போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது.
போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், மார்ச் 2013-ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துக்கள்” தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.
சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, “அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்
“அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்” என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.
”இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்), ரோமின் பிஷப் பிரான்சிஸ் தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது”
”நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்” எனவும் அவர் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பழமையான நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும்Traditionalist-களிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.
அமெரிக்கா அல்லது உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)