• Sat. Dec 6th, 2025

24×7 Live News

Apdin News

பிரெஷ்னேவ் இந்தியா வந்த போது சோவியத் முன்வைத்த 2 விசித்திரமான கோரிக்கைகள் என்ன?

Byadmin

Dec 6, 2025


இந்தியா - சோவியத் ஒன்றியம், பிரெஷ்னேவ், இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1980-ஆம் ஆண்டு புது டெல்லியில் லியோனிட் பிரெஷ்னேவ்.

    • எழுதியவர், ரெஹான் ஃபஸல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

லியோனிட் பிரெஷ்னேவ் முதன்முறையாக டிசம்பர் 15, 1961 அன்று இந்தியா வந்தபோது, அவர் சுப்ரீம் சோவியத் பிரசிடியத்தின் தலைவராக இருந்தார். அவர் அதிகாரப்பூர்வமாக அதிபர் பதவியில் இல்லை என்றாலும், அவர் அரசாங்கத்தின் தலைவர் பதவியை வகித்தார். இந்த வருகை திடீரென, ஒரு வார கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியா வருவதற்கு முன்பு, பிரெஷ்னேவ் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்ற விரும்புவதாகவும், சோவியத் உபகரணங்கள் இந்தியத் திட்டங்களுக்காக இறக்கப்படும் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குச் செல்ல விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்தார். பிரெஷ்னேவின் இந்த இரண்டு விருப்பங்களும் நிறைவேறவில்லை.

அப்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கவில்லை. அது பிப்ரவரி 1962 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு அரசாங்கத்தின் தலைவரும் தங்குவதற்கு ஏற்ற வசதியான இடங்கள் அங்கு இருக்கவில்லை என்பதால் பிரெஷ்னேவை விசாகப்பட்டினத்திற்கு அனுப்ப இந்திய அரசு சம்மதிக்கவில்லை.

குடியரசுத் தலைவர் மாளிகை செயலக ஆவணங்களின்படி, “ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் பிரெஷ்னேவை விசாகப்பட்டினத்தில் தங்க வைக்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகத்திடம் கோரியிருந்தார்.”

பிரெஷ்னேவ் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். டெல்லிக்கு 50 மைல்களுக்கு அப்பால் இருந்து, இந்திய விமானப்படையின் எட்டு போர் விமானங்கள் பிரெஷ்னேவின் விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தன. பிரெஷ்னேவ் தரையிறங்கியதும் அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

By admin