• Sat. Jun 7th, 2025

24×7 Live News

Apdin News

மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: காவல் துறை நடுநிலை வகிக்க உயர் நீதிமன்றம் அறிவுரை | Madurai Murugan devotee conference permission: HC instructs police

Byadmin

Jun 6, 2025


மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், போலீஸார் அரசியல் சார்பு இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. இந்த தற்காலிக அறுபடை வீடுகளில் ஜூன் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், ஜூன் 22-ல் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்ட தனிநபரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அம்மா திடலில் பல்வேறு கட்சியினர் மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முருக பக்தர்கள் மாநாடு, அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து ஜூன் 4-ல் மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டுக்கு 10 நாள் முன்பிருந்து மாநாடு நடைபெறும் வளாகத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரி அமைப்புக்குள் அமைத்து வழிபாடு நடத்தினால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு பரிசீலனையில் உள்ளது.

மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு தொடர்பாக சில கேள்விகளுக்கு பதில் கேட்டுள்ளோம். அதற்கு மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் சில வினாக்களை கேட்டு உள்ளோம். அதற்கு இப்போது வரை பதில் வரவில்லை. அந்த மனு மீது 9-ம் தேதி தான் முடிவெடுக்கப்படும். தற்போது அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறப்பட்டது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக்கேய வெங்கடாச்சலபதி வாதிடுகையில், “மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைத்து காலை, மாலையில் 2 மணி நேரம் வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க உள்ளோம். அதற்காக முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் தயாராக உள்ளது. மாநாட்டு வளாகத்துக்கு வந்த போலீஸார் அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்கக் கூடாது என பணியாளர்களை மிரட்டியுள்ளனர்,” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் ஏற்கெனவே பல மாநாடுகள் நடைபெற்று உள்ளது. தற்போது அனுமதி மறுப்பது ஏன்? அங்கு அறுபடை வீடுகளின் மாதிரி அரங்கு அமைத்து வழிபாடு நடத்த உள்ளனர். அதற்கு அனுமதி மறுக்க போலீஸார் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. போலீஸார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்படக் கூடாது. மனு குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.



By admin