• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

பிள்ளையான் கைது குறித்து ஜனாதிபதி பொய்யுரைக்கிறார் | உதய கம்மன்பில

Byadmin

Apr 5, 2026


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்காக  பிள்ளையானை கைது செய்ததாக ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொய்யுரைத்துள்ளார்கள். இவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும். பிள்ளையான் மீது குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டுக்கள் கூட சுமத்தப்படவில்லை என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் நான் வெளியிட்ட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருதரப்பில் போலியான கையடக்க ஆவணப்படிவத்தை தயாரித்து பரிமாற்றம் செய்கிறார்கள்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நான் செயற்படவில்லை. அவ்வாறு செயற்பட்டிருந்தால் எனக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையான் கைது  செய்யப்பட்டதாகவும், அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி உட்பட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் குறிப்பிட்டார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கபட்டிருந்த பிள்ளையான் கடந்த 02ஆம் திகதி கல்கிசை நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட்டார். பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு விடயங்களை குறிப்பிட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையானை கைது செய்துள்ளோம் என்று குறிப்பிட்ட பொய்க்கு ஜனாதிபதி உட்பட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.

By admin