0
இங்கிலாந்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆங்கில கால்வாயில் புலம்பெயர்ந்தோர் படகு ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். மேலும், மூன்று பேர் காணாமல் போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரையான காலப்பகுதியில் சங்கேட் கடற்கரையில், பாஸ்-டி-கலாய்ஸ் அருகே நடந்துள்ளது.
புதன்கிழமை பவுலோன்-சுர்-மேரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரான்ஸ் பிராந்திய அரசு வழக்கறிஞர் லாரன் டூவேட் (Laurent Touvet) இந்த விவரங்களை வெளியிட்டார்.
பலியான மூன்று பேரும் “படகின் அடியில் நசுக்கப்பட்டிருக்கலாம்” என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 38 பேர் பயணம் செய்துள்ளனர். மீட்புப் படையினர், இறந்தவர்களை காலை 5 மணியளவில் கரைக்குக் கொண்டு வந்தனர்.
இந்த மரணங்களுக்கு “கடத்தல்காரர்களின் வலையமைப்புகளே” பொறுப்பு என்று பாஸ்-டி-கலாய்ஸ் மாகாண நிர்வாகம், தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தது.
இந்தச் சம்பவம், இதே பகுதியில் ஒரு நாள் முன்பு நடந்த சிறிய படகு விபத்தில் ஒரு பெண் இறந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நிகழ்ந்துள்ளது.
அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பிறகு விமானம் மூலம் கரைக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டார் என, கென்ட் பொலிஸார் தெரிவித்தனர்.