“ராஜமாதா அந்தஸ்து அறிவித்திருப்பதால் நாங்கள் இனி வாழ்க்கை முழுவதும் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னால் நடக்க வேண்டுமா? விவசாயிகளுக்கு மீதமிருக்கும் வேலை இது மட்டும் தானா?”
”பால் சுரக்காத பசுமாடுகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்கவில்லை என்றால், அந்த மாடுகளை முதல்வர் வீட்டுக்கு வெளியே கட்டிப்போடுவோம், எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் பால் வியாபாரி விலாஸ் போடே.
அரசின் மீதான அவரின் கோபத்தை பிரதிபலிக்கும் வார்த்தைகள் இவை.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சிவன்காவ்னை சேர்ந்த இவரது குடும்பம் 80 ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வருகிறது.
விலாஸ் போடேவின் தாத்தா மற்றும் தந்தை பால் வியாபாரம் செய்தனர். இப்போது அவரும் பால் வணிகம் செய்கிறார்.
நாட்டு பசுமாடுகளுக்கு ‘ராஜமாதா’ அந்தஸ்து வழங்கும் அரசின் முடிவை அடுத்து விலாஸ் போடே அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் இனிமேல் நாட்டு பசுமாடுகள் ‘ராஜமாதா-கோமாதா’ என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. வேத காலத்தில் இருந்தே இந்திய கலாசாரத்தில் நாட்டு பசுமாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து பேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணா விக்கே பாட்டீல், “நாட்டு பசுக்களின் பாலில் மனித உணவுக்கு தேவையான அதிக ஊட்டச்சத்து உள்ளது. நாட்டு பசுக்களின் பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன” என கூறுகிறார்.
அரசின் இந்த முடிவு குறித்து கால்நடை விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?
இந்த முடிவுக்குப் பிறகு அவர்கள் மனதில் எழும் கேள்விகள் என்ன. பசுவுக்கு ‘ராஜமாதா’ அந்தஸ்து வழங்கப்படுவதன் பொருள் என்ன?
நாக்பூருக்கு அருகில் உள்ள சிவன்காவ்னை காலையில் அடைந்தோம்.
சிவன்காவ்ன் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமம். முன்னதாக, இந்த கிராமத்தில் சுமார் 90 சதவீத மக்கள் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
2000-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வீட்டிலும் பால் வியாபாரம் நடந்து வந்தது.
இந்த கிராமம் ‘பால் கிராமம்’ என்று அழைக்கப்பட்டது. ஆனால் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதால், இந்திய விமானப்படை திட்டத்திற்காக கிராமத்தின் சில நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து சில விவசாயிகள் பால் வியாபாரத்தை நிறுத்தினர்.
பால் வியாபாரம் செய்து வரும் முதியவர்களில் விகாஸ் கண்டோட் என்பவரும் ஒருவர்.
அவர் கூறுகையில், “எங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் ஆடு மற்றும் மாடுகளுடன் விளையாடினோம். இப்போதும் எங்கள் மூதாதையர் செய்த தொழிலை செய்கிறோம். ஆனால் இப்போது அதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
எங்கள் மாடுகளை நாங்கள் எங்கே கட்டி வைப்பது? எங்கள் தொழிலையே விட்டுவிட வேண்டுமா? ஒருபுறம், பசுவை ராஜமாதா என்று அரசாங்கம் அறிவிக்கிறது, மறுபுறம் பசுக்களை மேய்க்க போதிய இடம் இருப்பதில்லை” என்கிறார்
முன்பு ‘பால் கிராமம்’ என்று அழைக்கப்பட்ட கிராமத்தில் இப்போது 50 பேர் மட்டுமே பால் வியாபாரம் செய்கின்றனர்.
பால் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் ஹிங்கனா தாலுகா தலைவர் சஞ்சய் போடே கூறுகையில், ”கிராமத்தில் சுமார் 3,000 பசுக்கள் உள்ளன, அவற்றில் சுமார் 800 மாடுகள் பால் கறக்காதவை.”
மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் சஞ்சய் போடே, “எங்களிடம் 200 மாடுகள் இருந்தன, இப்போது 50 மாடுகள் மட்டுமே உள்ளது. எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
“முன்பு, பால் கறக்காத மாடு, 20,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 4 முதல் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கேட்பதில்லை. அரசின் திட்டத்தால்தான் இப்படியான சூழல் ஏற்பட்டது. பசு வதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதால் எங்களது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்கிறார் அவர்
பசுவை ‘ராஜமாதா’ என்று அரசு அறிவித்தது ஏன்?
