மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரும், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவருமான எல் மெஞ்சோ கைது நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
‘எல் மெஞ்சோ’ என்ற பெயரில் அறியப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ், அவரது ஆதரவாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற கடும் மோதலில் பலத்த காயமடைந்தார். பின்னர், தலைநகர் மெக்சிகோ நகரம் நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மோதல், மத்திய-மேற்கு மெக்சிகோவிலுள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் நடைபெற்றதாகவும், இதில் அந்த போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா தகவல் ஆதரவு வழங்கி, மெக்சிகோவுக்கு உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எல் மெஞ்சோ’ உயிரிழந்ததற்கு எதிர்வினையாக, CJNG கும்பல் கார்களுக்கு தீ வைத்தல், வீதிகளில் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் எட்டு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர்மீது தாக்குதல் நடத்துதல் போன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் காரணமாக, ஜாலிஸ்கோ, டமாலிபாஸ், மிக்கோகான், குரேரோ மற்றும் நியூவோ லியோன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் பார்டோ மக்களை அமைதி காக்குமாறு வலியுறுத்தி, நிலைமையை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
The post போதைப்பொருள் கும்பல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமையால் பதற்றம் appeared first on Vanakkam London.