– இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2025 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களால் கட்டுப்பணம் வைப்பிலிடப்படுகின்றது.
எதிர்வரும் 17ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 20 ஆம் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஆலோசனைகள் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளன.
336 பிரதேச சபைகளுக்குத் தொகுதி அடிப்படையில் 4 ஆயிரத்த்து 872 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இம்முறை தேர்தல் நடத்தப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் பிரகாரம் 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் தற்போது கோரப்படுகின்றது. நாளைமறுதினம் (12) விண்ணப்பக் கோரல் நிறைவடையும். ஆகவே, சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களிடம் வலியுறுத்துகின்றோம்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கலின்போது பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு மற்றும் இளைஞர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.
புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக போட்டியிட உத்தேசித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் வேட்புமனுப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும்போது தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்கத் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனு நிறைவடைந்து ஓரிரு நாட்களில் தேர்தல் பிரச்சார செலவு தொடர்பில் அறிவிக்கப்படும்.
இந்த விடயம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடுவோம்.
ஏனைய தேர்தல்களை காட்டிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பணிகள் விரிவானவை. ஆகவே, வாக்கெடுப்பு தொடர்பான திகதி எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னரே அறிவிக்கப்படும்.” – என்றார்.
The post “பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் திருப்தியான ஒதுக்கீட்டை வழங்குங்கள்!” appeared first on Vanakkam London.