அமைச்சர் ராதா கிருஷ்ணா விக்கே பாட்டீல் தனது அறிக்கையில், பசுக்கள் ‘மாநில தாய்ப்பசு’வாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
“மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாட்டு பசு மாடுகள் உள்ளன. பசுக்கள் வேத காலத்திலிருந்தே காமதேனு என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் நாட்டு பசுமாடு வளர்ப்பு மற்றும் அவற்றின் பாதுகாப்பு அவசியம், எனவே நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அவற்றை மாநில தாய்ப்பசுவாக அறிவிக்க அரசு அனுமதி அளித்துள்ளது” என்றார்.
“மாநிலத்தில் நாட்டு பசுமாடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பாட்டீல் கூறுகிறார்.
விவசாயிகள் கேள்வி
மேலும், கோசாலைகளுக்கு ஒரு மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் மானியமாக வழங்கும் அரசின் முடிவால் விவசாயிகள் சிலர் கோபத்தில் உள்ளனர்.
விவசாயிகள் மாடுகளை பராமரிக்கும் நிலையில், அரசு ஆதரவில் மாட்டுத் தொழுவங்கள் (கோசாலைகள்) எதற்கு என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாட்டுத் தீவனத்துக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
சஞ்சய் போடே அரசு மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
“கோசாலைகளில் மாடுகளை எப்படி நடத்துவது என்று அவர்களுக்குத் தெரியாது” என்கிறார் போடே.
”அங்கு இருப்பவர்களுக்கு மாடு மேய்த்த அனுபவம் கிடையாது. மாடுகள் பாதுகாப்பாக இருக்க விவசாயிகளுக்குதான் மானியம் வழங்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட மாடுகளுக்கு விவசாயிகளால் மட்டுமே சரியான சிகிச்சை அளிக்க முடியும். இத்தனை ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறோம். அப்படியிருக்க, எங்களுக்கு மானியம் வழங்காமல் கோசாலைகளுக்கு ஏன் மானியம் வழங்கப்படுகிறது?” என்கிறார்
கோசாலைகளில் வருமானம் மிகவும் குறைவு, அதனால் மாடுகளை வளர்க்க முடியாத நிலை உள்ளது என அமைச்சர் பாட்டீல் கூறுகிறார்.
ராஜமாதா அந்தஸ்து ஏற்படுத்த போகும் மாற்றம் என்ன?
பசுக்களுக்கு ராஜமாதா அந்தஸ்து வழங்கியதன் பொருள் என்ன? இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள பிபிசி, ஸ்ருதி கணபதியைத் தொடர்புகொண்டது.
ஸ்ருதி ஒரு பத்திரிகையாளர். `Who Will Bell The Cow?’ என்னும் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில், ”மாடுகளுக்கு ஏற்கனவே கோமாதா என்று பெயர். அதனால் இப்போது ராஜமாதா அந்தஸ்து கொடுப்பதால் எந்த மாற்றமும் வராது. அரசு ஆவணங்களில் ராஜமாதா என்று எழுத வேண்டியிருக்கும் அவ்வளவுதான். விவசாயிகளுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. இதனால் எந்தப் பயனும் இல்லை.
மாறாக, பசுப் பாதுகாப்பில் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவங்களை போன்று மகாராஷ்டிராவில் நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
“பசுவுக்கு அந்தஸ்து வழங்கும் அரசு, தெருக்களில் சுற்றித்திரியும் கைவிடப்பட்ட மாடுகள் விவகாரத்தில் எதுவும் சொல்வதில்லை. இந்த மாடுகள் வயல்களுக்குள் புகுந்து விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இது தவிர சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன” என்கிறார் அவர்.
”கோசாலைகளுக்கு அரசு மானியம் தருகிறது என்கிறார்கள். ஆனால், இந்த மானியம் உண்மையில் மாடுகளை முறையாக வளர்ப்பதை ஊக்கப்படுத்துமா? அந்த மானியம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது கண்காணிக்கப்படுகிறதா? இதில் அரசு கவனம் செலுத்துமா?
மாடு பால் கொடுப்பதை நிறுத்தினால் விவசாயிகளுக்கு அதன்முலம் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள். விவசாயிகள் இந்த மாடுகளை அதன்பின்னர் எப்படி வளர்ப்பார்கள்?” எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு