பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அணுசக்தி தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.
இரானோ, அந்த அணு ஆராய்ச்சி தளங்களை ஏற்கனவே காலி செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று அதிகமாக பேசப்பட்டது மாஸிவ் ஆர்ட்னன்ஸ் பெனெட்ரேட்டர் (MOP).
இதன் அதிகாரப்பூர்வ பெயர் GBU 57. Guided Bomb Unit என்பது அதன் விரிவாக்கம். 57 என்பது அதன் வடிவமைப்பு எண்.
அமெரிக்காவால் மட்டுமே இந்த ஆயுதத்தை திறம்பட பயன்படுத்த இயலும். இந்த குண்டுகள் பி2 என்ற போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த விமானங்கள் மசூரியில் உள்ள ஒயிட்மென் விமானப்படை தளத்தில் இருந்து மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களாகும்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, அமெரிக்க அதிகாரி ஒருவர் இந்த தாக்குதலில் பி2 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக இந்த போர் விமானங்களை குவாம் தீவுகளுக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. அதன் பிறகு இந்த போர் விமானங்களை இரானின் மீதான தாக்குதலிலும் அமெரிக்க பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எவ்வளவு அபாயகரமானது இந்த ஆயுதம்?
இந்த குண்டு மூலம் எப்படி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது?
இலக்கு ஒன்று தேர்வு செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இலக்கு, குண்டுகளை தாங்கிச் செல்லும் போர் விமானங்களின் இலக்கை நிர்ணயிக்கும் அமைப்பிற்கு உள்ளீடாக அளிக்கப்படுகிறது.
பிறகு இலக்கு தொடர்பான தகவல் குண்டுக்கு அனுப்பப்படும்.
செயற்கைக்கோள்கள் உதவியுடன் துல்லியமான வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்படும்.
கனமான வெடிகுண்டுகள் 50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வீசப்படும்.
இந்த உயரம், வெடிகுண்டுகள் நிலத்தில் ஊடுருவிப் பாய்வதற்கு தேவையான இயக்க ஆற்றலை வழங்குகிறது.
வேகமாக மேலே இருந்து கீழ் நோக்கி நிலத்தில் பாயும் போது ஏற்படும் தாக்கத்தால் வெடிகுண்டு பாதிப்படையாத வகையில் அதன் வெளிப்புறம் பலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘டிலே ஃப்யூசிங்’ என்ற அமைப்பு வெடிகுண்டின் வால் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளது.
இது சரியான ஆழத்தில் 5300 பவுண்டுகள் (2404 கிலோகிராம்) எடை கொண்ட வெடிபொருட்கள் வெடிப்பதை உறுதி செய்கின்றன.
பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகள் ஒரே புள்ளியில் இருந்து வீசப்படுகிறது. முதலில் வீசப்படும் குண்டு பாதையை உருவாக்கும், அதனை அடுத்து வீசப்படும் குண்டுகள் இலக்கை முற்றிலுமாக அழிக்கின்றன.
அணு ஆயுதங்கள் தவிர்த்து, ஜி.பி.யூ – 57 ரக வெடிகுண்டுகள்தான் உலகிலேயே மிகவும் பெரிய ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது.
மொத்த ஆயுதமும் 13,600 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் துல்லியமான வடிவமைப்பு நிலத்திற்கு அடியில் இருக்கும் இரானின் ஃபோர்டோ அணு ஆராய்ச்சி மையத்தை தாக்க இயலும். மலைகளின் மடிப்புகளுக்குள் இருக்கிறது ஃபோர்டோ மையம்.
அமெரிக்க அரசாங்கத்தைப் பொருத்தவரை, ஜி.பி.யூ – 57 என்பது, “பயங்கரமான (சேதத்தை ஏற்படுத்தும்) ஊடுருவும் ஆயுதம்,” ஆகும்.
நிலத்திற்கு அடியே உள்ள பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை இவை.
6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆயுதம் 60 மீட்டர் வரை நிலத்தில் ஊடுருவி வெடிக்கும் திறனை பெற்றுள்ளது என்று நம்பப்படுகிறது.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகளை இது வீச இயலும். இது ஆழமாக சென்று தாக்குதலை நடத்த உதவுகிறது.
இந்த ஆயுதத்தை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆயுதம் இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டதில்லை. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஷைல் ரேஞ்சில் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இந்த ஆயுதம் மாஸிவ் ஆர்டினன்ஸ் ஏர் ப்ளாஸ்டைக் (MOAB) காட்டிலும் சக்தி வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. MOAB 9800 கிலோ கிராம் எடை கொண்டது. இது அனைத்து குண்டுகளுக்கும் தாய் (Mother of All Bombs (MOAB) என்றும் அழைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், United States Air Force
இந்த தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் இது தொடர்பாக டிரம்ப், “ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் அமைந்துள்ள இரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது வெற்றிகரமாக நாம் தாக்குதலை நடத்தியுள்ளோம். இரானின் வான்பரப்பில் இருந்து அனைத்து போர் விமானங்களும் வெளியேறிவிட்டன,” என்று கூறினார்.
ஃபோர்டோவில் அனைத்து குண்டுகளும் வீசப்பட்டன. அனைத்து போர் விமானங்களும் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன என்று டிரம்ப் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவின் சிறந்த போராளிகளுக்கு வாழ்த்துகள். உலகின் வேறெந்த ராணுவத்தினராலும் இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்க இயலாது. தற்போது சமாதானத்திற்கான நேரம்,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேலின் அரசு செய்தி நிறுவனமான கானிடம் பேசிய இஸ்ரேலிய அதிகாரிகள், இந்த தாக்குதலுக்கான அமெரிக்காவின் திட்டத்தில் முழுமையான ஒத்துழைப்பை இஸ்ரேல் வழங்கியுள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலில் பி2 விமானங்கள் பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.
இரானின் எதிர்வினை என்ன?
இரான் அரசு தொலைக்காட்சியின் துணை அரசியல் பிரிவு இயக்குநர் ஹசான் அபேதினி, அணுசக்தி தளங்களை ஏற்கனவே இரான் காலி செய்துவிட்டதாக கூறினார்.
”டிரம்ப் கூறியது போன்று தாக்குதலே நடைபெற்றிருந்தாலும் கூட, இரான் இதனால் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை. ஏன் என்றால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்.
தஸ்னிம் செய்தி முகமையின்படி, குவாம் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை செய்தித் தொடர்பாளர் மோர்டெஸா ஹைத்ரி, “ஃபோர்டோ அணு ஆராய்ச்சி மையத்தின் ஒரு பகுதி வான்வழி தாக்குதலில் சேதம் அடைந்திருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்?
தற்போது டெல் அவிவில் செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் பிபிசி செய்தியாளர் மார்க் லொவென் இந்த கேள்விக்கு பதில் காணும் முயற்சியில் இருக்கிறார்.
இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவு மற்றும் போர் முக்கிய திருப்பத்தை சந்தித்துள்ளது என்று மார்க் லொவென் கூறுகிறார்.
இது அமெரிக்காவின் பாதுகாப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பிராந்தியத்தில் 40 ஆயிரம் அமெரிக்கர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் அதீத எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
அமெரிக்கா இரான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதலை தொடர்வோம் என்று சனிக்கிழமை அன்று இரான் ஆதரவு பெற்ற, யேமனின் ஹூத்தி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும், இந்த பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கும் எதிராக இரான் பதில் தாக்குதலை நடத்தும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது.
மேலும், இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது இரான் எவ்வாறு தாக்குதலை நடத்தும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு