பட மூலாதாரம், Rubaiyat Biswas
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வசிக்கும் பெனி மனாஷே சமூக மக்கள் இப்போது இஸ்ரேலில் குடியேறத் தயாராகி வருகின்றனர். இவர்கள் தங்களை யூத சமூகத்தின் ‘காணாமல் போன பழங்குடியினரின்’ (lost tribes) வம்சாவளியினர் என்று கருதுகின்றனர்.
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பெனி மனாஷே சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் இஸ்ரேலுக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு 2025-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் சிலர் ஏற்கனவே சென்றுவிட்டனர்.
தற்போது இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை சுமார் 5,800 ஆக உள்ளது. இவர்கள் இஸ்ரேல் செல்வதற்கான நடைமுறை 2026 பிப்ரவரி முதல் தொடங்கக்கூடும்.
இந்தச் சமூகம் முக்கியமாக மிசோரம் மற்றும் அண்டை மாநிலமான மணிப்பூரில் வசிக்கிறது.
கடந்த இரு தசாப்தங்களில் சுமார் 4,000 பெனி மனாஷே மக்கள் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர். 2005-ஆம் ஆண்டில் ஒரு முக்கிய ‘ரபி’ (யூத மதகுரு) இந்தச் சமூகத்தை யூத மதத்தின் காணாமல் போன பழங்குடியினராக அங்கீகரித்த பிறகு, இந்தப் பயணம் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மிசோரமில் வசிக்கும் சுமார் 600 பெனி மனாஷே மக்கள் இஸ்ரேல் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஏன் இஸ்ரேல் செல்ல விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி குழு மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்குச் சென்றது.
‘நானும் அங்கேயே இறக்க விரும்புகிறேன்’
பட மூலாதாரம், Rubaiyat Biswas
பெனி மனாஷே சமூகத்தைச் சேர்ந்த 76 வயதான முசை ஹனாம்டே, மிசோரமின் முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் மல்யுத்த வீரர். அவர் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலின் மையப்பகுதியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறார். அவரது வீட்டின் சுவர்களில் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. அவரை நாங்கள் இந்த வீட்டில்தான் சந்தித்தோம்.
அவர் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “நாங்கள் மிசோரமை மிஸ் செய்வோம். இது எங்கள் பிறப்பிடம். ஆனால் இது எங்களின் இறுதி இலக்கு அல்ல. எனவே நாங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்” என்றார்.
இவருடைய பெற்றோர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் சென்றுவிட்டனர். “என் பெற்றோர் அங்கேயே இறந்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். நானும் அங்கேயே இறக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர். இஸ்ரேல் செல்வது என்பது வெறும் பொருளாதார எதிர்காலம் சார்ந்தது மட்டுமல்ல, அது அவர்களின் மத நம்பிக்கை மற்றும் அடையாளம் சார்ந்த முடிவு என்றும் அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இஸ்ரேலில் அரசு அவருக்கு ஓய்வூதியம் வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், அவர் அங்கு சொந்தமாக ஒரு தொழிலையும் தொடங்க விரும்புகிறார்.
பெனி மனாஷே சமூகத்தினர் யார்?
பட மூலாதாரம், Rubaiyat Biswas
பெனி மனாஷே சமூகம் மிசோரமின் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதியாகும். இவர்களுடைய முன்னோர் சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இவர்கள் நம்புகின்றனர். வெளியேற்றத்திற்குப் பிறகு அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து, சீனா வழியாக இந்தியாவின் வடகிழக்கு மலைப்பகுதிகளுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை, வாய்வழி மரபுகள் மூலமே இத்தகவல் கடத்தப்படுகிறது.
எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாதது, இந்த மக்களின் வேர்கள் குறித்த புதிய கூற்றுகள் உருவாகக் காரணமானதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மிசோ அல்லது சின்-குகி சமூகங்களை பண்டைய இஸ்ரேலுடன் இணைக்கும் எந்தவொரு ஆவண ரீதியான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐஸ்வாலின் கவர்மெண்ட் டி ரொமானா கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மல்சாவ்மாலியாமா, “நம்மிடம் எழுத்துப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. இது ஒரு வாய்மொழி வரலாறு. பெனி மனாஷேவின் கூற்றுகள் சில பழக்கவழக்கங்களில் உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இவர்களின் இஸ்ரேலிய பூர்வீகம் குறித்து எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை’ என்று பிபிசியிடம் கூறினார்.
அதே நேரத்தில், மிசோரம் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், யூத மதத்துடனான ஒற்றுமைகளாகக் கூறப்படும் மிருக பலி அல்லது சடங்குப் பாடல்கள் போன்ற பல பழக்கவழக்கங்கள் மலைப்பகுதிகளில் வாழும் சமூகங்களிடையே பரவலாக நடைமுறையில் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், மிசோ சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக யூத மதத்துடன் தொடர்புடைய நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் சில பழக்கவழக்கங்கள் இருப்பதாக பெனி மனாஷே சமூகம் கூறுகிறது.
இருப்பினும், மிசோரமில் முறையான வகையில் யூத மதத்தைத் தழுவியது குறித்த தகவல்கள் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் கிடைக்கின்றன. இதுவும் மிஷனரிகள் மற்றும் மதப் பிரசாரகர்களின் தாக்கத்தின் காரணமாகவே நடந்தது. யூத வழிபாட்டுத் தலமான ‘சினகாக்’ கட்டப்பட்டது. ஹீப்ரு மொழி கற்கப்பட்டது. யூத மத விதிகள் மற்றும் மரபுகள் பின்பற்றப்படத் தொடங்கின.
மிசோரமில் வசிக்கும் பெனி மனாஷே சமூகத்தைச் சேர்ந்த ஜெரேமயா இந்த மாற்றத்தை அரவணைத்துக் கொள்கிறார். அவரைப் பொருத்தவரை, ‘நாங்கள் 1976-ஆம் ஆண்டில் யூத மதத்தைப் பற்றி கற்கத் தொடங்கினோம். 1995-ஆம் ஆண்டு வாக்கில் நாங்கள் யூத மத விதிகளின்படி எங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தொடங்கினோம். நாங்கள் இதற்கு முன்பு விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை, ஆனால் யூத மத விதிகளைப் பற்றித் தெரிந்தபோது நாங்கள் அதைச் செய்துகொண்டோம்’.”
பட மூலாதாரம், Rubaiyat Biswas
காலப்போக்கில், மிசோ பழக்கவழக்கங்களுக்கும் யூத மரபுகளுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறப்படும் இத்தகைய விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றில் பாடல்கள், துதிப் பாடல்கள், பண்டிகைகள் மற்றும் மதச் சடங்குகள் ஆகியவை அடங்கும்.
எழுத்தாளர் பி.சி. பியாக்ஸாமா பிபிசியிடம் கூறுகையில், ‘மிசோ சமூகத்தில் கிறிஸ்தவம் முக்கிய மதமாக உள்ளது. எனவே பெனி மனாஷே சமூகம் முக்கிய நீரோட்ட சமூகத்திலிருந்தும், முக்கிய நீரோட்ட மதத்திலிருந்தும் விலகிச் சென்றது. மிசோரம் நம்முடையது அல்ல, நமது வீடு இஸ்ரேல் என்று அவர்கள் கூறினார்கள். இந்த எண்ணம் 1950-களில் வந்தது. அதற்குள் மிசோரமில் கிறிஸ்தவ மதம் நன்றாக நிலைநிறுத்தப்பட்டிருந்தது,” என்கிறார்.
அவரைப் பொறுத்தவரை, அவர்கள் (பெனி மனாஷே சமூகம்) பைபிளை ஆய்வு செய்து இஸ்ரேலியர்களின் கலாசாரத்தைப் பார்த்தபோது, தாங்கள் யூத மதத்தின் காணாமல் போன பழங்குடியினராக இருக்கலாம் என்று சில பிரிவினருக்குத் தோன்றியது. இந்த உணர்வு சுமார் 70 ஆண்டுகள் பழமையானது.
யூத மரபில், யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்று குடியேறுவது ‘ஆலியா’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஆலியா’ என்பது வெறும் நாட்டை மாற்றுவது மட்டுமல்ல, மத ரீதியாக இஸ்ரேல் மண்ணில் வாழ்வதாகவும் கருதப்படுகிறது.
இஸ்ரேலில் ஒரு சட்டம் உள்ளது. இது ‘லா ஆஃப் ரிட்டர்ன்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ், யூதர்களாகக் கருதப்படுபவர்கள் அங்கு சென்று குடியுரிமை பெறும் உரிமையைப் பெறுகிறார்கள்.
பெனி மனாஷே சமூகம் இதன் அடிப்படையிலேயே இஸ்ரேல் செல்கிறது.
2025-ஆம் ஆண்டு டிசம்பரில், மதகுருக்கள், இஸ்ரேலுக்கான யூத முகமையின் உறுப்பினர்கள் மற்றும் இஸ்ரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகள் பெனி மனாஷே சமூக உறுப்பினர்களை ஆய்வு செய்தனர். செய்திகளின்படி இந்த ஆய்வின் போது மணிப்பூரிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், மிசோரமிலிருந்து சுமார் அறுநூறு பேரும் இஸ்ரேல் செல்வதற்காகத் தங்கள் பெயர்களைக் கொடுத்துள்ளனர்.
ஜெரேமயா கூறுகையில், “ஆய்வில் நாம் யூத மதத்தின் மீதான நமது நம்பிக்கையில் முழுமையாக உறுதியாக இருக்கிறோமா இல்லையா என்பது அறியப்படுகிறது. நமக்கு கிறிஸ்தவ மதத்துடன் எந்தத் தொடர்பும் இருக்கிறதா என்பதும் பார்க்கப்படுகிறது. யூத மதம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதுதான் முதல் நடைமுறை. அதன் பிறகு எங்களது கடவுச்சீட்டு (Passport) தயார் செய்யப்படும். எங்களது பெயர்கள் யூத முகமை மூலம் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அனுப்பப்படும். அதன் பிறகு நாங்கள் எங்கே வசிப்போம் என்பது தீர்மானிக்கப்படும்’ என்றார்.
ஜெரேமயாவும் இஸ்ரேல் செல்வதற்காக நேர்காணலில் பங்கேற்றுள்ளார். சமூகத்தின் சார்பாக அவர் ‘ஆலியா’ நடைமுறையின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். மிசோரமில் அவர் ஒரு அச்சகத்தை நடத்தி வந்தார். இஸ்ரேல் செல்வதற்கான தயாரிப்பிற்காக தனது அனைத்துப் பொருட்களையும் சொத்துகளையும் ஏற்கனவே விற்றுவிட்டதாக ஜெரேமயா கூறுகிறார்.
மறுபுறம், இஸ்ரேல் செல்லும் பெனி மனாஷே சமூகத்தினருக்கு அங்கு வாழ்க்கை எப்போதும் எளிதாக இருந்ததில்லை என்ற செய்திகளும் உள்ளன. அங்கிருக்கும் சமூகத்துடன் ஒன்றிணைவது அவர்களுக்குப் பெரிய சவாலாக இருந்துள்ளது. இந்திய யூதக் குடியேறிகளுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான விவரங்களும் இஸ்ரேலிய ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் ஒப்புதல் மற்றும் திட்டம்
பட மூலாதாரம், Rubaiyat Biswas
ஒரு செய்தியின்படி, பெனி மனாஷே சமூகம் இஸ்ரேல் செல்லும் நடைமுறை பல கட்டங்களாக (stages) முடிக்கப்படும். முதற்கட்டமாக சுமார் 300 பேர் இஸ்ரேல் செல்வார்கள்.
2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 1,200 பேர் இஸ்ரேல் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் அரசாங்கத்தின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 5,800 பேரும் அங்கேயே சென்றுவிட்டிருப்பார்கள்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த நடவடிக்கையை ‘ஒரு முக்கியமான முடிவு’ என்று வர்ணித்துள்ளார். இந்தியாவிலிருந்து செல்லும் பெனி மனாஷே சமூக மக்கள் குடியேறுவதற்கு உதவ இஸ்ரேலிய அரசு ஆரம்பக்கால நிதி உதவியை வழங்கும். இதனுடன் ஹீப்ரு மொழிப் பயிற்சி, வேலைவாய்ப்பு தொடர்பான உதவி, தற்காலிக வீடு மற்றும் சமூக நலத் திட்டங்களின் பலன்களையும் வழங்கும்.
இஸ்ரேலிய அரசின் அறிக்கையின்படி, இந்தப் புதிய குடியேறிகள் நோஃப் ஹகலில் மற்றும் வடக்கின் பிற நகரங்களில் குடியேற்றப்படுவார்கள். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இதன் மூலம் வடக்கு மற்றும் கலீலி பிராந்தியம் வலுவடையும் என்கிறார். இந்தப் பகுதிகளில் தான் இஸ்ரேலிய அரசு யூத மக்களை மறுகுடியேற்றம் செய்ய விரும்புகிறது.
இந்தப் பகுதிகள் குறைந்த வளர்ச்சியடைந்த மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்டவை. இந்தப் பகுதிகள் வன்முறையால் பாதிக்கப்பட்டவை. செய்திகளின்படி, இந்தப் பகுதிகள் லெபனானின் ஹிஸ்பொலாவுடனான மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் இங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
சமீப நாட்களாக காஸாவிலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
2024-ஆம் ஆண்டில் மேற்கு கரையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்ட செய்திகளுக்குப் பிறகு, பெனி மனாஷே சமூகம் கவலையடைந்துள்ளது.
இவை அனைத்தையும் மீறி, பெனி மனாஷே சமூகத்தின் இஸ்ரேல் செல்லும் எண்ணம் உறுதியாக உள்ளது.
பட மூலாதாரம், Rubaiyat Biswas
மிசோரமைச் சேர்ந்த 31 வயதான யா-எல் அங்கு செல்லத் தயாராகி வருகிறார். யா-எல் கூறுகையில், “இஸ்ரேல் இறைவனின் பூமி. எனவே அங்கு செல்ல மிகுந்த ஆசை உள்ளது. நான் இப்பொழுதே தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டேன். உதாரணமாக, வீட்டிற்கான பொருட்களைச் சேகரிப்பது மற்றும் இங்கேயே விட்டுச் செல்ல வேண்டிய பொருட்களைத் தனித்தனியாகப் பிரிப்பது” என்றார்.
அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகனின் வயது எட்டு மற்றும் மகளின் வயது ஆறு. யா-எல் தனது கணவர் மற்றும் மகன், மகளுடன் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வசிக்கிறார். அவரது வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைப் பராமரிப்பதிலேயே கழிகிறது. இந்த குடும்பம் இங்கு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. சுவர்களில் மகன் மற்றும் மகளின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வீடு முழுவதும் அவர்களின் பொம்மைகள் சிதறிக் கிடக்கின்றன. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சிறப்பான குடும்பத்தின் இருப்பு தெரிகிறது.
தனது மகன் மற்றும் மகளுக்கு இந்த முடிவைப் பற்றித் தெரியும் என்று அவர் கூறுகிறார். குறிப்பாக மகன், தான் இனி இங்கு பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். யா-எல் கூறுகையில், “அவன் இனி அங்கு செல்லத் தயாராக வேண்டும் என்று கூறினான். அவன் இஸ்ரேலில் உள்ள பள்ளிக்கு செல்வான்” என்றார்.
அந்தப் பகுதியில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் பயத்தைப் பற்றி நாங்கள் கேட்டபோது, குடும்பத்தின் பாதுகாப்பைப் பற்றி எந்தப் பயமும் இல்லை என்று அவர் கூறினார்.
அவர் கூறுகையில், “எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. தேவைப்பட்டால் காஸா போரின் ஒரு பகுதியாக மாறவும் தான் தயாராக இருப்பதாக என் கணவர் கூறினார்.”
41 வயதான ரூத் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் தோழி. அவருக்கு ஐந்து மகள்கள். ரூத்தின் பெற்றோர் மற்றும் மூத்த மகள் ஏற்கனவே இஸ்ரேலில் உள்ளனர். இப்போது அவர் தனது எஞ்சிய நான்கு மகள்களுடன் இஸ்ரேல் செல்ல விரும்புகிறார். எனவே ரூத்தின் 18 மற்றும் 19 வயது மகள்களும் இஸ்ரேல் செல்வதற்காக நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.
ரூத் கூறுகையில், “பைபிளிலும் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் எங்கள் மனதில் எந்த தயக்கமோ பயமோ இல்லை. எங்களுக்குப் பயமே இல்லை என்று சொல்ல முடியாது. பலத்த சத்தம் கேட்டால் அல்லது நாம் எதையாவது கேள்விப்பட்டால் நமக்கு பயம் ஏற்படலாம். ஆனால் இந்த நேரத்தில் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. எப்படியும் நாம் அனைவரும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும். இதுவே நமது மரணத்திற்கு காரணம் என்றால், நான் அங்கே இறப்பதையே தேர்ந்தெடுப்பேன். அது போரின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ இருந்தாலும் சரி” என்றார்.
“எங்கள் ‘வீடு’ இஸ்ரேல் “
பட மூலாதாரம், Rubaiyat Biswas
ஐஸ்வாலில் சுமார் 400 பெனி மனாஷே சமூக மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர், இருப்பினும் இஸ்ரேல் செல்வது அவர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதற்காக அவர்கள் தங்கள் வீடு, நாடு மற்றும் தங்களுக்குத் தெரிந்த பழகிய வாழ்க்கையையும் விட்டுவிடத் தயாராக உள்ளனர். பிபிசியிடம் பேசிய இந்தச் சமூகத்தின் பல மக்கள், இஸ்ரேலுக்குச் சென்று யூத மதத்தைப் பின்பற்றுவது தங்களுக்கு ஒரு தனிப்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
இவர்களின் இந்த ‘ஆலியா’ இஸ்ரேல் போர், அரசியல் பதற்றம் மற்றும் சமூகப் பிரிவினையின் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் வேளையில் நடக்கிறது. இருப்பினும், தங்களுக்கு மத நம்பிக்கையும் யூத அடையாளமுமே மிக முக்கியம் என்று சமூக மக்கள் கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
ரூத் கூறுகையில், “நாங்கள் இதற்கு முன்பு எங்கும் பயணம் செய்ததில்லை. நாங்கள் சில்சாரைத் தாண்டிச் சென்றதே இல்லை. இருப்பினும், எதிர்காலத்தில் எங்களுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு சென்ற பிறகு நாங்கள் தனிமையை உணரலாம். ஆனால் மற்றவர்களின் உதவியுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறோம்” என்றார்.
அதே நேரத்தில், யா-எல் கூறுகையில், “நாங்கள் எதையெல்லாம் விட்டுவிட்டுச் செல்கிறோம்? அங்கு என்ன நடக்கும்? போன்ற எண்ணங்கள் ஒருபோதும் மனதில் வந்ததே இல்லை. சோகமாகவும் உணரவில்லை. நாம் தனிமையாகி விடுவோம் என்றும் நினைக்கவில்லை. பல ஆண்டுகளாக அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்து வருகிறது, அதற்கான தயாரிப்புகளையே செய்து வருகிறோம்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு