீரர்களைக் கௌரவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தபால் தலைகளில் அவர்கள் இடம்பெற்றனர்.
ஹாட்டன் மற்றும் கீ தலா ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தனர். கீ முதலில் போர்ட்லேண்டில் உள்ள தனது பழைய வீட்டிற்குத் திரும்பினார், அங்கு அவர் “துரோகி” என்ற ஏளனத்தை தெருவில் எதிர்கொண்டார்.
ஒரு உளவாளியுடன் ஒரே தெருவில் வசிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று பிபிசி செய்தியாளர் கூறியபோது, ஹாட்டன் கோபமாக “அப்படியானால், அவர்கள் தாராளமாக வேறு இடத்திற்கு மாறலாம்” என்றார். கீ கூறுகையில், “நான் மீண்டும் வீட்டிற்குச் செல்ல எனக்கு முழு உரிமை உண்டு. என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. நான் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்” என்றார். ஒரு வருடம் கழித்து, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.