4
தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் எரிசக்தியைச் சேமிக்கும் பொருட்டு, வாரத்தில் புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை பொது விடுமுறையாக அறிவிக்காமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் நிறுவனத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் நாளாக அறிவிக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்டப் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ந்து நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியின் காரணமாக, உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பல அரசாங்க ஊழியர்கள் இந்த நாளைத் தங்களின் தனிப்பட்ட பயணங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இது எரிசக்தியைச் சேமிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய உதவாது.
அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை வீட்டிலிருந்தே செய்யும் முறைக்கு வழிநடத்தப்பட்டால், அவர்களால் ஆற்றலைச் சேமிக்க முடிவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பிற நிர்வாக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளையும் தடையின்றிப் மேற்கொள்ள முடியும்.
மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் பொருளாதாரத்தைத் தடையின்றிப் கொண்டு செல்ல ஒரு துரித பொதுச் சேவை அவசியம்.
இன்று, உலகில் உள்ள பல நாடுகள், தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைகளைக் கையாளுகின்றன.
அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட பல நிறுவனங்கள், சாதாரண சூழ்நிலைகளில்கூட இந்த முறையைச் செயல்படுத்துகின்றன.
ஒரு ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட பணியை வீட்டிலிருந்து செய்ய அனுமதிப்பதன் மூலம், அலுவலகங்களை அன்றாடம் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் செலவைக் குறைக்க உலகின் பல நாடுகள் முயற்சிக்கின்றன. ஒரு நாடு என்ற வகையில் நாமும் இதுபோன்ற புதிய முறைகளைக் கையாள வேண்டும் என்றார்.