சென்னை: போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை வைத்துள்ளதால் ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம்.
இதையொட்டி, சங்கத்தின் செயலர் (பொறுப்பு) கு.உமாசந்திரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் மாதத்தில் எம்டிசி, எஸ்இடிசி கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் இருந்து மட்டும் கடன் மனுக்கள் பெறப்படும். விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிடித்தம் செய்த ரூ.13 கோடி அளவு தொகையை சம்பந்தப்பட்ட கழகங்கள் கூட்டுறவு சங்கத்துக்கு செலுத்தவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மண்டலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவது, கணக்கு முடிப்பது ஆகிய கூட்டுறவு கடன் சங்க நடவடிக்கைகள்,நிலுவைத் தொகை கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
நிலுவைத் தொகை கிடைக்கப் பெற்றதும் கடன் மனுக்கள் பெறப்படும்.மேலும், நிலுவைத் தொகை பெறுவது குறித்து கூட்டுறவு கடன் சங்கம் சட்டப்பூர்வ நடவடிக்கையும் தொடர்ந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.