பட மூலாதாரம், NASA
புதன் கோளை ஒருமுறை பார்த்தால், அது சூரிய மண்டலத்திலேயே மிகவும் சலிப்பூட்டும் கோள் என்று தோன்றலாம். அதன் வறண்ட மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மிகக் குறைவு, அதன் கடந்த காலத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை, மேலும் கோளின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. அதன் கரடுமுரடான பள்ளங்களுக்கு இடையே உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை.
இருப்பினும், உற்று நோக்கினால், புதன் ஒரு வசீகரிக்கும், சாத்தியமற்ற மற்றும் மர்மங்கள் நிறைந்த உலகமாகத் தெரிகிறது.
நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள இந்தக் கோளின் இருப்பு குறித்து கோள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். இது பூமியை விட 20 மடங்கு குறைவான நிறை கொண்டது மற்றும் அகலத்தில் ஆஸ்திரேலியாவை விடச் சற்றே பெரியது. ஆனால், புதன் நமது சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக அடர்த்தி கொண்ட கோளாக உள்ளது. அதன் நிறையின் பெரும்பகுதிக்குக் காரணமாக விளங்குவது அதன் மிகப்பெரிய உலோக உட்கரு ஆகும்.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதனின் சுற்றுப்பாதை, வானியலாளர்களால் முழுமையாக விளக்க முடியாத ஒரு அரிய இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியுடன் தொடர்புடையது: புதன் எவ்வாறு உருவானது என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவரை, அத்தகைய ஒரு கோள் அங்கு இருக்கவே முடியாது.
புதன் எங்கிருந்து வந்தது, எப்படி உருவானது மற்றும் அது ஏன் இன்று இப்படி இருக்கிறது என்பது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகும். இருப்பினும், இதற்கான சில விடைகள் விரைவில் கிடைக்கக்கூடும்.
ஐரோப்பா மற்றும் ஜப்பானின் கூட்டுத் திட்டமான ‘பெபிகொலம்போ’ (BepiColombo) எனும் விண்கலம் 2018-இல் ஏவப்பட்டு, தற்போது புதனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
பட மூலாதாரம், NASA
புதன் எவ்வாறு உருவானது?
புதன் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டறிவது நமது சூரிய மண்டலத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் புறக்கோள்களைப் (exoplanets) பற்றிப் படிப்பதற்கும் முக்கியமானது.
“புதன் ஒரு அசாதாரணமான அமைப்பைக் கொண்டிருப்பதால், புறக்கோள்களைப் பற்றி ஆய்வு செய்ய நமக்குக் கிடைத்துள்ள மிக நெருக்கமான வாய்ப்பு இதுதான்,” என்று அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) கோள் ஆராய்ச்சியாளர் சவேரியோ காம்பியோனி கூறுகிறார். “இது ஒரு வசீகரிக்கும் உலகம்,” என்கிறார் அவர்.
1974 மற்றும் 1975-ஆம் ஆண்டுகளில் நாசாவின் ‘மரைனர் 10’ விண்கலம் புதனைக் கடந்து மூன்று முறை சென்ற பிறகுதான், புதனில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதை வானியலாளர்கள் முதன்முதலில் உணர்ந்தனர். சூரிய மண்டலத்தின் உட்பகுதிக்கு மனிதகுலம் மேற்கொண்ட முதல் பயணம் அதுவாகும்.
அந்தப் பயணங்கள் கோளின் ஈர்ப்பு விசை குறித்த ஆரம்பக்கட்ட அளவீடுகளை வழங்கின. இது புதனின் உட்புறத்தைப் பற்றிய முதல் பார்வையை வழங்கியதுடன், அதன் விசித்திரமான அமைப்பையும் வெளிப்படுத்தியது.
பூமி, வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் இரும்புச் சத்து நிறைந்த உட்கருக்களைக் கொண்டுள்ளன, அவை அவற்றின் ஆரத்தில் பாதியைக் கொண்டுள்ளன. பூமியின் உட்கரு திடமான உட்புற அடுக்கு மற்றும் திரவ வெளிப்புற அடுக்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சுழலும் போது பூமியைப் பாதுகாக்கும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இதற்கு மேலே மேன்டில் (mantle) அடுக்கு மற்றும் நாம் வாழும் மேலோடு (crust) உள்ளது.
