பட மூலாதாரம், AKASH LAMA
பிகாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த தலமான புத்த கயாவில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பௌத்த துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கை என்னவென்றால், பிடி (BT) சட்டம் அதாவது புத்தகயா கோவில் சட்டம், 1949 ரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புத்த கயா கோவில் மேலாண்மைக் குழுவில் (பிடிஎம்சி) பௌத்தர்களையும் இந்துகளையும் உறுப்பினர்களாக ஆக்குவதற்கான ஒரு விதி உள்ளது, இதை பௌத்த பிக்குகள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர்.
முன்னதாக மகாபோதி கோவிலுக்கு அருகில் பௌத்த பிக்குகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் பிப்ரவரி 27 அன்று நிர்வாகம் அவர்களை மகாபோதி கோவில் வளாகத்திலிருந்து அகற்றியது.
இப்போது இந்த பௌத்த பிக்குகள் மகாபோதி கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோமுகன் என்ற இடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கயா மாவட்ட மாஜிஸ்திரேட் (டி.எம்) தான், பிடிஎம்சி-இன் அலுவல் ரீதியான தலைவராகவும் உள்ளார். இது குறித்து, கயா டி.எம் தியாகராஜன் எஸ்.எம். பிபிசி இந்தியிடம் பேசினார்.
“பௌத்தர்களின் இந்தக் கோரிக்கை 1990களில் இருந்தே உள்ளது. தற்போது, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
“பிகார் அரசின் உள்துறை பிடிஎம்சி-ஐ நிர்வகிக்கிறது. இது ஒரு கொள்கை முடிவு.” என்றும் அவர் தெரிவித்தார்.
போராட்டத்தின் பின்னணி என்ன?
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED/BBC
பிகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள கயா மாவட்டத்தின் புத்த கயா நகரத்தில், எல்லாம் சாதாரணமாக இருப்பது போலவே தெரிகிறது.
ஆனால், அவ்வப்போது சிறுசிறு குழுக்களாக மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள், “நாங்கள் டோமுகனுக்குப் போக விரும்புகிறோம், எப்படிப் போவது?” என்று உள்ளூர்வாசிகளிடம் கேட்கிறார்கள்.
மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து வந்த பீம்ராவ் சின்சோலே, மகாபோதி கோவில் வளாகத்திற்கு அருகில் எங்களைச் சந்தித்தார்.
அவர் நாக்பூரிலிருந்து பௌத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார், டோமுகனுக்கு எப்படிச் செல்வது என விசாரிக்கிறார்.
“இந்த இயக்கத்தைப் பற்றி நாங்கள் தொலைக்காட்சி மூலம் அறிந்தோம். இப்போது எங்கள் விகாரங்களில் இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மகாராஷ்டிராவிலிருந்து பலர் இங்கு வருவார்கள்” என்று அவர் கூறுகிறார்.
டோமுகனில் அனல் காற்றையும் பொருட்படுத்தாமல் பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டக் களத்தில் சில சமயங்களில் அம்பேத்கரின் புகைப்படமும், சில நேரம் அரசியலமைப்பின் பிரதியையும் காணமுடிகிறது.
இந்த இயக்கத்தை வழிநடத்தும் ஆகாஷ் லாமா, “இது போல, ஒரு மதத்தினரின் இடத்தை வேறொரு மதத்தினர் ஆக்கிரமிப்பது, உலகில் வேறெங்கும் நடப்பதில்லை. மசூதி முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது, கோவில் இந்துகளால் நடத்தப்படுகிறது, குருத்வாரா சீக்கியர்களால் நடத்தப்படுகிறது, ஆனால் மகாபோதி கோவிலை இந்துகள் ஆக்கிரமித்துள்ளனர்.” என்று கூறுகிறார்.
“நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி செய்து வருகிறோம். பிகார் அரசாங்கத்தையும் சிறுபான்மை ஆணையத்தையும் கூட அணுகினோம், ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
உண்மையில், புத்தகயா கோவில் சட்டத்தில் இந்துகள் சேர்க்கப்பட்டதற்கான காரணம், அதன் விதிகள் உருவாக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியில் ஒளிந்துள்ளது.
பட மூலாதாரம், AKASH LAMA
பிடி சட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
புத்தகயாவில் உள்ள போதி மரத்தின் (தாவரவியல் பெயர் – ஃபிகஸ் ரிலிஜியோசா) அடியில் புத்தர் ஞானம் பெற்றார்.
