1
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் நுழைவு மற்றும் வெளியேறும் முறை (EES) முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று விமானத் துறை தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த முறை இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்தால், கோடை விடுமுறை காலத்தில் பயணிகள் நான்கு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நீண்ட காத்திருப்பு நேரத்தை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது இந்தத் திட்டம் பகுதியளவில் செயல்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, பயணிகள் இரண்டு மணிநேரம் வரை தாமதத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் நுழைவுத் திட்டத்தின் படி, இங்கிலாந்து பயணிகள் ஷெங்கன் பிராந்தியத்துக்குள் முதல் முறையாக நுழையும் போது கைரேகைகள் மற்றும் முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், விமான நிறுவனங்கள் பயணிகள் அதிகமான தாமதத்தையும் நீண்ட நேர காத்திருப்பையும் சந்திப்பதாகவும், இது பயண அனுபவத்தில் சிரமங்களை உருவாக்குவதாகவும் கவலை வெளியிட்டுள்ளன.