ஆனால் புதன் முற்றிலும் மாறுபட்டது. அதன் உட்கரு அதன் ஆரத்தில் கிட்டத்தட்ட 85% ஆகும். அதற்கு மேலே ஒரு மெல்லிய பாறை அடுக்கு (mantle) மற்றும் மேலோடு மட்டுமே உள்ளது. இதுதான் கோளின் அபாரமான அடர்த்திக்குக் காரணமாகும். ஆனால் அதன் அமைப்பு ஏன் இப்படி ஆனது என்பது இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை.
“புதனின் உருவாக்கம் ஒரு பெரிய சிக்கலாக உள்ளது,” என்கிறார் பெர்லினில் உள்ள ஜெர்மன் விண்வெளி மையத்தின் கோள் ஆராய்ச்சியாளர் நிக்கோலா டோசி. “புதன் ஏன் இப்படி இருக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.”
இதற்கு அடுத்ததாக புதனுக்குச் சென்ற நாசாவின் ‘மெசஞ்சர்’ விண்கலம் (2011 – 2015), மேலும் பல கேள்விகளையே எழுப்பியது. சூரியனிலிருந்து வெறும் 6 கோடி கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் புதனில், பகல் நேர வெப்பம் 430°C வரை இருக்கும். இரவு நேரங்களில் இது -180°C ஆகக் குறையும்.
ஆனால் இத்தகைய கடுமையான வெப்பநிலையிலும், புதனின் மேற்பரப்பில் பொட்டாசியம் மற்றும் கதிரியக்கத் தோரியம் போன்ற ஆவியாகக்கூடிய தனிமங்கள் (volatile elements) இருப்பதை மெசஞ்சர் விண்கலம் கண்டறிந்தது. சூரிய கதிர்வீச்சால் இவை எப்போதோ ஆவியாகி இருக்க வேண்டும். மேலும், குளோரின் போன்ற சிக்கலான மூலக்கூறுகள் மற்றும் கோளின் துருவப் பகுதிகளில் உள்ள நிழல் நிறைந்த பள்ளங்களில் பனிக்கட்டியும் கண்டறியப்பட்டன.
இத்தகைய கண்டுபிடிப்புகள், புதன் தற்போது சூரியனைச் சுற்றி வரும் இடத்தில் உருவாகியிருக்க முடியாது என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளன. இத்தகைய கோள் எளிதில் உருவாக முடியாத ஒரு பகுதியில் அது ஏன் இருக்கிறது என்பதை விளக்க வானியலாளர்கள் நீண்ட காலமாக முயன்று வருகின்றனர்.
‘புதன்- ஒரு ‘தலைவலி”
நமது சூரிய மண்டலத்தைப் போன்ற அமைப்புகள், நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள தூசி மற்றும் வாயு மண்டலத்திலிருந்து (disk) உருவாகின்றன என்பதை நாம் அறிவோம். மெதுவாக, கோள்கள் இந்தப் பொருட்களை ஈர்த்து வளர்ந்து, அந்த மண்டலத்தில் இடைவெளிகளை உருவாக்குகின்றன.
ஆனால், கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்ற மாதிரிகளின்படி பார்த்தால், புதன் வெள்ளிக் கோளிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் என்னதான் கணக்கீடுகளை மாற்றியமைத்தாலும், இன்று நாம் பார்க்கும் புதனின் நிலையை அவர்களால் விளக்க முடிவதில்லை.
“இது ஒரு தலைவலி,” என்று ரேமண்ட் ஒப்புக்கொள்கிறார். “கணக்கீடுகளின்படி பார்த்தால், புதன் என்ற ஒரு கோளே உருவாக வாய்ப்பில்லை.”
புதன் எவ்வாறு உருவானது என்பது குறித்து வானியலாளர்கள் பல ஆண்டுகளாக மாதிரிகளைச் செம்மைப்படுத்தி வருகின்றனர். இதில் சில சாத்தியமான சூழல்கள் உள்ளன. புதன் ஒரு காலத்தில் மிகப் பெரியதாக, அதாவது அதன் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக, செவ்வாய் கோளின் அளவில் இருந்திருக்கலாம் என்பது அதிகம் விவாதிக்கப்படும் ஒரு கருத்தாகும். மேலும் அது சூரியனிலிருந்து அதிக தொலைவில் சுற்றி வந்திருக்கலாம்.
