• Sun. Jun 8th, 2025

24×7 Live News

Apdin News

“மதவாத சக்திகள் வரக்கூடாது என நினைக்கும் சக்திகளோடு சேர்ந்து விஜய் பயணிக்க வேண்டும்!” – துரை வைகோ நேர்காணல் | Durai vaiko exclusive interview

Byadmin

Jun 8, 2025


மதிமுக-வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கை தராவிட்டாலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் எனச் சொன்னார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்போது, “வைகோவுக்கு ராஜ்யசபா சீட் தராதது வருத்தமே” என்று பளிச்சென தனது கருத்தைச் சொல்லி இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. மதிமுக நிர்வாகிகளுக்கும் இந்த வருத்தம் இருந்தாலும் கூட்டணி தர்மத்துக்காக மவுனம் காக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பு சட்டமன்றத் தேர்தலிலாவது மதிமுக-வுக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமா என்பதாகவே இருக்கிறது. இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக துரை வைகோவிடம் பேசினோம்.

மதிமுக-வின் 31 ஆண்டு கால பயணத்தில், தனித்தன்மை பெற்ற இயக்கமென பெருமைப்படும் இரண்டு விஷயங்களைக் கூற முடியுமா?

திராவிட இயக்க கோட்பாடுகளில் சமரசமின்றி பயணிக்கிறோம். தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலனுக்காக தன்னலம் கருதாமல் பாடுபடுகிறோம். தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வெற்றி பெறுகிறோம். 25 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. முல்லை பெரியாறு அணை பாதுகாக்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுக்கப்பட்டது. நியூட்ரினோ திட்டம் நிறுத்தப்பட்டது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக உதயமான மதிமுக, காலச் சூழலில் அந்த கட்சிகளுடனேயே கூட்டணி சேர்ந்ததால், தனித்தன்மையை இழந்துவிட்டதை ஒப்புக் கொள்கிறீர்களா..?

தமிழகத்தில் திமுக, அதிமுக-வுக்கு அப்பாற்பட்ட மூன்றாவது அணியை ஏற்றுக்கொள்கிற மனநிலை, பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால் தான் கடந்த 30 ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் இம்முயற்சியை எடுக்கும்போது, வாக்குகள் பிளவுபட்டு, எது நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடந்து விடுகிறது. ஆகவே, கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, அதற்கான சூழ்நிலை இல்லை என்றே சொல்ல முடியும். இருப்பினும் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினால் தான் மக்களுக்கு நல்லது செய்யமுடியும் என்பதால் அதற்கேற்ப கூட்டணி அமைக்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, விடுதலைப்புலிகள் ஆதரவு என்பதை எல்லாம் மதிமுக இப்போது மறந்தே விட்டது போல் இருக்கிறதே?

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு இன்னும் ஒரு ஆயுத போராட்டத்தை எடுத்துச் செல்லும் நிலை இல்லை. அங்கு வசிக்கும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதே சரியானது என ஐநா மன்றம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க உறுதி அளித்துள்ளது. புதிய அதிபர் பொதுவுடமை கொள்கையோடு வந்திருப்பதால் அங்குள்ளவர்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது.

இப்போதுள்ள சூழலில் ஆயுதப் புரட்சி ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, மேடைகளில் பேசி எதுவும் ஆகப் போவதில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத் தாருங்கள் என்று பிரதமரை கேட்டு, ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட நீதிமன்றத்தில், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென வாதாடிய ஒரே இயக்கம் மதிமுக தான்.

வி.பி.சிங், வாஜ்பாய் போன்றோர் வலியுறுத்தியும், மத்திய அமைச்சரவையில் சேர வைகோ மறுத்தது அவரது பிழையான முடிவு என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அப்படி ஒருபோதும் நினைக்க முடியாது. மூன்று முறை கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி தருவதாக அழைப்பு விடுக்கப்பட்டது. வாஜ்பாய் அமைச்சரவையில் வைகோ சேர வேண்டும் என்று அத்வானி எங்களது டெல்லி வீட்டுக்கு வந்து இரண்டு மணி நேரம் பேசினார். எப்படியாவது வைகோவை சமாதானப்படுத்தி அழைத்து வாருங்கள் என்று என்னிடம் சொன்னார். பாதுகாப்பு, நிதித்துறை தவிர வேறு எந்தத் துறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். கடைசி வரை ஒத்துக்கொள்ளவில்லை. பதவிகளுக்கு அப்பாற்பட்டு அரசியலில் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது வைகோ மட்டுமே.

பாராளுமன்றத்தில் 30 ஆண்டுகளாக கர்ஜித்த வைகோவின் குரல், இனி அங்கு கேட்பதற்கு வாய்ப்பில்லை என்பது வருத்தமாக இல்லையா?

தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதல் குரல் கொடுப்பவர் வைகோ. 81 வயதாகி விட்டது முன்பிருந்தது போல் கம்பீரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு மத்தியில், உடல் தளர்ந்தாலும் மனதளவில் தளரவில்லை. அரசியல் எல்லைகளை கடந்து வைகோவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாமோ என்ற கருத்து, எல்லோரிடமும் உள்ளது. மனச் சங்கடம் இருந்தாலும் கடந்து செல்வோம். எனக்கு மட்டுமல்ல… அரசியல் எல்லைகளை கடந்து பலருக்கும் அந்த வருத்தம் இருக்கிறது.

தமிழகத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் இடையே முரண்பாடான கருத்துகள் எழுந்து கொண்டே இருக்கிறதே..?

பொது இலக்குடன் கூட்டணி அமைகிறது. கூட்டணி சேர்ந்த பின் எல்லா விஷயத்திலும் ஒரே நேர்கோட்டில் கட்சிகள் செல்ல வேண்டும் என்பதில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற பொது இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைகிறது. சில விஷயங்களில் வேறுபடுவதை முரண்பாடு என்று சொல்ல முடியாது. ஒரு இயக்கத்திலேயே பல்வேறு குரல்கள் இருக்கும்பொழுது, கூட்டணி கட்சிகளுக்குள் இருக்காதா; இருக்கக் கூடாதா?

மதிமுக அங்கீகாரம் பெற வேண்டுமெனில், தனி சின்னத்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது அவசியம். அதற்கான வாய்ப்பு, 2026 தேர்தலில் கிடைக்குமா?

நாங்கள் அதனை எதிர்பார்க்கிறோம். ஒரு அரசியல் கட்சி அங்கீகாரம் பெறுவது என்பது குறைந்தபட்ச குறிக்கோளாக இருக்கும். எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. அதற்கான நம்பிக்கையோடு செயல்படுகிறோம்.

பாஜக-வை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள விஜய்யுடன் கூட்டணி சேர்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

கொள்கை எதிரியை வீழ்த்துவோம் என்று விஜய் சொல்கிறார். அதற்கு மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டும். எதற்காக எதிர்க்கிறோம்… எதற்காக இவர்கள் வரக்கூடாது என்று அரசியல் மேடைகளில் பேச வேண்டும். ஒரு எழுச்சியை உருவாக்க வேண்டும். ஆனால் அவர், தனி அணியாக நிற்கிறார். இதன் மூலம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறி அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று சொல்கிறீர்களா?

நான் அப்படிச் சொல்லவில்லை. கொள்கை எதிரியை வீழ்த்த என்ன நிலைப்பாடுகளை எடுக்கப் போகிறார் என்று அவர் சொல்ல வேண்டும். தனியாக ஒரு அணியை உருவாக்கி போட்டியிடும்போது மறைமுகமாக பாஜக-வுக்கு உதவுவது போலாகி விடும். கொள்கை எதிரி வெற்றி பெற தனியாக நிற்பதன் மூலம் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறார் விஜய். நாம் எப்படி அவரோடு சேர முடியும்? மதவாத சக்திகள் வரக்கூடாது என்று எண்ணும் ஒத்த கருத்துடைய சக்திகளோடு சேர்ந்து அவர் பயணிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

அவர் திமுக-வையும் தானே எதிரி என்கிறார்?

யார் பெரிய எதிரி என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். எது பொதுவான இலக்கு, எது பெரிய இலக்கு என்பதை முடிவு செய்ய வேண்டும். பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

2026 தேர்தலில் தவெக-வின் தாக்கம் எப்படி இருக்கும் என கணிக்கிறீர்கள்?

லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை விஜய் வைத்துள்ளார் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதேசமயம் தேர்தல் காலத்தில் அதை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும் என்பது, அரசியல் நகர்வுகளை வைத்தே சொல்ல முடியும். எனென்றால் அரசியல் வேறு, சினிமா கவர்ச்சி வேறு.

அதிமுக சேர்ந்ததால் பாஜக கூட்டணி வலுவான கூட்டணி போல் தோன்றுகிறது. இன்னும் சில கட்சிகளும் அங்கு சேர்ந்தால் உங்களுக்கு சவாலாகி விடாதா?

எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. வெற்றிக் கூட்டணி என்று ஒவ்வொருவரும் சொல்வது வழக்கம். பிற இயக்கங்களை அழைக்கவும், மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டவும் இப்படி சொல்வார்கள். ஆனால், வாக்காளர்களே எஜமானர்கள்; அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. தற்போது சொல்ல முடியாது; கடைசி இரண்டு, மூன்று மாதங்களில் திரண்டு உருவாகும் ‘ட்ரெண்ட்’ முடிவு சொல்லும்.

மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளதா?

ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் குறைவாகத்தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டிலும் அந்தக் குறைபாடு உள்ளது; மக்கள் மத்தியில் அது பேசுபொருளாக உள்ளது.

ஒரு எம்பி ஆக உங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு எப்படி கிடைக்கிறது?

நான் வெற்றி பெற்றதும், சித்தாந்த அரசியல் எல்லை கடந்து எல்லோரும் எனது மக்கள் என்று சொன்னேன். மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களிடம் அணுகுமுறை என்று ஒன்று உள்ளது. நான் நல்ல அணுகுமுறை வைத்துள்ளேன். மத்திய அமைச்சர்களை பார்க்கும் பொழுது இது எனக்கான கோரிக்கை கிடையாது… மக்களுக்கான கோரிக்கை. இதைச் செய்து தராததால், உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இது வந்தால் உங்களையும் பாராட்டுவார்கள் என்று சொல்கிறேன்.

தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது என்ற கமல் பேச்சும், அதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்தும் என்ன சொல்கிறீர்கள்?

திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ். அதிலிருந்து தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் வந்துள்ளது என மொழியியல் ஆய்வு அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். நாம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நாம் சகோதரர்கள் என்று தான் கமல் சொன்னார். அதை அரசியலாக்கி பெரிய பிரச்சினையாக்கிவிட்டார்கள். இது தேவையில்லாத சர்ச்சை. கமல் எந்த விதத்திலும் தவறான கருத்தைச் சொல்லவில்லை. அவர் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சொன்னதை சகதமிழனாக பாராட்டுகிறேன்.

மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தீர்கள். அதன்பின், ஒரு சமாதானக் கூட்டம் நடந்தது. இப்போது எல்லாம் சரியாகி விட்டதா?

நோ கமென்ட்ஸ்.



a2a_kit_size_32 addtoany_list" data-a2a-url="https://24x7livenewz.com/tamil/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be/8254201/" data-a2a-title="“மதவாத சக்திகள் வரக்கூடாது என நினைக்கும் சக்திகளோடு சேர்ந்து விஜய் பயணிக்க வேண்டும்!” – துரை வைகோ நேர்காணல் | Durai vaiko exclusive interview">

By admin