மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக மையம் செயல்பட்டு வருகிறது. விண்ணில் விண்கலங்களை செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் இஞ்ஜின்கள், பி.எஸ்.4 இன்ஜின்கள் ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 விண்கல சோதனையும் இங்கு நடைபெறுகிறது. இங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ராக்கெட் இன்ஜின்கள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு, விண்ணில் செலுத்தப்படுகின்றன.
ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின்களில் பல்வேறு கட்ட சோதனைகள் மகேந்திரகிரியில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற இன்ஜின் சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.