• Mon. Jun 2nd, 2025

24×7 Live News

Apdin News

மதுரை மாநகராட்சியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ‘வார்டு எண்’ குளறுபடிகளுக்கு தீர்வு | resolves irregularities in birth and death certificates after 14 years in Madurai Corporation

Byadmin

May 28, 2025


மதுரை: மதுரை மாநகராட்சி விரிவாக்கம் நடைபெற்ற 14 ஆண்டுகளுக்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் நீடித்த ‘வார்டு எண்’ குழறுபடிகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் முதல் முறையாக இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களில் அவர்கள் குடியிருக்கும் வார்டு எண்கள் குறிப்பிட்டே வழங்கப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பிறகு 1971-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் மாநகராட்சி என்ற பெருமையை பெற்றது மதுரை. ஆரம்ப காலத்தில் மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகளும், 4 மண்டலங்களும் மட்டுமே இருந்தன. கடந்த 2011-ம் ஆண்டு, ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய 3 நகராட்சிகள், ஹார்விப்பட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. வார்டுகள் எண்ணிக்கை 72 வார்டுகளில் இருந்து 100 வார்டுகளாகவும், மண்டலங்கள் எண்ணிக்கை 5-ஆகவும் உயர்ந்தது. வார்டுகளும் மறுசீரமைக்கப்பட்டு, வார்டு எண்களும் மாற்றப்பட்டன.

உதாரணமாக விரிவாக்கத்திற்கு முன் 41, 42 என குறிப்பிடப்பட்ட வார்டுகள் தற்போது 22, 29 ஆக மாறியிருக்கலாம். இந்த வார்டுகள் மறுசீரமைப்பு, மாநராட்சியின் அனைத்து துறை ஆன்லைன் சாஃப்ட்வேர்களிலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். வருவாய், நகரமைப்பு உள்ளிட்ட பிற துறைகளில் எளிதாக வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில் மாநகராட்சி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் முக்கிய நகர்நல பிரிவின் ஆன்லைன் சாப்ட்வேரில் மட்டும் இதுவரை வார்டுகள் மறுசீரமைப்பு பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தது.

அதனால், பழைய 72 வார்டுகள் அடிப்டையிலே பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் பழைய வார்டு எண்களை குறிப்பிட்டு வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அந்த வார்டுகள், மற்றொரு எண் வார்டாக அழைக்கப்படும். வார்டு அலுவலகமும், மண்டல அலுவலகமும் மாறியிருக்கும். வார்டுகள் மறுசீரமைக்கப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகும், இதுபோன்ற ‘வார்டு எண்’ குளறுபடிகளால் மக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் ஆணையாளராக சித்ரா வந்தபிறகு, வார்டு எண் குளறுபடிகளுக்கு தீர்வு காண்பதற்கு நகர்நல அலுவலர் இந்திரா மேற்பார்வையில், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் தலைமையில் புள்ளியியல் நிபுணர், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமித்தார். கடந்த 2 மாதமாக இக்குழுவினர் ஆய்வு செய்து, இன்று முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும், அவர்கள் பெற்றோர் வசிக்கும் வார்டுகள் நம்பரை குறிப்பிட்டு வழக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து உதவி நகர்நல அலுவலர் அபிகேஷக் கூறுகையில், “மேயர், ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 2 மாதமாக ஒவ்வொரு வார்டிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புதிதாக தொடங்கிய மருத்துவமனைகள் பட்டியலை எடுத்து, அந்த மருத்துவமனைகள் அமைந்துள்ள தெரு, வார்டுகள் விவரத்தை எடுத்து, நகர்நல ஆன்லைன் சாப்ட் ஃவேரில் பதிவேற்றம் செய்தோம்.

அதற்கு மாநில சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட சுகாதார அலுவலர் ஒப்புதல் வழங்கி இன்று முதல் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெற்றோர் வசிக்கும் வார்டு எண்களை குறிப்பிட்டே பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முன்பு, பழைய வார்டு எண் குறிப்பிட்டு வழங்கப்பட்டதால், குழந்தை வசிக்கும் இடம் ஒரு வார்டு, சான்றிதழ் வழங்கப்பட்ட இடம் மற்றொரு வார்டாக இருக்கும்.

அதனால், பெயர், முகவரி போன்ற திருத்தம் செய்வதற்கும், சான்றிதழ்கள் சமர்பிக்கும் இடங்களிலும் பல்வேறு குழப்பங்களும், தாமதங்களும் ஏற்பட்டு வந்தன. தற்போது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழ்களும் இந்த நடைமுறையிலே இன்று முதல் வழங்கப்படுகின்றன, ’’ என்றார்.



By admin