புதனில் கண்டறியப்பட்ட பொட்டாசியம் மற்றும் தோரியம் அளவுகள் இதற்கு வலுசேர்க்கின்றன. இவை சூரியனிலிருந்து அதிக தொலைவில் உருவான செவ்வாய் கோளில் உள்ளதைப் போலவே உள்ளன.
இந்தக் கோட்பாட்டின்படி, புதன் உருவான முதல் 10 மில்லியன் ஆண்டுகளில், ‘ஆதி-புதன்’ (Proto-Mercury) மீது ஒரு பெரிய பொருள், ஒருவேளை செவ்வாய் கோளின் அளவுள்ள மற்றொரு கோள் மோதியிருக்கலாம்.
அந்த மோதலால் கோளின் வெளிப்புற அடுக்குகளான மேலோடு மற்றும் மேன்டில் சிதறிப்போய், இன்று நாம் பார்க்கும் அடர்த்தியான, இரும்புச் சத்து நிறைந்த உட்கரு மட்டுமே எஞ்சியிருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
இந்த விளக்கம்தான் இன்று வானியலாளர்களால் அதிகம் ஆதரிக்கப்படுகிறது என்று பிரான்சின் நைஸ் நகரில் உள்ள கோட் டி’அஸூர் அப்சர்வேட்டரியின் விஞ்ஞானி அலெஸாண்ட்ரோ மோர்பிடெல்லி கூறுகிறார்.
“புதன் ஒரு மிகப்பெரிய மோதலைச் சந்தித்து, அதன் மேன்டில் அடுக்கின் பெரும்பகுதியை இழந்திருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது,” என்கிறார் அவர்.
அந்த மோதல் புதனை முற்றிலும் அழித்துவிடாமல், பக்கவாட்டில் உரசிச் சென்ற மோதலாக (grazing impact) இருந்திருக்க வேண்டும்.
இருப்பினும், ஆரம்பக்கால சூரிய மண்டலத்தில் மோதல்கள் பொதுவானவை என்றாலும், புதனின் இவ்வளவு பெரிய பகுதியைச் சிதைக்க வினாடிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் மோதல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று காம்பியோனி விளக்குகிறார். பெரும்பாலான பொருட்கள் சூரியனைச் சுற்றி ஒரே திசையில் சமமான வேகத்தில் செல்வதால், இத்தகைய அதிவேக மோதல்கள் சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.
அத்தகைய மோதல் நிகழ்ந்திருந்தால் புதனில் உள்ள ஆவியாகக்கூடிய தனிமங்கள் (தோரியம் உட்பட) மறைந்திருக்க வேண்டும். ஆனால் மெசஞ்சர் விண்கலம் அவற்றைக் கண்டறிந்தது இந்த மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இத்தகைய வெடிப்புச் சம்பவத்தில் அவை எவ்வாறு தப்பின?
பட மூலாதாரம், NASA
புதனில் தனிமங்கள் எப்படி இன்னும் இருக்கின்றன?
மோதல் இல்லாவிட்டாலும், இந்தத் தனிமங்கள் புதனில் எப்படி இன்னும் இருக்கின்றன என்பது புரியவில்லை.
“சூரியனுக்கு இவ்வளவு நெருக்கமான ஒன்று இவ்வளவு ஆவியாகக்கூடிய தனிமங்களைக் கொண்டிருக்கக் கூடாது,” என்கிறார் பிரிட்டனின் ஓபன் யுனிவர்சிட்டியின் விஞ்ஞானி டேவிட் ரோதரி. இவர் பெபிகொலம்போ விண்கலத்தில் உள்ள புதனின் எக்ஸ்-ரே இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (MIXS) கருவியின் இணை இயக்குநராக உள்ளார். இந்தக் கருவி கிரகத்தின் ஆவியாகக்கூடிய தனிமங்களை ஆய்வு செய்யும்.
“எனவே, புதன் அதிக தொலைவில் தனது பயணத்தைத் தொடங்கியதா, அல்லது புதனுடன் இணைந்த பொருட்கள் அதிக தொலைவிலிருந்து வந்தவையா?” என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை புதன் மற்றொரு பொருளால் மோதப்படாமல், அதுவே சென்று மற்றொரு கோள் மீது (உதாரணமாக வெள்ளி) மோதியிருக்கலாம். அதன் பிறகு அது தனது தற்போதைய இடத்திற்கு வந்திருக்கலாம்.
இது ஒரு வலுவான கருத்தாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அத்தகைய மோதலில் புதனின் மேன்டில் அடுக்கு சிதைவது எளிது. “புதன் மோதப்பட்டதை விட, அதுவே சென்று மோதியது என்று விளக்குவது எளிதாக உள்ளது,” என்கிறார் பெல்ஜியத்தின் லூவெய்ன் பல்கலைக்கழகத்தின் கோள் புவியியலாளர் ஒலிவியர் நமூர்.
ஆரம்பக்கால சூரிய மண்டலத்தில் இது போன்ற பெரிய மோதல்கள் பல நடந்திருக்கக்கூடும். நமது நிலவு கூட, செவ்வாய் அளவுள்ள ‘தீயா’ (Theia) என்ற பொருள் பூமியின் மீது மோதியபோது சிதறிய ஒரு பெரிய பகுதியிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது.
பிற கோட்பாடுகள்
புதனின் மோதல் குறித்த எந்தவொரு சூழலிலும், விண்வெளியில் சிதறிய பாறைத் துகள்கள் ஏன் மீண்டும் அதே கோளில் வந்து விழவில்லை அல்லது நிலவாக மாறவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை (புதனுக்கு நிலவு கிடையாது).
இதற்கு ‘மோதலால் தூளாகுதல்’ (collision pulverization) ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது புதனிலிருந்து வெளியேறிய பொருட்கள் தூளாக நசுக்கப்பட்டு, பின்னர் சூரியக் காற்றால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.
“தூளாக்கப்படுதல் என்பது சிதறிய பொருட்கள் மீண்டும் மீண்டும் சிறிய துண்டுகளாக உடைக்கப்படுவதாகும்,” என்கிறார் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் கிரகங்கள் தொடர்பான நிபுணர் ஜெனிபர் ஸ்கோரா.
“இதன் விளைவாகச் சிறிய மற்றும் அடர்த்தியான புதன் உருவாகிறது.” ஆனால் இதற்குத் தேவைப்படும் தூளாக்கப்படும் வேகம் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
மற்றொரு சூழல் என்னவென்றால், அத்தகைய மிகப்பெரிய மோதல் எதுவும் நடக்கவில்லை என்பதாகும். மாறாக, சூரியனுக்கு நெருக்கமான இரும்புச் சத்து நிறைந்த பொருட்களிலிருந்தே புதன் உருவானது என்பது ஒரு கருத்து.
சுவீடனின் லண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்டர்ஸ் ஜோஹன்சன் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார். இதன்படி, மற்ற கோள்களை விட அதிக வெப்பமான ஒரு பகுதியில் புதன் உருவானது. ஆரம்பக்கால சூரியனின் வெப்பத்தால் அங்கிருந்த லேசான தூசிகள் ஆவியாகி, கனமான இரும்புச் சத்து நிறைந்த பொருட்கள் மட்டும் ஒன்றிணைந்து புதன் உருவானது.
“இரும்புச் சத்து நிறைந்த ஒரு கோள் இப்படித்தான் உருவாக முடியும்,” என்று ஜோஹன்சன் வாதிடுகிறார்.
இந்தக் கோட்பாட்டிலும் சிக்கல்கள் உள்ளன. இது உண்மையாக இருந்தால், புதன் ஏன் தொடர்ந்து வளராமல் இவ்வளவு சிறியதாக நின்றது?
“அங்கே ஏராளமான பொருட்கள் இருந்திருக்கும், ஆனால் நாம் ஏன் இவ்வளவு சிறிய கோளைப் பார்க்கிறோம் என்பது உறுதியாகத் தெரியவில்லை,” என்கிறார் ஜோஹன்சன்.

சூப்பர் மெர்க்குரிகள்
மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியும் புதனைப் போன்ற பெரிய வடிவக் கோள்கள் இருப்பதை நாம் காண்கிறோம். இவை ‘சூப்பர் மெர்க்குரிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை பூமியை விட அதிக நிறையும் அளவும் கொண்டவை, ஆனால் புதனைப் போலவே பெரிய இரும்பு உட்கருவைக் கொண்டுள்ளன.
புதனின் அளவுள்ள கோள்களை நாம் இன்னும் கண்டறியாததற்குக் காரணம், அவை நட்சத்திரத்தின் பிரகாசத்திற்கு முன்னால் மிகச் சிறியதாக இருப்பதே ஆகும்.
மற்ற நட்சத்திரங்களை ஆய்வு செய்ததில், இத்தகைய ‘சூப்பர் மெர்க்குரிகள்’ நமது விண்மீன் மண்டலத்தில் (galaxy) 10% முதல் 20% வரை இருக்கலாம் என்று காம்பியோனி கூறுகிறார்.
இதுவும் சில சிக்கல்களை உருவாக்குகிறது. ஏனெனில், புதனைப் போலவே அவையும் எப்படி உருவாகின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. “அவை வியக்கத்தக்க வகையில் பொதுவானதாக உள்ளன,” என்று காம்பியோனி சுட்டிக்காட்டுகிறார்.
புதனின் உருவாக்கம் பற்றி மற்றொரு கோட்பாடும் உள்ளது: உட்புறக் கோள்கள் இப்போது இருக்கும் இடத்திலேயே உருவாகவில்லை, அவை இடம்பெயர்ந்திருக்கலாம்.
இந்த மாதிரியின்படி, புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை சூரியனைச் சுற்றி இரண்டு வெவ்வேறு வளையங்களில் உருவாகியிருக்கலாம். பூமி மற்றும் வெள்ளி ஆகியவை உட்புற வளையத்தில் புதனுடன் சேர்ந்து உருவாகி, பின்னர் அவற்றின் அதிக நிறை காரணமாக வெளியே இடம்பெயர்ந்திருக்கலாம், இதனால் புதன் மட்டும் பின் தங்கியிருக்கலாம் என்று ரேமண்ட் கூறுகிறார்.
பட மூலாதாரம், JODY AMIET/AFP vía Getty Images
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாட் கிளெமென்ட் என்பவரின் மாதிரிப்படி, பாறைக் கோள்கள் சூரியனுக்கு மிக அருகில் உருவாகி, பின்னர் வெளியே நகர்ந்திருக்கலாம்.
“புதன் இந்த ஓட்டத்திலிருந்து விலகி, வளரத் தேவையான பொருட்கள் இல்லாமல் போய்விட்டது,” என்கிறார் கிளெமென்ட். புதன் ஏன் இவ்வளவு பெரிய உட்கருவைக் கொண்டுள்ளது என்பதை இது முழுமையாக விளக்காவிட்டாலும், அதன் அளவையும் வெள்ளிக்கோளிலிருந்து அது இருக்கும் தூரத்தையும் இது விளக்குகிறது. “இடப்பெயர்வு (migration) அவசியம் என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் கிளெமென்ட்.
இன்னும் சில விசித்திரமான கருத்துகளும் உள்ளன. புதன் ஒரு பாறைக் கோளே இல்லை என்றும், அது வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக்கோளின் வளிமண்டலம் நீக்கப்பட்ட பிறகு எஞ்சிய அதன் உட்கரு மட்டுமே என்றும் ஒரு கருத்து உள்ளது.
இருப்பினும், காம்பியோனி இதைச் சாத்தியமாகக் கருதவில்லை. வியாழன் போன்ற ஒரு கோளின் ஈர்ப்பு விசை காரணமாக அதன் வளிமண்டலத்தை நீக்குவது மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார்.
இவை அனைத்தும் வானியலாளர்களுக்குப் பல குறிப்புகளை வழங்கினாலும், புதன் எப்படி உருவானது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. ‘பெபிகொலம்போ’ விண்கலம் இதற்குச் சில விடைகளை வழங்கக்கூடும்.
ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் ஜப்பானிய விண்வெளி முகமை (JAXA) ஆகியவற்றின் இரண்டு விண்கலங்கள் இணைந்த இந்தத் திட்டம் புதனின் சுற்றுப்பாதையில் நுழையும் போது, அவை இரண்டும் தனித்தனியாகப் பிரியும்.
அவை கோளின் மேற்பரப்பின் வேதியியல் அமைப்பை வரைபடமாக்கும், அதே வேளையில் புதனின் ஈர்ப்பு விசை மற்றும் பலவீனமான காந்தப்புலத்தையும் ஆய்வு செய்யும்.
பட மூலாதாரம், Getty Images
புதனின் தோற்றம்
“புதனின் தோற்றம் குறித்த கூடுதல் தகவல்களை பெபிகொலம்போ வழங்கும்,” என்கிறார் டோசி. குறிப்பாக, கோளின் மேற்பரப்பிற்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிவது அதிக ஆர்வம் அளிப்பதாக உள்ளது. “அதன் அமைப்பை அறிவது கோளின் உருவாக்கம் குறித்த கட்டுப்பாடுகளை வழங்க உதவும்,” என்கிறார் டோசி.
புதன் ஒரு காலத்தில் பெரியதாக இருந்து, பின்னர் தனது மேன்டில் அடுக்கை இழந்திருந்தால், அது ஒரு காலத்தில் உருகிய குழம்பு (magma ocean) நிறைந்த கோளாக இருந்திருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாம் இன்று காணலாம். “அது ஒரு குறிப்பிட்ட முறையில் திடமாகியிருக்கும்,” என்கிறார் டோசி.
2025ம் ஆண்டின் தொடக்கத்தில் அந்த விண்கலம் புதனைக் கடந்தபோது அனுப்பிய முதல் படங்கள் அத்தகைய ஆரம்பக்கால குழம்புப் பெருங்கடலுக்கான ஆதாரங்களை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், மோதல் பள்ளங்களால் சிதைக்கப்பட்ட மற்றும் பண்டைய எரிமலைக் குழம்புகளால் பிளக்கப்பட்ட மேற்பரப்பை அவை காட்டியுள்ளன.
சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலைக் குழம்புப் பெருக்கத்தின் எஞ்சிய பகுதிகளையும் காண முடிகிறது. இவை பழைய பள்ளங்களை நிரப்பி, சமதளமான மேற்பரப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்த எரிமலைக் குழம்புகள் கோளின் தோற்ற காலத்தை விடப் பிந்தையவை என்றாலும், அந்தச் சமதளப் பரப்பில் உள்ள சுருக்கங்கள், கோள் குளிர்ந்தபோது அது வியக்கத்தக்க வகையில் சுருங்கியதைக் காட்டுகின்றன.
பட மூலாதாரம், ESA/ BepiColombo/ MTM
விண்கலத்தின் ஈர்ப்பு விசை அளவீடுகள், கோளின் உட்கருவின் அமைப்பு குறித்து விஞ்ஞானிகளுக்கு ஒரு சிறந்த புரிதலை வழங்கும்.
“உட்கருவின் வேதியியல் அமைப்பை அறிவது புதனின் தோற்றத்தை மீண்டும் கட்டமைக்க உதவும்,” என்கிறார் டோசி.
புதனின் ஆவியாகக்கூடிய தனிமங்கள் குறித்தும் பெபிகொலம்போ கூடுதல் தகவல்களைத் தரும். “புதனில் ஆவியாகக்கூடிய தனிமங்கள் அதிகம் என்பது நமக்குத் தெரியும், ஆனால் அவை அனைத்தும் என்னவென்று நமக்குத் தெரியாது,” என்கிறார் ரோதரி.
