புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் தலைவரை தேர்வு செய்யும் பணி இழுபறியாக நீடிக்கிறது. தலைவர் பதவிக்கான போட்டியில் பலரும் இறங்கியதால் தலைவரை தேர்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என பாஜக அகில இந்திய தலைமை முடிவு செய்தது. சில நாட்கள் முன்பு புதுச்சேரி மாநில பாஜக மையக்குழு மேலிட பொறுப்பாளர் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா இன்று மீண்டும் புதுவைக்கு வந்தார்.
ஹோட்டல் அக்கார்டில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகளை சந்தித்து சுரானா பேசினார். வரும் 29 ஆம் தேதி புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கலும் 30 ஆம் தேதி தேர்தலும் நடைபெறும் என தெரிகிறது. ஒருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்வார் என்பதால் மறுநாள் 30 ஆம் தேதி புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவர் அறிவிக்கப்படுவார். மாநில தலைவரை இறுதி செய்வது குறித்து மேலிட பொறுப்பாளர் சுரானா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.