- எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையைக் கைப்பற்றி, வெற்றிக்கான நீண்ட இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வருமா?
இந்தப் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை இந்தியா தோற்கடிக்க வேண்டும்.
இந்திய அணி கடந்த உலகக் கோப்பையின் (2023) அரையிறுதி தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகிறது.
அதே நேரம் 2020 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியையும் மறந்து, இம்முறை பட்டம் வெல்லும் கனவை நிறைவேற்ற இந்தியா முயலும்.
வெற்றி பெறும் நம்பிக்கையில் ஹர்மன்ப்ரீத்
இந்தப் போட்டி குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறுகையில், “இந்த மதிப்புமிக்க போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் கனவு. அதற்கான திறமை எங்களிடம் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை சென்றோம்.
கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் நடந்த இறுதிப் போட்டியில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். இந்த மிகப்பெரிய மேடையில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது என்பதை இது காட்டுகிறது,” என்றார்.
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடும் என்பதில் சந்தேகமே இல்லை எனக் கூறிய ஹர்மன்ப்ரீத், ஆனால் அவர்களை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தோற்கடிக்கும் திறன் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்திய வீராங்கனை ஜெமிமா கூறுகையில், “நாங்கள் சிறப்பாகத் தயாராகி வருகிறோம். கடுமையாக உழைத்துள்ளோம். இப்போது எங்கள் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
ஆஸ்திரேலியா அணியுடன் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி
இந்திய அணி இடம்பெற்றுள்ள குழு மிகவும் போட்டித் தன்மை வாய்ந்தது. கடந்த மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியுடன் குழு `A’ இல் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தக் குழுவில் உள்ள மற்ற அணிகள் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை.
இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
போட்டி வடிவத்தின் படி, குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் ரவுண்ட் ராபின் அடிப்படையில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் அரையிறுதியும், அக்டோபர் 20ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணி
இன்று (அக்டோபர் 4) நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் விளையாடுகிறது.
அக்டோபர் 6ஆம் தேதி பாகிஸ்தானையும், 9ஆம் தேதி இலங்கையையும், அக்டோபர் 13ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் இந்தியா எதிர்கொள்கிறது.
அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில், குழுவில் இந்தியா குறைந்தது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி கடும் போட்டியைக் கொடுக்கும் திறன் கொண்டது.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி சிறப்பான சாதனையைப் படைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 13 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் நியூசிலாந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சமீப காலங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதனால் நியூசிலாந்தை மட்டுமல்ல எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். மேலும் A பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கையிடம் இருந்தும் இந்திய அணி கடும் சவாலைச் சந்திக்கலாம்.
டி20 சர்வதேச போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்தியா மிகச் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது உண்மைதான். இவ்விரு அணிகளுக்கு இடையில் நடந்துள்ள 23 போட்டிகளில் இந்தியா 18 போட்டிகளிலும், இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சமாரி அத்தப்பட்டு தலைமையிலான இலங்கை அணியை இந்திய அணி இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
எனவே, இலங்கை அணியைத் தோற்கடிக்க இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும். இந்திய அணியின் பாரம்பரிய எதிரியாக பாகிஸ்தான் அணி கருதப்பட்டாலும், இந்த அணியால் இந்தியாவுக்கு பெரிய சவால் இருந்ததில்லை.
ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது இந்த முறை ஆக்ரோஷமாக விளையாடுவேன் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா உறுதியளித்துள்ளார். எனவே பாகிஸ்தானின் சவாலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
முக்கிய போட்டியாளராக முன்நிற்கும் ஆஸ்திரேலிய அணி
கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கிய ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி நிலை நிறுத்தியுள்ள ஆதிக்கத்தை முறியடிப்பது எந்த அணிக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது.
இதுவரை, இந்த உலகக்கோப்பை எட்டு முறை நிகழ்ந்துள்ளது, அதில் ஆஸ்திரேலியா ஆறு முறை சாம்பியனாகியுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த மூன்று முறை தொடர்ந்து கோப்பையைக் கைப்பற்றித் தனது பலத்தை நிரூபித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை தவிர, 2009இல் இங்கிலாந்தும், 2016இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் சாம்பியனாகியுள்ளன.
அணியில் மெக் லானிங் இல்லாதது ஆஸ்திரேலிய அணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெறுவதில் மெக் லானிங் முக்கியப் பங்கு வகித்துள்ளார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றதால் தற்போது இந்தப் பொறுப்பு அலிசா ஹில்லி கைகளில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் திறன் மற்றும் பந்துவீச்சில் உள்ள நுட்பம் காரணமாக, அவர்கள் சாம்பியன் ஆவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்களது ஆட்டத்தை வெகுவாக மேம்படுத்தியுள்ளன.
அதே நேரம், இங்கிலாந்து அணி ஏற்கெனவே பலமாக இருப்பதால், அவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானது
சுழற்பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலமுறை பிரதிபலித்தது. இந்தியாவின் வெற்றியில் ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா ஆகியோரின் பங்கு முக்கியமானது.
ஆனால் இந்த நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குளிர் காலம் தொடங்கியிருக்கும். எனவே அனைத்து அணிகளும் கடுமையான பனியால் சிக்கலை எதிர்கொள்ளலாம்.
இத்தகைய சூழ்நிலையில், வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.
இந்த சாம்பியன்ஷிப் கடைசி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இது வங்கதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட இருந்தது. ஆனால் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்ததால், ஐசிசி போட்டிகளை வேறு இடத்தில் ஏற்பாடு செய்ய முடிவு செய்தது.
ஐசிசி முதலில் இந்தியாவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பியது, ஆனால் அடுத்த ஆண்டு 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பையை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டியிருப்பதால், இந்தியா முன்மொழிவை நிராகரித்தது.
மேலும் இலங்கையில் மழைக்காலம், எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
போட்டியில் இல்லாத நாட்டில் ஏற்பாடு செய்யப்படும் முதல் மகளிர் உலகக்கோப்பை இது. ஏனெனில் இதில் பங்கேற்கும் அணிகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டன, எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதில் பங்கேற்கவில்லை.
முதன்முறையாக ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பைக்கு இணையான பரிசுத் தொகை
இந்த முறை மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசுத் தொகையை ஆண்களுக்கு இணையாக வைக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக கடந்த காலத்தைவிட பரிசுத்தொகை 225 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை வெற்றி பெறும் அணிக்கு 23.4 லட்சம் டாலர்கள் கிடைக்கும். அதேநேரம் `ரன்னர்-அப்’ அணிக்கு 11.7 லட்சம் டாலர்கள் கிடைக்கும்.
இம்முறை மொத்த பரிசுத்தொகை 79 லட்சத்து 58 ஆயிரம் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.