புதனின் மேற்பரப்பு ஏன் நிலவை விட இருட்டாக இருக்கிறது என்பது போன்ற பிற மர்மங்களையும் இது தீர்க்கக்கூடும். நிலவு பிரதிபலிக்கும் ஒளியில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே புதன் பிரதிபலிக்கிறது. இது அதன் மேற்பரப்பில் கிராஃபைட் போன்ற இருண்ட பொருள் இருப்பதைக் குறிக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், புதனின் தோற்றத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள, எதிர்காலத்தில் அங்கே தரை இறங்க வேண்டும் – இது பெபிகொலம்போ திட்டத்தில் முதலில் இருந்தது, ஆனால் செலவு காரணமாகக் கைவிடப்பட்டது – மேலும் அங்கிருந்து மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கனவு.
“எங்களுக்குத் தேவையானது புதனின் ஒரு சிறு மாதிரிதான்,” என்கிறார் ரோதரி. அது புதன் எதனால் ஆனது என்பதைத் துல்லியமாக அறிய உதவும்.
தற்போதைக்கு அத்தகைய திட்டம் எதுவுமில்லை என்றாலும், சில முன்மொழிவுகள் உள்ளன.
“தரை இறங்குவதற்குப் பதிலாக, புதனிலிருந்து வந்த ஒரு விண்கல்லை பூமியில் கண்டறிவதே எங்களது மிகப்பெரிய நம்பிக்கை,” என்கிறார் ரோதரி. இது சாத்தியமானதுதான். செவ்வாய் கோளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான விண்கற்கள் பூமியில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் புதனிலிருந்து (அல்லது வெள்ளியிலிருந்து) வந்ததாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
பூமியில் காணப்படும் ‘ஆப்ரைட்ஸ்’ (aubrites) எனப்படும் ஒரு வகை அரிய விண்கற்கள், ஆதி-புதனின் துண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தக் கருத்து ஒரு “தொலைதூர ஊகம்” என்று மோர்பிடெல்லி கூறுகிறார். எனினும், ஆதி-புதனில் இருக்கக்கூடும் என்று நாம் நினைக்கும் வேதியியல் மற்றும் கனிமவியல் பண்புகள் இந்த விண்கற்களில் இருப்பதால் இது ஒரு ஈர்க்கக்கூடிய கருத்தாக உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
புதனின் துண்டுகள்
பிரான்சின் லோரெய்ன் பல்கலைக்கழகத்தின் காமில் கார்டியர், இந்த விண்கற்களை ஆய்வு செய்து வருகிறார். அவரிடம் சுமார் 20 வெவ்வேறு ‘ஆப்ரைட்’ மாதிரிகள் உள்ளன. இவை உண்மையில் புதனின் துண்டுகளா என்பதை அவர் ஆய்வு செய்வார்.
“இந்தக் கருதுகோளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எங்களிடம் உறுதியான சான்றுகள் இருக்கும்,” என்கிறார் கார்டியர்.
புதனின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், பொதுவாகக் கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கோள் ஒரு விபத்தா, அல்லது நமது சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட ஒரு தற்செயலான அதிவேக மோதலின் முடிவா, அல்லது இது போன்ற கோள்கள் பிரபஞ்சத்தில் பொதுவானவையா?
“ஒருவேளை புதன் ஒரு அரிய பொருள் அல்ல, அது கோள் உருவாக்கத்தின் இயல்பான விளைவாக இருக்கலாம்,” என்கிறார் டோசி.
தற்போதைக்கு, புதனின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது. ஏன் நமது சூரிய மண்டலத்தில் இவ்வளவு சிறிய, உலோகங்கள் நிறைந்த ஒரு கோள் உள்ளது? மற்ற நட்சத்திரங்களுக்கும் தங்களது சொந்தப் புதன் கோள்கள் உள்ளனவா?
மேலோட்டமாகப் பார்த்தால், புதன் ஒரு சாம்பல் நிற உலகம் போலத் தெரியலாம். ஆனால் ஆழமாகப் பார்த்தால், இந்த மர்மமான உலகம் சூரிய மண்டலத்தின் மிகவும் வசீகரிக்கும் இடங்களில் ஒன்றாக இருக்கலாம்.
“புதன் என்பது ஒரு சாத்தியமற்ற கோளாக இருக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் ஸ்கோரா. “பெரும்பாலான காலவரிசைகளில் அது இருக்கவே கூடாது, ஆனால் நமது சூரிய மண்டலத்தில் அது இருக்கிறது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு