“பேசியிருந்தால் காப்பாற்றியிருப்போம்” ஆர்சிபி வெற்றிப்பேரணியில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறுவது என்ன?
கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பதாம்கனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சஹானா சுரேஷு வீட்டில், துக்கம் சூழ்ந்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேரில், 24 வயதான பொறியியலாளர் சஹானாவும் ஒருவர். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நண்பர்களுடன் அந்த நிகழ்வுக்கு சஹானா சென்றிருக்கிறார்.
அன்றைய தினம் சஹானாவை தொலைபேசியில் அழைக்காமல் விட்டுவிட்டோமே என அவரது தங்கை தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
கோலாரில் படிப்பை முடித்த சஹானா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக பெங்களூருக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். சஹானா ஆர்சிபி அணியின் ரசிகர் என்றும் இதற்கு முன்பும் அவர்களின் போட்டியை நேரில் காண அவர் சென்றிருக்கிறார் என்றும் சஹானாவின் சகோதரி நினைவு கூர்ந்தார்.
ஜூன் 4ஆம் தேதி நடந்த ஆர்சிபியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள சின்னசாமி மைதானத்துக்கு சஹானா சென்றபோது, ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசும் ஆர்சிபி நிர்வாகமும் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால் இழப்பீட்டால் எதுவும் மாறப்போவதில்லை, உயிரிழந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு