மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 81,883 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடி கம்பங்கள் நட அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்க முடியாது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடி கம்பங்கள், நோட்டீஸ் அனுப்பப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சி கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரி அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வில் இன்று (ஜூன் 9) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு சொந்தமான 1,22,682 கொடிக் கம்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 81,883 கொடி கம்பங்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனுவை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.