• Sun. Jun 22nd, 2025

24×7 Live News

Apdin News

மதுரையில் களைகட்டிய முருக பக்தர்கள் மாநாடு – பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு | Devotees gathered since early morning to participate in the Madurai Muruga devotee conference

Byadmin

Jun 22, 2025


மதுரை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்தார். காலை முதலே மாநாடு நடைபெறும் திடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி எடுத்தும் வருகை தந்தனர்.

மாநாட்டு திடலில் திரண்ட பக்தர்கள்: மதுரை ரிங்ரோடு அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் பங்கேற்க, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே மாநாட்டு திடல் பகுதியில் திரண்டனர். அவர்கள் மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை தரிசித்தனர்.

தீவிர பரிசோதனை: மாநாட்டு பகுதிக்கு வரிசையில் செல்வதற்கு தடுப்புகளை ஏற்படுத்தி வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்வழியே செல்வோர் அனைவரையும் போலீஸார், தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். முக்கிய நிர்வாகிகள், விஐபிக்கள் மெயின் ரோட்டில் இருந்து மேடைக்கு செல்வதற்கென தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுட்டெரிக்கும் வெயில்: மாநாட்டில் பங்கேற்க வந்த பக்தர்கள், பொது மக்கள், பெண்கள் சுடடெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாட்டுக்கு வந்துள்ளனர். இருக்கைகளிலும், தலையிலும் துண்டுகளைப் போட்டுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பிரமாண்ட எல்இடி திரைகள் ஏற்பாடு: மாநாட்டு நிகழ்வுகளையும், தலைவர்களின் உரை, ஆன்மிக கலை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு மூலம் காண, மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்ட எல்இடி திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆடி, பாடி உற்சாகம்: முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் மேடையில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப இளம் பெண்கள், மாணவர்கள் ஆடி, பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இது போன்ற நிகழ்வுகள் பக்தர்களை பரவசப்படுத்தியது.

பிரத்யேக ஏற்பாடு: நிர்வாகிகள், பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த மாநாட்டுக்கு அருகிலுள்ள பகுதியில் தனித்தனியே வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பவன் கல்யாண், பாஜக, இந்து முன்னணியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் சாதுக்களுக்கென தனித்தனியாக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வருவதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வந்திருந்தனர்.

வேல் ஏந்திய பக்தர்கள்: மாநாட்டில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் பலர், தங்களது வீடுகளில் இருந்தும், புதிதாகவும் முருகனின் வேல்களை வாங்கியும் வந்துள்ளனர். சிலர் காவடிகளை எடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வீரவேல், வெற்றி வேல் , முருகனுக்கு அரோகரா போன்ற கோஷ்ங்களை முழங்கினர்.

காவல்துறை கெடுபிடி: மாநாட்டுக்கு வரும் வெளியூர் வாகனங்களால் மதுரை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, மதுரை எல்லை பகுதியில் இருந்த சுற்றுச்சாலைகளில் வாகனங்களை திருப்பிவிட்டனர். அப்போது, மாநாட்டுக்கு சென்ற சில வாகனங்களிடம் கெடுபிடியும் காட்டியதாக புகார்களும் எழுந்துள்ளன.

நிபந்தனைகள் கண்காணிப்பு: ஏற்கெனவே மாநாட்டு குறித்து சில நிபந்தனைகளை காவல்துறை விதித்து இருந்தது. மாநாட்டு திடல் உள்ளிட்ட இடங்களில் நிபந்தனைகள் மீறப்படுகிறதா? என்பதை போலீஸார் கண்காணித்தனர். நிபந்தனைகள் மீறப்படும் பகுதியில் ஆதாரத்துக்காக வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் கந்த சஷ்டி கவச பாடல், திருபுகழ் பாடல்கள் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மேடைக்கு முன் பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

கழிப்பிட வசதி: மாநாட்டு திடலைச் சுற்றிலும் தற்காலிக கழிப்பிடம், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. அடிப்படை வசதிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: காலை மாநாடு தொடங்கும் முன்பே மேடை, பக்தர்களுக்கான இருக்கை பகுதி, விஐபிக்கள் நுழைவு வாயில் உட்பட மாநாட்டு திடலை சுற்றிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்தனர். மாநகர காவல் ஆணையர் லோகநாதன், புறநகர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சோதனை சாவடி மற்றும் நகர் பகுதியிலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் இருந்தனர்.

பவன் கல்யாண் வருகை: இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும் மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



tent addtoany_content_bottom">

By admin