புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ வழக்கில் கைதாகி உள்ள உதவித் தலைமை ஆசிரியரை விடுவிக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரிமளம் அருகே ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் பெருமாள் (58), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘உதவித் தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் மூலம் பொய் புகார் அளிக்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி அப்பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்தப்புலிக்குடியிருப்பில் இன்று (பிப்.20) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பேச்சுவார்த்தை நடத்தினார். மறியல் போராட்டத்தால் அரிமளம், கே.புதுப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.