கிமு 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார்.
புத்தகயா கோவில் வலைத்தளம் பின்வருமாறு விவரிக்கிறது,
“13ஆம் நூற்றாண்டில் துருக்கிய படையெடுப்பாளர்களின் தாக்குதல் வரை புத்தகயா கோவில் அதன் ஆதரவாளர்களின் கைகளில் இருந்தது. 1590ஆம் ஆண்டில், காமண்டி கிரி என்ற துறவி புத்தகயாவிற்கு வந்தார். அவர் காலப்போக்கில் மகாபோதி கோவிலைக் கைப்பற்றினார். அவர் தான் மகாவிகாரத்தின் (மகாபோதி கோயில்) சட்டப்பூர்வ வாரிசு என்று உரிமை கோரினார்.”
பின்னர், 1885ஆம் ஆண்டில், ஆங்கில பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எட்வின் அர்னால்ட், மகாபோதி கோவிலை பௌத்தர்களிடம் திருப்பித் தருவது குறித்த கேள்வியை எழுப்பினார்.
இதன் பின்னர், இலங்கையின் அனகாரிக தர்மபாலர் 1891இல் புத்தகயாவிற்கு வந்து மகாபோதி சங்கத்தை நிறுவி, கோவிலின் மீது பௌத்தர்களின் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, இயக்கத்தைத் தொடங்கினார்.
பின்னர் இந்தப் பிரச்னை 1922ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.
ராஜேந்திர பிரசாத் உட்பட பல தலைவர்களின் தலையீட்டிற்குப் பிறகு, புத்தகயா கோவில் மசோதா 1948 அக்டோபரில் பிகார் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 1949இல் நடைமுறைக்கு வந்தது.
1953ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி, முதல் புத்தகயா கோவில் மேலாண்மைக் குழு (பிடிஎம்சி) அதன் செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டது.
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED
புத்தகயா கோவில் சட்ட (பிடி சட்டம்) விதிகளின்படி, புத்தகயா கோவில் மேலாண்மைக் குழுவில் நான்கு பௌத்தர்கள் மற்றும் நான்கு இந்துகள் உட்பட மொத்தம் எட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
இந்தக் குழுவின் அலுவல் ரீதியான தலைவர் கயா மாவட்ட மாஜிஸ்திரேட் ஆவார். அவர் இந்துவாக இருப்பது கட்டாயமாகும்.
கயா மாவட்ட மாஜிஸ்திரேட், இந்து அல்லாதவராக இருந்தால், மாநில அரசு ஒரு இந்து உறுப்பினரை தலைவராக நியமிக்க வேண்டும்.
இருப்பினும், 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மாநில அரசு இந்த சட்டத்தில் திருத்தம் செய்து, மாவட்ட ஆட்சியர் ‘இந்து’வாக இருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்தது.
ஆனால், அந்தக் குழுவில் ‘இந்து’ உறுப்பினர் இருப்பதை பௌத்தர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
‘மடாலயக் குழுவில் பௌத்தர்கள் யாரும் இல்லை’
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED
இந்த சர்ச்சையின் மற்றொரு புறம் புத்தகயா மடாலயம் உள்ளது.
பிடிஎம்சி-யில் உள்ள இந்து உறுப்பினர்களில், ஒரு பதவி புத்த கயா மடாலயத்தின் மடாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, புத்த கயா மடாலயத்தின் உள்பூசல்கள் காரணமாக இந்தப் பதவி காலியாக உள்ளது.
ஆனால், புத்தகயா மடாலயத்தின் தலைமை பூசாரி மற்றும் பெரும்பாலான இந்துக்கள், மகாபோதி கோவில் பகுதியில் புத்தரின் ஆலயம் தவிர, இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் கோவில்களும் இருப்பதாக நம்புகிறார்கள்.
மகாபோதி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோவில்கள் பிடிஎம்சி மற்றும் புத்தகயா மடாலயம் எனும் இரண்டு குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
அதாவது, பௌத்த துறவிகள் மற்றும் பிராமண குருக்கள் என இரு குழுக்கள் கோவில் வளாகத்தில் இருக்கின்றன.
புத்தகயா மடாலயத்தின் நிர்வாகி மஹந்த் விவேகானந்த கிரி, “நாங்கள் பிடிஎம்சி-யில் இருக்கிறோம், ஆனால் பௌத்த மதத்தினருக்கு புத்தகயா மடாலயக் குழுவில் எந்த உரிமையும் இல்லை” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
“அனாகரிக் தர்மபால் வந்தபோது, புத்தகயா மடாலயம் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால், அவர் பௌத்தர்களும் இந்துகளும் வேறுபட்டவர்கள் என்ற கருத்தைப் பரப்பினார். இந்த விஷயத்தில் பல வழக்குகள் இருந்தன, அதில் மடத்திற்கு கோவிலின் மீது உரிமை உண்டு என்று முடிவு செய்யப்பட்டது.”
“பின்னர் 1922ஆம் ஆண்டு, இங்கு ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது, அதன் பிறகு இந்து மகாசபை மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குழு அமைக்கப்பட்டது. ராகுல் சாங்கிருத்யாயன் வந்தார்” என்று மஹந்த் விவேகானந்த கிரி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பின்னர் இந்த இடம், பௌத்தர்கள் மற்றும் இந்துகளுக்கான பொதுவான பாரம்பரிய தலம் என்று நம்பப்பட்டது. அந்த அடிப்படையில், இந்துகள் பிஎம்டிசி-இல் சேர்க்கப்பட்டனர்.”
“சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், நாங்கள் இந்தக் கோவிலை பௌத்தர்களுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் பின்னர் மடாலயத்திற்கும் பௌத்தர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, 1953இல் கோவில் பௌத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.” என்றும் குறிப்பிட்டார்.
‘எங்கள் கடவுள் இங்கே இருக்கிறார்’
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED
வித்யானந்த் பாண்டேவின் குடும்பத்தினர் மகாபோதி கோவிலில் பிண்டதானம் செய்து வருகின்றனர்.
“எங்கள் சிவலிங்கமும், ஐந்து பாண்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இங்கே பிண்ட தானம் செய்கிறார்கள். எங்கள் தாத்தா, தந்தை, நான், என் மகன், அனைவரும் இங்கே பிண்ட தானத்தை செய்து வருகிறோம், தொடர்ந்து செய்வோம். ஆனால் இந்த மக்கள் சனாதன தர்மத்தை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பகவான் புத்தர் யாருடைய குழந்தை?” என்று கேட்கிறார்.
இதற்கிடையில், எதிர்ப்பு தெரிவிக்கும் ஆகாஷ் லாமா, “எங்கள் நினைவுக்காக கூட கேமராவை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது, ஆனால் கோவிலில், பிண்டதானத்துக்கு பிண்டான் என்ற பெயரில் தட்டு (லோட்டா-தாலி) வழங்கப்படுகிறது. இப்போது இஸ்கான் மக்கள் கூட கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த இடம் ஒரு உலக பாரம்பரிய சின்னம், இது மதிக்கப்பட வேண்டும்” என்கிறார்.
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED
பி.டி.எம்.சி.யில் இருந்து இந்து உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவது இது முதல் முறை அல்ல.
முன்னதாக 1992 ஆம் ஆண்டு, ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு வந்த பௌத்த துறவி சராய் சுசாய், இதற்காக ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கினார்.
இம்முறை இயக்கத்தின் அளவு சிறிதாகத் தெரிகிறது, ஆனால் அமெரிக்கா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் லடாக் உட்பட நாட்டின் பல பகுதிகளில் புத்தகயாவில் நடந்து வரும் இயக்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
லடாக்கிலிருந்து போராட்ட இடத்திற்கு வந்த டெச்சின் ஹெஜி, “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக நான் இங்கு வந்துள்ளேன். இது பௌத்தர்களான எங்களுக்கு மிக முக்கியமான இடம். எனவே, பௌத்த கோவிலை பௌத்த மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
இதற்கிடையில், பிப்ரவரி 12 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜெய்வந்தி ஆதவ், “இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. எங்கள் சட்டம் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பின்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மகாபோதி கோவில் பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.
டெல்லியில் கெஜ்ரிவால் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, இந்து தெய்வங்கள் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த ராஜேந்திர பால் கௌதமும் புத்தகயாவை அடைந்திருந்தார்.
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED
“நமது பிரதமர் வெளிநாடு செல்லும் போது, நாங்கள் புத்தரின் நாட்டிலிருந்து வருகிறோம் என்று கூறுகிறார், ஆனால் இங்கு பௌத்தர்களே தங்களது கோவிலின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்” என்று ராஜேந்திர பால் கௌதம் பிபிசியிடம் கூறினார்.
“அரசாங்கமும் பிராமணர்களும் எங்கள் கோவிலை எங்களுக்குத் தர வேண்டும். இது நடக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்.”
“எங்களது பல பௌத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. நாங்கள் புத்தகயா மீதான எங்கள் உரிமைகளைப் பெற விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.
புத்தகயாவில் பௌத்த துறவிகள் போராட்டம் தொடங்கிய பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆசாத்தும் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
பட மூலாதாரம், bbc
‘கோரிக்கை நியாயமானது, ஆனால் வழிமுறை தவறானது’
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED
இந்த இயக்கம் புத்தகயாவில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அகில இந்திய பிக்கு சங்கத்தின் அலுவலகம் வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது.
இங்குள்ள பான்டே பட்டிசியன், “இயக்கத்தின் கோரிக்கை சரியானது, ஆனால் வழிமுறை தவறானது. பிரச்னையைத் தீர்க்க வேறு வழிகள் இருக்கலாம், அதனால்தான் நாங்கள் இந்த இயக்கத்தை ஆதரிக்கவில்லை” என்கிறார்.
புத்தகயாவின் உள்ளூர் மக்கள், குறிப்பாக கோவிலை நம்பி வாழ்வாதாரம் உள்ளவர்கள், பெரும்பாலும் இந்துகள் தான்.
இந்த விஷயத்தில் எந்தவொரு வலுவான எதிர்வினையை வழங்குவதையும் அவர்கள் தவிர்க்கிறார்கள்.
கடந்த 20 வருடங்களாக குதிரை வண்டி ஓட்டி வரும் பாலி சிங், “புத்தர் எங்களுடையவர் என்று இந்த மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்துகளாகிய நாங்களும் சிறுவயதிலிருந்தே அவரை வழிபட்டு வருகிறோம். மற்றவற்றை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
“பௌத்தம், கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் எதுவாக இருந்தாலும், கோவில் இருக்கும், கோவில் இருந்தால், வியாபாரம் தொடரும்” என்று கடைக்காரர் ஷம்பு தாக்கூர் கவலையின்றி கூறுகிறார்.
2002 ஆம் ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாகச் சேர்க்கப்பட்ட மகாபோதி கோவிலைச் சுற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 63 மடங்கள் உள்ளன.
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMED
பிடிஎம்சியின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
தற்போது அதன் செயலாளர் மகாஸ்வேதா மகாரதி ஆவார்.
உறுப்பினர்கள் தம்மதீரு, டி. ஒகோனோகி, கிரண் லாமா, அரவிந்த் குமார் சிங் மற்றும் மிதுன் மஞ்சி.
மிதுன் மஞ்சி, தசரத் மஞ்சியின் மகன் பகீரத் மஞ்சியின் மருமகன் ஆவார்.
பிடிஎம்சியின் முன்னாள் செயலாளரும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவருமான பதந்த் பிரஜ்னஷீல் மகாதேரோ, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
அவர் 1993 இல் பிகாரில் குடியேறி, பிடிஎம்சியை இந்து உறுப்பினர்களிடமிருந்து விடுவிப்பதற்கான இயக்கத்தில் இணைந்தார்.
“முன்பு, செயலாளர்கள் கூட இந்துகளாகவே இருந்தனர், ஆனால் இயக்கங்களின் மூலமாக, செயலாளர்கள் பௌத்தர்களாக மாறத் தொடங்கினர். நான் முதல் பௌத்த செயலாளர்.
செயலாளராக இருந்த போது, மாவட்ட நிர்வாகிதான் பிடிஎம்சியின் உயர் அதிகாரி என்பதையும், அதற்கேற்ப செயல்முறை செயல்படுகிறது என்பதையும் நான் புரிந்துகொண்டேன்” என்று பதந்த் பிரஜ்னஷீல் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பல்வேறு நாடுகளிலிருந்து வரும் நன்கொடைகள் மருத்துவமனைகள் அல்லது பள்ளிகளைத் திறப்பதற்குச் செலவிடப்படுவதில்லை, மாறாக விருந்தோம்பல் மற்றும் பிடிஎம்சியின் ஊழியர்களுக்காக செலவிடப்படுகின்றன.
பிடிஎம்சி முற்றிலும் போலியான பௌத்த நிறுவனம் போன்றது. ஆனால் தற்போது எங்கள் முதன்மையான கோரிக்கை புத்தகயா கோவில் சட்டத்தை ரத்து செய்வதாகும்” என்றும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு