அதன் பிறகு, நீர் வரத்தை பொறுத்து, பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டும், அதிகரிக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 790 கன அடியாகவும், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாகவும் இருந்தது.
இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,398 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 32.57 அடியாகவும் இருந்தது. இச்சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று காலை 8 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தனர் நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள்.