
பிபிசி நடத்திய புலனாய்வில், ஆண்கள் சிலர் இரவு நேரங்களில் பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிப் பணம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்கள் பெரும்பாலும் “வாக்கிங் டூர்ஸ்” அல்லது “நைட் லைஃப் கன்டென்ட்” என்ற பெயரில் யூடியூப், டிக்டோக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படுகின்றன.
இந்த வீடியோக்கள் முழுவதும் முழங்கால் வரை உள்ள ஆடைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்திருக்கும் பெண்களையே குறிவைக்கின்றன. பல வீடியோக்கள் பெண்களின் பின்னால் இருந்தோ அல்லது தாழ்வான கோணத்திலோ எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு வீடியோ எடுக்கப்பட்ட சுமார் 50 பெண்களை பிபிசி குழுவினர் கண்டுபிடித்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது என்பதை பிபிசி கண்டறிந்தது. இது குறித்து அறிந்தபோது அவர்கள் அச்சத்தையும் அவமான உணர்வையும் வெளிப்படுத்தினர்.
தன்னுடைய ஸ்கர்ட்டுக்கு அடியில் தாழ்வான கோணத்தில் வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கூறுகையில், தனது அனுமதியின்றி இந்த வீடியோ பதிவேற்றப்பட்டதைப் பார்த்ததில் இருந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தார். இப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் தனக்கு ஒரு வித பயம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
இந்த வகையான வீடியோக்களைப் பதிவிடும் 65க்கும் மேற்பட்ட இணைய சேனல்களை பிபிசி அடையாளம் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த வீடியோக்கள் ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன.
லண்டன், ஓஸ்லோ, மியாமி, பாங்காக் போன்ற உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இரவுநேர பொழுதுபோக்கு இடங்களை மையமாகக் கொண்டு இத்தகைய வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், பிரிட்டனின் மான்செஸ்டர் நகரம் இதற்கு மிகவும் பிரபலமான இடமாக உள்ளது.
எங்கள் குழு அந்த நகரத்தில் ரகசியமாகச் சென்று சோதனையிட்டது. அப்போது இரவு நேரங்களில் பெண்களுக்குத் தெரியாமல் அவர்களைப் படம் பிடித்த ஆண்களை நாங்கள் வீடியோ எடுத்தோம். இதன் மூலம் 12 கணக்குகளுடன் தொடர்புடைய மிக முக்கியமான நபர்களை நாங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தோம்.
இதில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரும், பிரிட்டனில் வீடியோ எடுப்பதற்காக ஸ்வீடனில் இருந்து வந்திருந்த இரண்டு ஆண்களும் அடங்குவர். நார்வே மற்றும் மொனாக்கோவில் வசிப்பதாகக் கூறிக் கொள்ளும் வேறு இரண்டு ஆண்களும் இந்தச் செயலில் ஈடுபட்டதைக் கண்டோம். ஆனால் அவர்களின் அடையாளங்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
பெண்கள் பொது இடங்களில் தங்கள் அனுமதியின்றி ஆண்களால் லாப நோக்கத்திற்காகப் படம் பிடிக்கப்படுகிறார்கள் என்பதற்கு எங்களது இந்த விசாரணை மற்றுமோர் உதாரணம்.
பெண்களைக் கவரும் முறைகளைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறிக் கொள்ளும் ‘இன்ஃப்ளுயன்சர்கள்’, ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பெண்களுடனான உரையாடல்களைப் பதிவு செய்து இணையத்தில் பதிவிடுவதை கடந்த மாதம் பிபிசி நடத்திய மற்றொரு புலனாய்வு அம்பலப்படுத்தியது.
இதற்குப் பதிலளித்த உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை அரசு பொறுத்துக் கொள்ளாது என்று கூறினார்.
பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் அல்ல. ஆனால், இது போன்ற வீடியோக்கள் சட்டத்தில் உள்ள ஒரு தெளிவற்ற பகுதிக்குள் வருவதாகவும், இவை துன்புறுத்தல் மற்றும் ‘வாயரிசம்’ (மற்றவர்களின் அந்தரங்கத்தை ரசித்தல்) சட்டங்களை மீறக்கூடும் என்றும் இந்தப் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நாங்கள் யூடியூப் நிறுவனத்திடம் பகிர்ந்த பல வீடியோக்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன. எங்களது விசாரணையின் முடிவுகளைத் தெரிவித்த பிறகு, யூடியூப் தளம் இரண்டு கணக்குகளை மட்டும் முடக்கியது.
டிக்டோக் நான்கு சேனல்களை நீக்கியுள்ளது. ஆனால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோக்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
அக்டோபர் மாத இறுதியில் கிரேஸ் (உண்மையான பெயர் அல்ல), மான்செஸ்டரில் உள்ள ஒரு கிளப்புக்கு வெளியே தனது நண்பரின் 21வது பிறந்தநாளைக் கொண்டாடிப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தங்கை சோஃபியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருந்தார். 18 வயதான சோஃபிக்கு அதுதான் முதல் கிளப் அனுபவம்.
“அதுவொரு சாதாரண இரவு. நாங்கள் வீடியோ எடுக்கப்படுகிறோம் என்ற விஷயமே எங்களுக்குத் தெரியாது,” என்கிறார் கிரேஸ்.
நாங்கள் அவரைத் தொடர்பு கொண்ட பிறகுதான், அந்தத் தருணம் வீடியோவாக எடுக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்டதை அவர் அறிந்தார். அவரது ஸ்கர்ட்டின் உட்புறம் தெரியும்படி எடுக்கப்பட்ட அந்த வீடியோவை இணையத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
“நான் என் உடையை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்தேன். சாதாரணமாகப் பார்க்கும்போது உடல் முழுமையாகவே மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீடியோவில் கோணம் மிகத் தாழ்வாக இருந்தது. அது, அவர் எவ்வளவு நெருக்கமாக வந்திருப்பார் என்று என்னைச் சிந்திக்க வைத்தது” என்கிறார் கிரேஸ்.
சோஃபியும் அந்த வீடியோக்களில் தோன்றினார், ஆனால் அவர் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இருப்பினும், தங்களுக்கு நடந்த இந்தச் சம்பவத்தால் தனது சகோதரியைப் போலவே தானும் “இப்போது மன அழுத்தத்தில் இருப்பதாக” சோஃபி கூறுகிறார்.
“எனக்கு மிகவும் பயமாக இருப்பதால், நான் இப்போது வெளியே செல்வதே இல்லை. இது சாதாரணமான விஷயம் கிடையாது. இது நடந்திருக்கக் கூடாது,” என்கிறார் சோஃபி.

இந்த விசாரணையின்போது நாங்கள் பார்த்த நூற்றுக்கணக்கான வீடியோக்களில், கிரேஸ், சோஃபி போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் “யார் எங்களைப் படம் பிடித்தது, அவர்கள் ஏன் இதைச் செய்தார்கள்?” என்ற ஒரு கேள்விதான் உள்ளது.
பல கணக்குகளால் பதிவேற்றப்பட்ட இத்தகைய வீடியோக்கள் பலவற்றை நாங்கள் கண்காணித்தோம். இதில் மிகவும் பிரபலமான சில சேனல்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
இந்த வீடியோக்களின் ‘முகப்புப் படம்'(Thumbnail) பெரும்பாலும் ஸ்கர்ட்கள் மற்றும் ஹை-ஹீல்ஸ் காலணி அணிந்த இளம் பெண்களைக் குறிவைத்தே வைக்கப்படுகின்றன. வீடியோவில் பெண்கள் இடம் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தலைப்புகளும் கொடுக்கப்படுகின்றன.
மான்செஸ்டரில் எடுக்கப்பட்ட பல வீடியோக்களில், பெண்கள் கிளப்புகளுக்கு இடையே நடப்பதையும், நடைபாதையில் அமர்ந்திருப்பதையும் காட்டியுள்ளனர். குறிப்பாகப் பெண்கள் தங்கள் ஆடைகளைச் சரி செய்யும்போதோ அல்லது ஸ்கர்ட்டை கீழே இழுத்து விடும்போதோ கேமரா அங்கேயே நிலைத்து நிற்கிறது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழே நூற்றுக்கணக்கான பெண் வெறுப்புக் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
“இந்தப் பெண்கள் ஆடை அணிந்திருப்பதைப் பாருங்கள், இவர்கள் தாக்கப்படுவதில் ஆச்சரியமில்லை” என்று ஒருவர் சிரிக்கும் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
“இவர்கள் தெருக்களுக்குச் சொந்தமானவர்கள்”, “செல்லுலைட்டிஸ் நைட் அவுட்”, “குட்டிப் பன்றிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன” போன்ற கமென்ட்கள் அந்த வீடியோக்களின் கீழே காணப்பட்டன.
வீடியோவில் உள்ள பெண்களை எங்களால் எளிதாக அடையாளம் காண முடிந்தது, ஆனால் சேனல்களை நடத்துபவர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. அவர்கள் தங்கள் உண்மையான பெயர்களைப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும், பொதுவான தரவுகளைப் பயன்படுத்தி சிலரை நாங்கள் அடையாளம் கண்டோம்.

கிரேஸ் மற்றும் சோஃபியின் வீடியோவை வெளியிட்ட சேனலை புளோரியன் ரேகா என்ற 35 வயது நபர் நடத்துகிறார். இவர் ஸ்வீடனில் வசிப்பவர்.
இவருடைய யூடியூப் சேனல் 200 மில்லியன் பார்வைகளையும், 3,99,000 சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. பேஸ்புக்கில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்கின்றனர். ஸ்வீடனில் தனது சேனலை ஒரு வணிக நிறுவனமாகப் பதிவு செய்துள்ள இவர், தான் “இன்ஃப்ளுயன்சர் செயல்பாடுகள் மற்றும் விளம்பரத் துறையில்” இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதைப் பார்க்க, மான்செஸ்டர் நகரில் பரபரப்பான ஹாலோவீன் வார இறுதியில் நாங்கள் ரகசியமாகக் கண்காணித்தோம்.
முதல் நாள் மணிக்கணக்கில் காத்திருந்த பிறகு, மதியம் 2:00 மணி அளவில் ரேகா மற்றொரு மனிதருடன் வேகமாக நடந்து செல்வதைக் கண்டோம். பின்னர் அந்த நபரை அவரது சகோதரர் ரோலண்ட் என்று அடையாளம் கண்டோம்.
ஒரு கட்டத்தில், சகோதரர்கள் இருவரும் இடுப்புக்கு அருகில் வைத்து தங்கள் போன்களைப் பார்ப்பது போல நடித்தனர். ஆனால் உண்மையில் அவர்கள் கேமராக்களை அதே உயரத்தில் பிடித்து, தங்களைக் கடந்து செல்லும் பெண்களைப் படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் இருவரும் வெவ்வேறு கிளப்புகளுக்கு வெளியே பிரிந்து சென்று பெண்களைப் படம் பிடித்தனர். இரண்டாவது நாள் இரவு, மாறுவேடத்தில் இருந்தவர்களோடு கலப்பதற்காக அவர்கள் கருப்பு முகமூடிகளை அணிந்திருந்தனர்.
அடுத்த சில நாட்களில், மான்செஸ்டர் தெருக்களில் எடுக்கப்பட்ட புதிய வீடியோக்கள் புளோரியன் ரேகாவுக்கு தொடர்புடைய சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றப்பட்டன. அந்த வீடியோக்கள் அவர்கள் நின்றிருந்த அதே கோணத்தில் எடுக்கப்பட்டிருந்ததை நாங்கள் உறுதி செய்தோம்.
ரோலண்ட் , ரேகாவுடன் தொடர்புடைய ஒரு சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவின் தொடக்கத்தில், ஒரு பெண் நழுவி விழுந்த தனது ஸ்கர்ட்டை மேலே இழுக்க முயல்வது தெரிகிறது. மற்ற வீடியோக்களில், பெண்கள் நடந்து செல்லும்போது அவர்களின் பின்புறத்தை தாழ்வான கோணத்தில் கேமரா படம்பிடித்துள்ளது. புளோரியன் ரேகாவின் பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஒரு வீடியோ, ஒரு பெண் தனது மேலாடையைச் சரிசெய்யும்போது கேமரா அவரது மார்புப் பகுதியை நீண்ட நேரம் காட்டுகிறது.
இந்த வீடியோக்கள் எதிலுமே, தாங்கள் படம் பிடிக்கப்படுகிறோம் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியாது.
ஹாலோவீன் வார இறுதிக்குப் பிறகு, இது குறித்து கருத்து கேட்க புளோரியன் ரேகாவை தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் பதிலளிக்காததால், அவரை நேரில் சந்திக்க ஸ்வீடன் சென்றோம். இரண்டு முறையும் அவர் எங்களது கேள்விகளைப் புறக்கணித்தார். அவருக்கு நாங்கள் விட்டுச் சென்ற கடிதத்திற்கும் அவர் பதில் கூறவில்லை.

மான்செஸ்டர் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது, இன்னும் மூன்று ஆண்கள் பெண்களைப் படம்பிடிப்பதைக் கண்டோம். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கிறது. ரேகா சகோதரர்களுடனும் அவர்கள் அந்த இரவு முழுவதும் அவ்வப்போது பேசிக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர் டீன் ஹில், உள்ளூரில் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரியும் 36 வயது நபர். அவர் தனது நெஞ்சுக்கு அருகில் ஒரு சிறிய கேமராவை வைத்துக்கொண்டு, பெண்களின் கூட்டத்தைக் கடந்து செல்லும்போது அவர்களைப் படம் பிடிப்பதையும், பிறகு மீண்டும் திரும்பி வந்து அவர்களைப் பின்னால் இருந்து வீடியோ எடுப்பதையும் பார்த்தோம்.
அவர் பதிவு செய்துள்ள நூற்றுக்கணக்கான மணிநேர வீடியோக்களை பிபிசி பார்வையிட்டது.
ரேகா சகோதரர்களின் பதிவுகளைப் போலவே, பெண்களின் ஸ்கர்ட் மேலே ஏறும்போது அல்லது அவர்கள் உடையைச் சரிசெய்யும்போது டீன் ஹில் அவர்களைப் பின்தொடர்ந்து படம்பிடித்துள்ளார். ஒரு வீடியோவில், ஹாலோவீன் உடை அணிந்த ஒரு பெண்ணை சுமார் இரண்டு நிமிடங்கள் அவர் கேமராவுடன் பின்தொடர்கிறார். ஒரு கட்டத்தில் அவரைப் பிடிப்பதற்காக வேகமாக நடப்பதும் தெரிகிறது.
ஆனால், டீன் ஹில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என திட்டவட்டமாக மறுக்கிறார். தான் தனிநபர்களையோ அல்லது அந்தரங்க உறுப்புகளையோ படம்பிடிப்பதில்லை என்றும், தனது கேமரா எப்போதும் மற்றவர்களுக்குத் தெரியும் வகையிலேயே இருப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.
“நான் ஸ்கர்ட்டுக்கு அடியில், அந்தரங்க உறுப்புகளையோ அல்லது எந்தவிதமான நிர்வாணத்தையோ படம்பிடிப்பதில்லை. நான் வக்கிரமான முறையில் வீடியோ எடுப்பதில்லை, எனது வீடியோக்களில் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் இல்லை,” என்று அவர் ஒரு குறுஞ்செய்தியில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த வீடியோக்கள் யாரையும் குறிவைப்பதில்லை. படம்பிடிக்கும் நேரத்தில் பொது இடங்களில் யார் இருக்கிறார்களோ அவர்கள் வீடியோவில் வருகிறார்கள். சில கன்டென்ட் கிரியேட்டர்ஸ் தவறான செயல்களில் ஈடுபடலாம், ஆனால் எனது சேனல் அப்படிப்பட்டதல்ல. இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தக் கருத்தும் உண்மையானது அல்ல,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
நாங்கள் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்ட மற்றொரு நபரும் (அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை), எந்தத் தவறும் செய்யவில்லை, விதிகளை மீறவில்லை என்று கூறினார். தான் இரவு வாழ்க்கை மற்றும் வாக்கிங் வீடியோக்களை மட்டுமே எடுப்பதாகக் கூறிய அவர், தற்போது தனது பதிவுகளில் பலவற்றை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் விசாரணை செய்த இந்த நபர்கள் எவர் மீதும் காவல்துறை இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.
இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்வது போன்ற வீடியோக்கள் படமாக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை 2024ஆம் ஆண்டில் பின்தொடர்தல் மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்தது.
நாட்டில் இதுபோன்ற முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்பட்டது. ஆனால், “தற்போதைய சட்டத்தில் உள்ள வரம்புகள்” காரணமாக சந்தேக நபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், மேலும் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க “சிவில் வழிகளை” ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறை இந்த மாதம் கூறியது.
பெண்களை ரகசியமாகப் படம்பிடிக்கும் இந்தத் தொழில் மூலம் “பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படலாம்” என சர்ரே பல்கலைக் கழகத்தின் டிஜிட்டல் பொருளாதார மைய இயக்குநரான பேராசிரியர் அனபெல் கவெர் கூறுகிறார்.
“ஒட்டுமொத்தமாகப் பல நூறு கோடி பார்வைகளைப் பற்றி நாம் பேசுகிறோம்,” என்று கூறும் அவர், ஒரு மில்லியன் பார்வைகளைப் பெறும் ஒரு வீடியோ மூலம் சுமார் 5 லட்சம் ரூபாய் (5,000 பவுண்ட்) வரை சம்பாதிக்க முடியும் என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் சட்டப்படி, பொது இடங்களில் வீடியோ எடுப்பது சட்டவிரோதமானது கிடையாது. ஆனால், தாங்கள் வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த பெண்களிடம் நாங்கள் பேசியபோது, இதன் மூலம் மற்றவர்கள் பணம் சம்பாதிப்பதை எண்ணி மிகுந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.
இது போன்ற வீடியோக்கள் தொடர்பான சட்டங்கள் இன்னும் “தெளிவற்ற நிலையில்” இருப்பதாக பட அடிப்படையிலான பாலியல் அத்துமீறல் சிக்கல்களில் நிபுணத்துவம் பெற்ற மெக்அலிஸ்டர் ஒலிவாரியஸின் வழக்கறிஞர் ஹொன்சா செர்வெங்கா கூறுகிறார்.
“இது துன்புறுத்தல் மற்றும் ‘வாயரிசம்’ போன்ற குற்றங்களோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளதால், சட்டத்தில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி இது வேகமாக வளர்ந்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
துன்புறுத்தல் குற்றமாகக் கருதப்பட வேண்டுமெனில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற வேண்டும். இதை “கோர்ஸ் ஆஃப் கண்டக்ட்” என்று அழைக்கிறார்கள். உதாரணமாக, “தெருவில் தொந்தரவு செய்வதும், பின்னர் இணையத்தில் வீடியோவை பதிவேற்றம் செய்வதும் அல்லது பகிர்வதும்” போன்றவை அனைத்தும் துன்புறுத்தல் குற்றமாகக் கருதப்படும் என்று செர்வெங்கா கூறுகிறார்.
ஒரு பெண்ணின் வீடியோவை பதிவேற்றிவிட்டு, மற்ற வீடியோக்களின் முகப்புப் படமாக அவரது படத்தைப் பயன்படுத்துவதுகூட துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் வரலாம் என்கிறார் அவர்.

எங்களது விசாரணைக்குப் பிறகு, புளோரியன் ரேகாவுடன் தொடர்புடைய இரண்டு கணக்குகளை யூடியூப் முடக்கியுள்ளது. இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த ரேகா, தான் “வாக்கிங் டூர்” வீடியோக்களை மட்டுமே வெளியிடுவதாகவும், தனது கணக்குகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாங்கள் சுட்டிக்காட்டிய பல வீடியோக்கள் இன்னும் யூடியூப்பில் உள்ளன. தங்களது விதிமுறைகளைத் தாங்கள் “தீவிரமாகப் பின்பற்றுவதாகவும்”, 2025 இறுதியில் துன்புறுத்தல் தொடர்பான 18 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது.
நாங்கள் அடையாளம் கண்ட மற்ற ஆண்களின் கணக்குகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. ஒருவர் தனது சேனல் பெயரை மாற்றியுள்ளார், மற்றொருவர் தனது அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிட்டார்.
டிக்டோக் நிறுவனம் நாங்கள் குறிப்பிட்ட நான்கு சேனல்களை நீக்கியுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை இயக்கும் மெட்டாவுக்கு நாங்கள் அனுப்பிய சேனல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. அதன் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை நீக்கியதாக நிறுவனம் எங்களிடம் தெரிவித்துள்ளது.
கிரேஸ் மற்றும் சோஃபியின் வீடியோ தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
இது தங்களுக்குக் கிடைத்த சிறிய வெற்றி என்று அவர்கள் கருதினாலும், இதுவொரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் கிரேஸுக்கு சந்தேகம் உள்ளது.
“என் வீடியோ இன்னும் அவரது போனிலோ அல்லது கணினியிலோ இருக்கும். அதை அவர் மீண்டும் பகிர்வதைத் தடுக்கப் போவது எது?” என்று கேள்வி எழுப்பும் கிரேஸ், “இதை முழுமையாக நிறுத்துவது சாத்தியமில்லை” என்றும் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு