• Tue. May 13th, 2025

24×7 Live News

Apdin News

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு | 2019 Pollachi Sexual Assault Case: 9 convicted

Byadmin

May 13, 2025


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தீர்ப்பை ஒட்டி கைதான 9 பேரும் இன்று (மே 13) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று (மே.13) காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு குறித்துஅரசு தரப்பு சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழகமே எதிர்பார்த்திருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் கூட்டு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு மற்றும் மீண்டும், மீண்டும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஒருவர்கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை. குற்றவாளிகள் 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும்.

குற்றவாளிகள் தரப்பில் அனைவருமே இளம் வயதினர், சிலருக்கு இன்னும் திருமணமாகவில்லை, சிலருக்கு வயதான பெற்றோர் உள்ளனர், பெற்றோரை பாதுகாக்கும் ஒற்றை வாரிசாக உள்ளனர் என்ற காரணங்களை முன்வைத்து தண்டனை குறைப்பு கோருவார்கள். ஆனால், அரசுத் தரப்பில் அனைவருக்குமே சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சபட்ச தண்டனையைக் கோரியுள்ளோம். இது ஓர் அரிதான வழக்கு. மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சார்ந்தது. அதனால் நாங்கள் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம். இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றத்தை எவரும் செய்யாத வகையிலான அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும், ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.” என்றார்.

வழக்கு கடந்துவந்த பாதை: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2019 ஏப்ரல் 25-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2019 மே 24-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் குற்றப்பத்திரிகை 2021 பிப்ரவரி, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் தனி அறையில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஒருவர் தவிர மீதமுள்ள 7 பேர் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் கடந்த 2023 பிப்ரவரி 24-ம் தேதி முதல் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கி நடந்து வந்தது.

கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தது. மூடப்பட்ட தனி அறையில் விசாரணை நடந்தது.

48 சாட்சிகள்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கில் லேப்டாப், செல்போன், மெமரிகார்டு, கார் உள்ளிட்ட 30 எலக்ட்ரானிக்ஸ் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை 390 பக்கங்கள் என வழக்கு விசாரணை ஆவணங்கள் மொத்தம் 1,500 பக்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்திய தண்டனை சட்ட பிரிவில் 120பி, 366, 342, 354 (ஏ), 354 (பி), 376 (டி), 376 (2) (என்), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்ட பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன், எதிர்தரப்பில் வழக்கறிஞர் பாண்டிராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

அண்மையில் கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி நந்தினிதேவி, சாட்சி விசாரணை குறித்து தனித்தனியாக சுமார் 50 கேள்விகளை கேட்டார்.

தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது. வழக்கில் அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.

இடமாற்ற உத்தரவு நிறுத்திவைப்பு: இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவியை, கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தி வரும் நீதிபதி நந்தினிதேவி, மறு உத்தரவு வரும் வரை அதே நீதிமன்றத்தில் பணிபுரிவார் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு வழங்கினார். 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.



By admin