மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு “முழுமையான தீர்வு” காண்பது குறித்து இரானுடன் “பயனுள்ள உரையாடல்கள்” நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், “அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன” என்று கூறியுள்ளார் டிரம்ப் .
மேலும் “இந்த வாரம் முழுவதும் தொடரவுள்ள, ஆழமான, விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இந்த உரையாடல்களின் போக்கு மற்றும் தொனியின் அடிப்படையில், இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படக்கூடிய எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவு, தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றியின் அடிப்படையில் அமையும்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
‘டிரம்புடன் தொடர்பு இல்லை’
டிரம்புடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடாத ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
”மத்திய கிழக்கில் உள்ள அனைத்து மின்நிலையங்களையும் எங்கள் இலக்காக எடுத்துக்கொள்வோம் என்று எச்சரிக்கை கொடுத்தபின் டிரம்ப் பின்வாங்கினார்” என அந்த வட்டாரம் கூறியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானில் தாக்குதல் நடத்தப்படும் காட்சி
‘முக்கிய விஷயங்கள் தெளிவாக இல்லை’
பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர். பிபிசி
”டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட இந்த செய்தி அமெரிக்காவின் போர் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து அவர் அளித்த மிக சமரச கருத்தாக இருக்கலாம். ஆனால் அதிலும் பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் உள்ளன.
இரானுடன் “மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள” பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அவர் கூறியிருந்தாலும், அதனை இரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த செய்தி, வார இறுதியில் இரு தரப்பும் எடுத்த கடுமையான நிலைப்பாட்டுடன் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் எதை பற்றியது என்பது தெளிவாக இல்லை. அது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் அல்லது அணு செறிவூட்டல் பற்றியதாக இருக்கலாம். அல்லது போர்நிறுத்தம் பற்றியதாக இருக்கலாம் . ஆனால் வெள்ளிக்கிழமை டிரம்ப் போர் நிறுத்தத்தை குறைத்து மதிப்பிட்டிருந்தார்.
இது ஹோர்மூஸ் நீரிணை பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் இரான் இதுவரை வெளிப்படையாக எந்த உறுதியும் அளிக்கவில்லை. பல நிபுணர்கள் இதை சாத்தியமற்றதாகவே கருதுகின்றனர், ஏனெனில் ஹோர்மூஸ் மீது இரானின் கட்டுப்பாடு இந்த போரில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆதிக்கமாக உள்ளது.
ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகள், இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வரும் புதிய தகவல்களை மற்றும் அதன் எதிர்கால தாக்கங்களை ஆவலுடன் கவனித்து வருகின்றன.”
பட மூலாதாரம், Reuters
3 முக்கிய விஷயங்கள்
பால் ஆடம்ஸ், பிபிசி ராஜீய செய்தியாளர்
”டிரம்பின் அறிவிப்பு பார்ப்பதற்குப் பல விஷயங்களை உள்ளடக்கியது போலத் தோன்றினாலும், நாம் தற்போது இருக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ள பல சிக்கல்களுக்கு இது தீர்வுகாண வேண்டியிருக்கும்.
மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து எழுந்துள்ள கேள்விகளைத் தவிர (முக்கியமாக ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறம்பட மூடியது மற்றும் உலகப் பொருளாதாரத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள பிற நடவடிக்கைகள்) இன்னும் பல முக்கியப் பகுதிகள் உள்ளன.
அவற்றில் சில, போருக்குச் சற்று முன்னதாக ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் இரானிய பேச்சுவார்த்தையாளர்கள் கடைசியாகச் சந்தித்துப் பேசியபோது ஆலோசனையில் இருந்தவை.
இரானின் யுரேனியம் செறிவூட்டல்: யுரேனியம் செறிவூட்டலில் கடுமையான வரம்புகளுக்குத் இரான் ஒப்புக்கொள்ளுமா மற்றும் இன்னும் தன் வசம் வைத்திருக்கும் 440 கிலோ அதிகச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்குமா?
பாலஸ்டிக் ஏவுகணைகள்: இரானின் ஏவுகணைத் திறன்களைப் பற்றி கடந்த மூன்று வாரங்கள் நமக்கு நிறையத் தெரிவித்துள்ளன. இதிலும் வரம்புகளுக்கு இரான் ஒப்புக்கொள்ளுமா?
பிராந்திய நடவடிக்கைகள்: மத்திய கிழக்கில் உள்ள ஆயுத குழுக்களுக்கு இரான் வழங்கும் ஆதரவு இப்பிராந்தியத்தின் நிலையற்ற தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எந்தவொரு விரிவான ஒப்பந்தமும் ஹெஸ்பொலா, ஹமாஸ், ஹூத்தி மற்றும் இராக்கில் உள்ள ஷியா குழுக்களுக்கு இரான் வழங்கும் ஆதரவு குறித்துப் பேச வேண்டியிருக்கும்.
இவை அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னேற்றத்தைக் காண விரும்பும் விஷயங்களாக இருந்தால், இரானும் பதிலுக்கு சில சலுகைகளை கோரலாம். அவற்றைக் கோரும் அளவுக்கு தான் இன்னும் வலுவாக இருப்பதாக இரான் உணரலாம்.
தன் தடைகள் நீக்கம் என்பது இரானின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும், அதே போல் ஆட்சி மாற்றத்தைப் பற்றிய அனைத்துப் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதையும் அது விரும்பும்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம்
’48 மணி நேர கெடு’
கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு கெடு ஒன்றை விதித்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் இரானின் மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்.
டிரம்ப் தனது மிரட்டலை செயல்படுத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் பகிரங்கமாக எச்சரித்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் நான்காவது வாரத்தை எட்டியிருக்கிறது.
தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மட்டுமன்றி மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அமெரிக்க தளங்களை குறிவைப்பதாக இரான் கூறுகிறது. ஆனால், பொதுமக்கள் இலக்குகளும் குறிவைக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட நாடுகள் கூறுகின்றன.
பிரச்னையின் மையமான ஹோர்மூஸ் நீரிணை
உலகின் கடல்வழிப்போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள ஹோர்மூஸ் நீரிணையையும் இரான் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெய் முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்த நிலையில், ஹோர்மூஸ் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு இந்த கெடுவை விதித்திருக்கிறார். ஆனால், இரானோ தங்கள் எதிரிகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறது.
ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) உள்ள இரானின் பிரதிநிதி, இரான் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது என கூறியதாக இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி முகமை கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலில் இரான் தாக்கிய இடத்தின் படம்
டிரம்புக்கு இரான் அளித்த பதில் என்ன?
இரானிய ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா இரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்றும், அழிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும் வரை ஹோர்மூஸ் திறக்கப்படாது என்றும் இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை எச்சரித்திருக்கிறது.
”எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் இரானுடன் ஒருங்கிணைந்தால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான பயணம் கிடைக்கும்” என்றும் இரான் கூறியுள்ளது. இந்த கருத்தை இரான் தொடர்ந்து கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய கடல் வழித்தடமான ஹோர்மூஸை பொருத்தவரை, இயல்பான சமயங்களில் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்லும். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
மார்ச் 18 அன்று ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்ட கணக்கீட்டின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டுள்ளன அல்லது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.