ராமேசுவரம்: நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவரை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகில் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது.
ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அனீஸ் (30), மாதவன் (28), ஃபரித் (28), இப்ராஹிம் சா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றுள்ளனர். ஜூன் 18ம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சர்புதீனின் படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து, விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளது.
இதனை கண்ட அப்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்துக கொண்டிருந்த அனீஸ், மாதவன், ஃபரித் ஆகியோரை பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களில் இப்ராஹிம் சா என்ற மீனவர் மாயமதாக தெரிகிறது. இந்த நிலையில், மாயமான மீனவரை மெரைன் போலீஸாருக்கு சொந்தமான ரோந்து படகு, இந்திய கடலோர காவல் படை ரோந்து ஹெலிகாப்டர் மற்றும் இவர்களுடன் இரண்டு விசைப்படகில், மண்டபம் வடக்கு பகுதி மீனவர்களும் வடக்கு பாக் ஜல சந்தி கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, இரண்டாவது நாளாக இன்றும் மாயமான மீனவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.