31
சசெக்ஸ் மருத்துவமனை அறக்கட்டளையில் (University Hospitals Sussex NHS Foundation Trust) மகப்பேறு சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகத் தங்கள் குழந்தைகளை இழந்ததாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பெத் கூப்பர் மற்றும் சோஃபி ஹார்ட்லி ஆகிய இரு தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இந்தத் தவறுதலான பராமரிப்பால் இழந்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் தற்போது ஒரு சுதந்திரமான விசாரணையை நடத்தி வருகிறது. மேலும் இது 15 குடும்பங்களின் புகார்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆதாரங்களின்படி, 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் குறைந்தது 55 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெத் கூப்பர் தனது குழந்தையின் அசைவு குறைந்திருப்பதாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனைக்குச் சென்றும், அவர் முதல் முறை தாயாவதால் “பதட்டமாக” இருப்பதாகக் கூறி மருத்துவப் பணியாளர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இறுதியில் அவரது குழந்தை உயிரிழந்தது.
சோஃபி ஹார்ட்லி மருத்துவமனையைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் உரிய பதில் கிடைக்கவில்லை. பின்னர் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் அவரது குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
கிளோவி வோவல்ஸ்-லெவெட் என்ற தாய், தனக்குக் கடும் வலி இருந்தும் தூண்டப்பட்ட பிரசவத்திற்கு (induced labor) மருத்துவமனை மறுத்துவிட்டதாகவும், அதனால் தனது மகள் எஸ்மேயை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவத் தலையீடு இல்லாமல் “சுகப் பிரசவம்” செய்ய வேண்டும் என்ற அறக்கட்டளையின் தீவிரமான போக்கும், தாயின் கவலைகளைக் காது கொடுத்துக் கேட்காததுமே இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மகப்பேறு சிகிச்சைத் தவறுகளுக்காக சசெக்ஸ் மருத்துவமனை அறக்கட்டளை 2021-2025 காலப்பகுதியில் £103.8 மில்லியன் இழப்பீடாக வழங்கியுள்ளது, இது கடந்த ஆண்டில் இங்கிலாந்திலேயே மிக அதிகத் தொகையாகும்.
அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி டாக்டர் ஆண்டி ஹீப்ஸ், இந்தத் துயர சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுப் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், பாதுகாப்பை மேம்படுத்த 40 கூடுதல் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தங்களது குழந்தைகளின் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறுதியாக உள்ளன.