• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

புதினுடனான அலாஸ்கா சந்திப்பு டிரம்பின் நன்மதிப்பை குறைத்துவிட்டதா?

Byadmin

Aug 17, 2025


காணொளிக் குறிப்பு, உலகமே உற்று நோக்கிய டிரம்ப், புடின் இடையேயான அலாஸ்கா பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது.

புதினுடனான அலாஸ்கா சந்திப்பு டிரம்பின் நன்மதிப்பை குறைத்துவிட்டதா?

உலகமே உற்று நோக்கிய டிரம்ப், புடின் இடையேயான அலாஸ்கா பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புடினும் யுக்ரேன் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எட்டாமலேயே அலாஸ்காவிலிருந்து கிளம்பினர்.

மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மூன்று பிபிசி செய்தியாளர்கள், இந்த சந்திப்பால் டிரம்ப், புடினுக்கு என்ன பலன் மற்றும் யுக்ரேனில் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

இந்த சந்திப்பு டிரம்பின் நன்மதிப்பை குறைத்துவிட்டது என வட அமெரிக்க பிபிசி செய்தியாளர் அந்தோணி ஸுர்ச்சர் (Anthony Zurcher) குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை எந்த முடிவும் இல்லை என சந்திப்பு முடிந்த பிறகு டிரம்ப் கூறினார்.

இது பல மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எந்த ஒப்பந்தமும் இல்லை, போர் நிறுத்தமும் இல்லை என்பதை சுற்றி வளைத்து கூறும் வழியாகும். உறுதியான தகவல்கள் எதுவுமே இல்லை.

பேச்சுவார்த்தையில் தானும் புடினும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாக டிரம்ப் கூறினார். ஆனால் அவை என்னவென்ற தகவலும் இல்லை, அது உலகத்தின் கற்பனைக்கே விடப்பட்டுள்ளது.

பின்னர் ஒப்பந்தம் எட்டவில்லை என்று கூறி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்றார் டிரம்ப்.

மிக நீண்ட தூரம் பயணித்த டிரம்ப் இத்தகைய விவரிக்க முடியாத பதிலைக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் எதிர்கால பேச்சுவார்த்தைகளை மட்டுப்படுத்தும் ஒருதலைபட்சமான சலுகைகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ டிரம்ப் வழங்கவில்லை என்பதால் யுக்ரேன் அதிகாரிகளும் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளும் நிம்மதியாக இருக்கலாம்.

தன்னை அமைதியை ஏற்படுத்துபவராகவும் ஒப்பந்தங்களை மேற்கொள்பவராகவும் காட்டிக் கொள்ளும் டிரம்ப் அலாஸ்காவிலிருந்து எதுவுமே இல்லாமல் திரும்பிச் செல்கிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா, யுக்ரேனை விட டிரம்ப் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற போதிலும், இந்த சந்திப்பு தோல்வியடைய 25% வாய்ப்பு மட்டுமே உள்ளது என்ற டிரம்பின் முந்தைய உத்தரவாதத்தால் அவரின் உள்ளூர் மற்றும் சர்வதேச கௌரவம் சற்று அடிபட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் மிகப்பெரிய கேள்வி ஒன்று இருந்தது. அது, தற்போது டிரம்ப் ரஷ்யாவுக்கு தண்டனையாக அச்சுறுத்திய புதிய பொருளாதார தடைகளை விதிப்பாரா என்பதுதான்.

இந்த கேள்விக்கு ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) பேட்டியில் ஓரளவு பதிலளித்தார் டிரம்ப். அத்தகைய நகர்வுகளை எடுப்பது பற்றி, இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன் எனத் தெரிவித்தார். ஆனால் ரஷ்யா போர் நிறுத்தம் மேற்கொள்ளவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் இத்தகைய தெளிவில்லாத பதில் நிறைய கேள்விகளை எழுப்பலாம்.

இந்த சந்திப்பு மூலம் புடினுக்கு உலகளாவிய ஊடக வெளிச்சம் கிடைத்ததாக பிபிசி ரஷ்ய ஆசிரியர் ஸ்டீவ் ரோசென்பெர்க் கூறுகிறார்.

ஒரு நிகழ்வில் கேள்விகளே இல்லையென்றால் அது செய்தியாளர் சந்திப்பாக இருக்க முடியாது

புடினும் டிரம்பும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்த பிறகு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சென்றதும் அரங்கில் ஒரு ஆச்சர்யமான உணர்வு நிலவியது. ரஷ்ய அதிகாரிகளும் செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் உடனடியாக கலைந்து சென்றனர்.

யுக்ரேனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக புடினுக்கும் டிரம்புக்கும் இடையே தற்போதும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

ரஷ்யா போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் புடின் அதனை செய்யவில்லை.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் வேறு விதமான சூழல் இருந்தது. புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கினார் டிரம்ப். ரஷ்ய அதிபரை ஒரு கௌரவ விருந்தினர் போல நடத்தினார் டிரம்ப்.

ஆனால் நடந்த விஷயங்களுக்கு டிரம்ப் எப்படி எதிர்வினையாற்றுவார் என்கிற கேள்வி உள்ளது. யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர புடினை அவரால் இன்னும் சம்மதிக்க வைக்க முடியவில்லை.

அடுத்தது என்ன நடக்கும் என்கிற அச்சம் யுக்ரேனுக்கு உள்ளதாக பிபிசி மானிட்டரிங் ரஷ்ய ஆசிரியர் விட்டலி ஷெவ்செங்கா கூறுகிறார்.

அலாஸ்காவில் நடந்தவை போரை இறுதி கட்டத்தை நோக்கி நகர்த்தவில்லை என பலரும் உணரலாம். ஆனால் யுக்ரேன் நிலங்களை இழக்கக் கூடிய எந்த ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை என அந்நாட்டில் நிம்மதியான ஒரு சூழல் நிலவும்.

ரஷ்யாவுடனான அனைத்து ஒப்பந்தமும் முறிந்துவிட்டதை யுக்ரேன் மக்கள் அறிவார்கள், எனவே அலாஸ்காவின் புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டாலும் அதனை சந்தேகத்துடனே பார்ப்பார்கள்.

ஆனால் இரு தலைவர்களின் கூட்டு சந்திப்பில், இந்த மோதலின் முதன்மை காரணங்கள் பற்றி புடின் பேசியதாலும் அதனை நீக்குவது தான் நிலைத்த அமைதிக்கு வழிவகுக்கும் எனக் கூறியதாலும் யுக்ரேனியர்கள் எச்சரிக்கை உடனே இருப்பார்கள்.

இது, யுக்ரேனை சுதந்திரமான நாடு என்கிற நிலையிலிருந்து அகற்ற வல்ல சிறப்பு ராணுவ நடவடிக்கை என்கிற நோக்கத்தை புடின் பின்தொடர தீர்மானத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. மூன்றரை ஆண்டுகால மேற்கத்திய முயற்சிகள் புடினின் மனதை மாற்றுவதில் தோற்றுவிட்டன, தற்போது அதில் அலாஸ்கா உச்சிமாநாடும் அடங்கும்.

இந்த சந்திப்புக்கு பிறகு தொடரும் நிலையற்றத்தன்மையும் கவலையளிக்கிறது. அடுத்து என்ன நடக்கும், ரஷ்யாவின் தாக்குதல்கள் குறையாமல் தொடருமா என்கிற கேள்விகளும் உள்ளன.

கடந்த சில மாதங்களாக பல மேற்கத்திய நாடுகளின் காலக்கெடு கடந்தாகிவிட்டது. ஆனால் எந்த அச்சுறுத்தலும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதை புடின் தனது தாக்குதல்களைத் தொடர்வதற்கான அனுமதியாகவே யுக்ரேனியர்கள் பார்க்கிறார்கள். அலாஸ்காவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையும் யுக்ரேனியர்கள் அதே கோணத்தில் தான் பார்ப்பார்கள்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin