0
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டு பிரஜையொருவர் வியாழக்கிழமை (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட செனகல் நாட்டு பிரஜை பிரேசில் நாட்டு போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததாகவும், அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
35 வயதான செனகல் நாட்டு பிரஜை, வியாழக்கிழமை காலை 05.45 மணிக்கு கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான சேவைகளை உறுதிப்படுத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு நுழைவாயிலுக்குள் சென்று தனது பிரேசிலிய பாஸ்போர்ட்டை வழங்கியுள்ளார்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளுக்கமைய, குறித்த பிரேசிலிய கடவுச்சீட்டு போலியானதென தெரியவந்துள்ளது.
பின்னர், செனகல் நாட்டு பிரஜை மறைத்து வைக்கப்பட்டிருந்த செனகல் கடவுச்சீட்டையும், நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான பயணச்சீட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட செனகல் நாட்டு பிரஜை, தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.