1
சவுத்எண்ட்-ஆன்-சீயில் (Southend-on-Sea) உள்ள சால்க்வெல் பூங்காவில் (Chalkwell Park) மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (28) மதியம் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் சிக்கிய ஆறு வயது சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூங்காவில் விழுந்த மரத்தை சுமார் 40 முதல் 50 பேர் வரை தூக்க முயன்றதை நேரில் பார்த்த ஒருவர் விவரிக்கையில், மரக் கிளைகளில் குழந்தைகளை சிக்க வைத்ததால் அவர்களில் ஒருவர் இறந்தார்.
அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இஷான் மதன் (வயது 39) என்பவர் சம்பவத்தை விவரிக்கையில், “மரம் முறிந்து விழுந்தது, நான்கு குழந்தைகள் இருந்ததாக நான் நினைக்கிறேன், ஐந்தாவது குழந்தை சற்று தொலைவில் இருந்தது, அவள் ஒரு கிளையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
“அலறல் சத்தம் கேட்டு அனைவரும் மரத்தை நோக்கி ஓடினர். அவர்களில் இருவர் [குழந்தைகள்] ஒரு சிறிய கிளையின் கீழ் இருந்தனர். அவர்கள் எளிதாக மீட்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, ஏனைய இரண்டு பெண்கள், இந்தப் பெரிய மரத்தின் கீழ் சிக்கிக்கொண்டனர்.
“எனவே, நாங்கள் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தோம். பின்னர் விழுந்த மரத்தை மேலே தூக்க முயன்றவர்கள் 40 முதல் 50 பேர் வரை இருந்திருக்க வேண்டும். எங்களுக்கு திகில் ஏற்படுத்தும் வகையில், இந்த இரண்டு சிறுமிகள் அதன் அடியில் சிக்கிக்கொண்டனர். அவர்களின் தாயும் அருகில் இருந்தார். இது மிகவும் கொடூரமானது” என்றார்.
மரம் விழுந்தபோது குழந்தைகள் ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்ததாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக மதன் மேலும் கூறினார்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை பூங்காவில் விசாரணைகள் தொடரும் என்று எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
“சம்பவத்துக்கு முகங்கொடுத்த குடும்பங்கள் கற்பனை செய்ய முடியாத துன்பங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அனைத்தும் அவர்களுடன் உள்ளன” என்று Ch Supt Leighton Hammett நேற்றிரவு கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவளித்து வருகின்றனர். அதே நேரத்தில், அவசர சேவை பதிலளிப்பவர்களுக்கும் ஆதரவு வழங்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தையடுத்து ஐந்து குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று பேர் லேசான காயங்களுடன் காணப்பட்டனர். ஏழு வயது சிறுமி வைத்தியசாலையில் உயிரிழந்தார். ஆறு வயது சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.