• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி | Madurai Muruga devotees’ conference: HC allowed to set up Arupadai veedu and conduct puja

Byadmin

Jun 13, 2025


மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கும், மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜைகள் நடத்தவும் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர். இதையடுத்து மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கவும் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதிரி அறுபடை வீடுகளுக்கு 3 நாட்களுக்கு அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டது. இந்து முன்னணி தரப்பில், “முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிபந்தனைகளில் மாநாட்டுக்கு பைக்கில் வரக்கூடாது, வாகனங்களில் மாநாட்டுக்கு வர உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது உட்பட 6 நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் உள்ளன. இதனால் இந்த நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும்,” எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளது. அதில் 6 நிபந்தனைகளுக்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் மாற்றியமைக்கப்படுகிறது. ஆன்மிக நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக முன்னெடுக்காமல் நிபந்தனைகளை பின்பற்றி மாநாட்டை நடத்த வேண்டும்,” என உத்தரவிட்டார்.

காவல் துறையின் நிபந்தனைகள் என்னென்ன? – முன்னதாக காவல் துறையினர் தரப்பில் கூறும்போது, “இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது. தமிழகத்திலுள்ள மண்டலங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு வண்ண நிறத்தில் அனுமதி பாஸ்கள் வழங்க வேண்டும். தனித்தனி பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். விஐபிக்கள், மேடையில் பங்கேற்பவர்களுக்கென பிரத்யேக பார்க்கிங் வசதிகளை உருவாக்க வேண்டும். போதிய வழிகளை அமைக்க வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்கும் ஆண், பெண்களுக்காக மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கவேண்டும். கழிப்பறைகள், மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்த வேண்டும். மாநாட்டு மேடை மற்றும் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். பார்க்கிங்கில் நிறுத்திய வாகனங்களை தன்னார்வலர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து எத்தனை வாகனங்கள் வருகின்றன என்ற பட்டியல் வழங்க வேண்டும். மீட்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

மாநாடு நடக்கும் இடத்துக்கு மாநகராட்சியிடம் இருந்து முறையான அனுமதியை பெறவேண்டும். மாநாடு பகுதியில் வழங்கும் உணவுகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அனுமதி தேவை, பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கர்ப்பிணி, முதியவர்களை தவிர்க்க வேண்டும். மாநாட்டு திடலில் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைக்க, முறையாக சம்பந்தப்பட்ட கோயில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முன் அனுமதியை பெறவேண்டும், ரிங்ரோடு என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல், காவல் துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை விதித்துள்ளோம்.

இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் பணிகளை நிறைவேற்றி அதற்கான விவரங்களை காவல் துறையிடம் ஜூன் 18-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். இது தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். மக்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை கருதியே இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன” என்று அவர்கள் கூறினர்.



By admin