புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் வரும் 27-ம் தேதி போராட்டம் நடத்த பொதுநல அமைப்புகள் முடிவு எடுத்துள்ளன.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, கடந்த வாரம் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது. காரைக்கால் மாவட்ட மக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது.
இந்நிலையில், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேரு எம்எல்ஏ தலைமையில் நடந்தது. தமிழர் களம் அழகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விசிசி நாகராஜன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ, மக்கள் மன்றம் நாராயணசாமி உட்பட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 25-ம் தேதி டெல்லிக்கு 154 பேர் ரயில் மூலமும், 50 பேர் விமானத்திலும் சென்று டெல்லி ஜந்தர் மந்திரில் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டம் நடத்துவது. புதுவை மாநில மக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதியை மத்திய அமைச்சர்களிடம் வழங்கி மாநில அந்தஸ்தை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.