• Thu. Jun 19th, 2025

24×7 Live News

Apdin News

‘புதுச்சேரியில் விரைவில் 6,000 விவசாயிகளின் பம்புசெட்டுகளில் இலவச சோலார் பேனல்” – முதல்வர் தகவல் | “Free Solar Panels to Installed Pump Sets of 6,000 Farmers on Puducherry Soon” – CM Informs

Byadmin

Jun 18, 2025


புதுச்சேரியில் விரைவில் 6,000 விவசாயிகளின் பம்புசெட்டுகளில் இலவச சோலார் பேனல் அமைக்கவுள்ள தாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை மூலம் ‘என் வீடு என் நலம்’ திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள விதை, பூச்சி மருந்து, உரம் உட்பட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மாடித் தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் 3 ஆயிரம் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியது: “புதுச்சேரியில் நகரமயமாக்கதால் செடி, மரங்களை காணமுடியவில்லை. மரம் நட இடம் இல்லை. ஆனால் வீட்டில் கார், மோட்டார் சைக்கிள் நிற்கிறது. இருக்கின்ற இடத்தில் செடிகளை நட, தோட்டம் வைக்க இத்திட்டத்தை தொடங்குகிறோம். மாடித்தோட்டம் வைப்பது ஒரு கலை. தற்போது காய்கறி விளைவிக்க இத்திட்டத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி சாகுபடி செய்யும் சாதனங்களை தருகிறோம். இதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

விவசாயிகள் பம்ப் செட்டுகளில் சோலார் பேனல் இலவசமாக அமைக்கவுள்ளோம். அப்படி அமைத்தால் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முதல்கட்டமாக 6 ஆயிரம் விவசாயிகளுக்கு தரவுள்ளோம். கட்டணமில்லாமல் மின்சாரம் கிடைக்கிறது. விரைவில் இத்திட்டம் தொடங்கவுள்ளோம்.

அதேபோல் பால் உற்பத்தியை பெருக்க கவனம் செலுத்த வேண்டும். தற்போது ஒரு லட்சம் லிட்டர் பால் தினமும் தேவைப்படுகிறது. ஆனால் 45 ஆயிரம் லிட்டர் பால் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. படித்த இளையோர், கறவை மாடுகள் வாங்கி பால் உற்பத்தி பெருக்க நடவடிக்கை ஈடுபடலாம். இதற்கு துறைகள் இணைந்து செயல்படவேண்டும். மானியத்தில் மாடு வாங்கித் தரலாம். இதன் மூலம் வருவாயயை பெருக்க முடியும்.

சுயஉதவிக் குழுக்கள் தின்பண்டம் பொருட்களை உற்பத்தி செய்ய கடனுதவி செய்கிறோம். இவ்வாறாக மானியம், கடனுதவி தரும்போது புதுச்சேரியில் பணப் புழக்கம் ஏற்படும். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். இதற்கு மத்திய அரசு உதவி அளிப்பது முக்கியக் காரணம்.

உள்கட்டமைப்பை மேம்படுத்த பொதுப்பணி, உள்ளாட்சித்துறை மூலம் ரூ.200 கோடியில் பணிகளை தொடங்க உள்ளோம். வீடு இல்லாதவர்களுக்கு நகர பகுதியில் 484 வீடுகளை வழங்க உள்ளோம். இதற்காக குமரகுரு பள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் நட்சத்திர விடுதிகளுக்கு இணையாக கட்டப்பட்டள்ளது. லாம்பர்ட் சரவணன் நகரிலும் வீடுகள் வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் அரசு திட்டம் மூலம் எந்த பயனும் பெறாத சிவப்பு ரேஷன் அட்டைத்தாரர் மகளிருக்கு போல் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ருபாயும் அறிவித்து விட்டோம். புதுச்சேரி பசியில்லாதோர் மாநிலமாகவுள்ளது. அதேபோல் ரேஷனில் இலவச அரிசி தருகிறோம். விரைவில் 2 கிலோ கோதுமை தரவுள்ளோம்.

மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ரேஷனில் அரிசி கேட்டதை செயல்படுத்தி நல்ல அரிசி தருகிறோம். யாரும் இதுவரை ரேஷன் அரிசியை குறை கூறவில்லை. ஏழை மக்களுக்கு பசியில்லா நிலைக்காக இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இன்னும் மத்திய அரசின் நிதி தேவை. அதை கேட்டு பெற வேண்டும். இல்லாவிட்டால் அதிக வரி போடவேண்டிய நிலை வந்துவிடும்.

அரசு பணிகளில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு வேலை தரப்பட்டு வருகிறது. நிறைய அரசு பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் பிரச்சினை இல்லாத நிலைக்காக அனைத்து துறைகளிலும் பணியிடம் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பயன் கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் கிடைக்கிறது. வெளியே சென்று வாங்கி கொள்ளுங்கள் என்று செல்லும் நிலை இல்லை.

சென்னைக்கு செல்லாமல் புதுச்சேரியில் மருத்துவம் பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். மருத்துவக் கல்விக்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவதுபோல அனைத்து கல்வியிலும் 10 சதவீத ஒதுக்கீடு வழங்க உள்ளோம். புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி தருவதற்கு நன்றி” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

பின்னர் பேரவைத் தலைவர் செல்வம் பேசுகையில், “இந்த பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களை யும் அரசு நிறைவேற்றியுள்ளது. இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம். 486 பதவிகளை விரைவில் அரசு நிரப்ப உள்ளது. எல்டிசி, யூடிசி பணிக்கான தேர்வை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், எம்எல்ஏ அனிபால் கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



By admin