மதுரை: மதுரை – தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011-ல் பயன்பாட்டுக்கு வந்தது. சாலை ஒப்பந்த அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் மற்றும் நெடுஞ்சாலை நடுவில் (சென்டர் மீடியன்) செடிகள் நட்டு பரமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். ஆனால், அதுபேன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக கடந்த 2023-ல் தனியார் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டது. மதுரை – தூத்துக்குடி சாலையில் சுங்கச் கட்டண வசூல் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் நெடுஞ்சாலையை பராமரிக்க ரூ.563.83 கோடி செலவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செலவிடப்படவில்லை. அதே நேரத்தில் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சாலை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மாதம் சுங்கக் கட்டணமாக ரூ.11 கோடி வசூல் செய்யப்படுகிறது. இதில் ரூ.30 லட்சம் மட்டுமே பராமரிப்பு பணிக்கு செலவிடப்படுகிறது. இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை வாகன ஓட்டிகள் பெறவில்லை.
எனவே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள், நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் வாகன ஒட்டிகளிடம் 30 சதவீத சுங்க கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு இன்று (ஜூன் 3) விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாகச் செய்யும் வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.